Dec 26, 2008

அந்த `அலாதி’யான நட்பு!



குமுதம் ஆசிரியரான மறைந்த எஸ்.ஏ.பியின் புதல்வரும், தற்போது குமுதம் இதழின் கெளரவ ஆசிரியருமான திரு ஜவஹர் பழனியப்பன் சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பு 31.12.2008 இதழ் குமுதத்தில் `கலைஞருடன் ஒரு காஃபி’ என்கிற தலைப்பில் அட்டைப்படக்கட்டுரையாக வெளிவந்தது. இந்த சந்திப்பைப் பற்றி சொல்லும்போது, `கலைஞரை நம்பி தமிழ்நாடு மட்டுமல்ல, தமிழனமே இருக்கிறது’ என்றார். அப்போது முதல்வர்,` எனக்கும் எடிட்டர் எஸ்.ஏ.பிக்கும் உள்ள நட்பு அலாதியானது’ என்றார்.

இந்த `அலாதியான’ நட்பு எப்படி என்று பார்ப்போம். எடிட்டர் எஸ்.ஏ.பி என்கிற தலைப்பில் அவருடன் சுமார் நாற்பதாண்டுகள் ஆசிரியர் இலாக்காவில் பணியாற்றிய ரா.கி.ரங்கராஜன், ஜா.ரா. சுந்தரேசன்(பாக்கியம் ராமசாமி), புனிதன் ஆகியோர் ஒரு புத்தகம் எழதியிருக்கிறார்கள். அதில் ரா.கி.ரங்கராஜன்,(இவர் குமுதம் வார இதழின் முன்னாள் இணையாசிரியர்)``ஒரு சமயம் கலைஞர் கருணாநிதியின் கதையைத் தொடராக குமுதத்தில் பிரசுரித்து வந்தோம்.(இத்தனைக்கும் அவருடைய பத்திரிகையில் ஏற்கெனவே வெளியான கதைதான்). அவருடைய எழத்தை வெளியிடுவதால் திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் பத்திரிகை அடிமைப் பட்டுவிட்டது என்று வாசகர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதாலும், உள்ளபடியே எடிட்டருக்கு அந்த கட்சியின் போக்கு பிடிக்காததாலும், அதை விமரிசித்துத் தலையங்கமும் கார்ட்டூன்களும் வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

இதனால கோபங்கொண்ட கலைஞர் தன் கதையை இனி வெளியிட வேண்டாம் என்று அறிக்கை விடுத்து எழதுவதை நிறுத்திக்கொண்டுவிட்டார்.

அதன்பிறகு அவரைத் தாக்குவது மிகவும் சுலபமாகிவிட்டது எடிட்டருக்கு. முன்னைக்காட்டிலும் காரசாரமான தலையங்கங்களும் கார்ட்டூன்களும் வெளியிடத் தொடங்கினார்.திமுக ஆட்சியை விட்டு இறங்கியதில் ஒரு பெரும்பங்கு எடிட்டருக்கு உண்டு என்று கூடச் சொல்லலாம்.

அவருடைய கட்சித் தொண்டர்கள், அலுவலகத்தின் முன் நின்று பத்திரிகைகளைக் கொளுத்தினார்கள். பெரிய கல்லை எடுத்து வீசினார்கள். எடிட்டரின் அறை முன்பக்கம் இருந்ததால் ஒரு பெரிய கல், ஜன்னல் கண்ணாடியைப் உடைத்துக்கொண்டு எடிட்டரின் காலின் கீழே வந்து விழந்தது.

`நீங்கள் வேறு பக்கமாய் இருங்கள்’ என்று நாங்கள் சொல்லியும் `பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டு இடத்தைவிட்டு எழந்திராமலே இருந்தார்.

கட்டடத்தின் கேட்டில் ஒரு பக்கம் ` தேவி பிரஸ்’ என்ற பெரிய பித்தளைப் பலகையும் இன்னொரு பக்கம் `குமுதம்’ என்ற பெரிய பித்தளைப் பலகையும் பொருத்தப்பட்டிருந்தன. ஆர்பாட்டக்காரர்கள் சுவரை இடித்து அந்தப் பலகையைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
`வேறு போர்டு வைத்துவிடலாம்’ என்று நாங்கள் சொன்னோம்.`` வேண்டாம்.. அப்படியே இருக்கட்டும். நம் பத்திரிகைக்குப் போர்டு வைத்துத்தான் பெயர் வரவேண்டும் என்ற தேவை இல்லை’’ என சொல்லி விட்டார். பெயர்த்த இடத்தை சிமெண்ட் பூசி அடைத்தோம். இதை எழதும்வரையில் `குமுதம்’ என்ற போர்டு வாசலில் இல்லாமலே இருக்கிறது. ‘

எஸ்.ஏ.பி ஆசிரியராக இருக்கும்வரையில் அவருடைய `அரசு’ கேள்வி பதில்கள் மிகவும் பிரபலம். அண்ணாமலை, ரங்கராஜன், சுந்தரேசன் இந்த மூன்று பெயர்களின் சுருக்கம்தான் `அரசு’ என்று பேசிக்கொள்வார்கள். ஆனால் கேள்வி- பதிலை’ எஸ்.ஏ.பி மட்டும்தான் எழதி வந்தார்.அந்த கேள்வி பதில்களின் ஒரு சிறிய அளவு தொகுப்ப்பாக தமிழ் புத்தகாலயம் வெளியிட்டது. இந்த பதிப்பகத்தை நடத்தும் அகிலம் கண்ணன், மறைந்த எழத்தாளர் அகிலனின் புதல்வர். அந்த கேள்வி பதில்களிலிருந்து எடிட்டர் எஸ்.ஏ.பி. கலைஞர் கருணாநிதியின் ` அலாதி’ யான நட்பை புரிந்து கொள்ளலாம்.

வி.ராமகிருஷ்ணன், செங்கோட்டை.

கருணாநிதியை இக்கால சாணக்கியர் என்று கூறுவது பொருத்தமாகுமா ?

பாக்கியையும் சொல்லிவிடுங்கள். நெடுஞ்செழியன் தான் இக்கால கெளதம புத்தர்,மாதவன் தான் மகா அலெக்சாந்தர், சத்தியவாணிமுத்துதான் ஒளவையார்.

ஆர். சங்கர். செங்கோட்டை

வருகின்ற தேர்தலில் மறுபடியும் திமுக வெற்றி பெற்றுவிட்டால் என்ன செய்வீர்கள் ?

ஒற்றைக் காதோடு நடமாட வேண்டியதுதான்.

பி.கே. பாண்டியன்,பழவேற்காடு

`நாங்கள் கருணாநிதியின் வீட்டில் புகுந்தாலும், பின்பு என்ன நிகழ்ந்தாலும் சாட்சி சொல்ல யார் இருக்கிறார்கள் ?’ என்று புரட்சித் தலைவர் கூறியுள்ளாரே?

பொறுப்பற்ற, அசிங்கமான பேச்சு. ஆனால் எதிரிகளை வன்முறையாகத்தாக்கும் விஷயத்தில் ஒன்றை கவனீத்தீர்களா? எம்.ஜி.ஆர் மிரட்டுவார், செய்வதில்லை. கலைஞர், மிரட்டுவதில்லை, செய்துவிடுகிறார்.

செ. வேதமூர்த்தி, அத்தாணி

முரசொலியில் தொடர்ந்து வரும் `குமுதா & கோ’ கார்ட்டூன் பற்றித் தங்கள் கருத்து என்ன ?

புகழிலும்,புத்திக்கூர்மையிலும், நாவன்மையிலும், நிர்வாகத் திறமையிலும், அந்தஸ்திலும், செல்வத்திலும் குமுதம் ஆசிரியரையும், வெளியீட்டாளரையும் விட கலைஞர் பன்மடங்கு உயர்ந்தவர். அவரைக் கள்வராகவும், ஜேப்படிக்காரராகவும் கார்ட்டூன் போடக் குமுதத்துக்குத் துணிவிருந்தால், அவர்களைப் பன்றிகளாகச் சித்திரித்து முரசொலி ஏன் மகிழக்கூடாது என்பது என் சொந்த அபிப்ராயம்.

இ.வியாகுலராஜ், திருச்சி.

நீரும், நானும் `சாமானியர்’களாவது எப்போது ?

கோடிஸ்வரர்கள் ஆகும்போது.

கி. கோதை, சேலம்.

``கேள்வி-பதில் பகுதி ரெடியாயிடுத்தா?’’
``கேள்விங்கள்ளாம் எழதிட்டேன். பதில்கள்தான் பாக்கி’’ - இந்த ஆனந்த விகடன் கிண்டலை பார்த்தீர்களா ?
இலக்கு: கோபாலபுரம், கீழ்ப் பாக்கம் அல்ல

`குமுதம்’ அலுவலகம் இருக்கும் பகுதி கீழ்ப்பாக்கம் என்பது வாசகர்கள் கவனத்திற்கு !

Dec 25, 2008

இப்படியும் இருந்தார்கள்!


என்னவோ இந்த வாரம் சிலரை நினைப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இன்றைக்கு கிறிஸ்துமஸ் தினம் கூடவே மூதறிஞர்,இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், சென்னை ராஜதானியின் முதல் அமைச்சராக இருந்த ராஜாஜியின் நினைவுநாள். 1972 டிசம்பரில் இதே நாளில் அவர் மறைந்தார்.

இந்திய சுதந்திர சரித்திரத்தில் மறைக்கப்பட்ட,மறக்கப்பட்ட பல தென்னிந்தியர்களில் அவர் முக்கியமானவர். இங்கே பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் பூர்ண மதுவிலக்கு வேண்டுமென்று தன் கூட்டணி சகாவான ஆளும் திமுக அரசை மிரட்டிக்கொண்டிருக்கிறார்.ஆனால் தமிழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்த சாதனையாளர் தமிழக முதல்வர் கருணாநிதிதான் என்பது டாக்டருக்கு தெரியாததல்ல.

மதுவிலக்கை ரத்து செய்யப்போகிறார் கருணாநிதி என்றவுடன் அவருடைய கோபாலபுரம் வீட்டிற்கே சென்றார் ராஜாஜி.தலைமுறைகளையே அழிக்கப்போகும் இந்த காரியம் வேண்டாம் என்று கருணாநிதியிடம் கெஞ்சினார் ராஜாஜி.ஆனால் அடுத்த நாளே`முனிபங்கவரின் கால்களெல்லாம் இப்போது கோபாலபுரத்திற்கு யாத்திரை வருகின்றன’ என்று அன்று கருணாநிதி கேலி பேசினார். இம்முறை இவர் முதல்வரானபின் புட்டபர்த்தி சாய்பாபா இவருடைய கோபாலபுர வீட்டிற்கு வந்தபோது கருணாநிதி இப்படி பேசவில்லை. ஒரு தலைமுறை சீரழிவை தடுக்க வந்த ராஜாஜி குறித்து அன்று அப்படி பேசினார் கருணாநிதி.

இதைவிட வேடிக்கை, இன்று டாக்டர் ராமதாஸ் நடத்தவேண்டிய இந்த போராட்டத்தை உண்மையில் செய்ய வேண்டியவர்கள் காங்கிரஸ்காரர்கள்தான்.உண்மையான காங்கிரஸ்காரர்கள் என்ன செய்தார்கள் என்பதற்கு ராஜாஜியின் வாழ்க்கையை கொஞ்சம் திரும்பித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

1929ல் அவர் தீவிர மதுவிலக்கு பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக தனக்கு இரு தளங்களை அமைத்துக்கொண்டார் ராஜாஜி.முதலில் இந்திய மதுவிலக்குச் சங்கத்தின் கெளரவப் பொது செயலாளரானார். அடுத்து காங்கிரஸ் கட்சியின் மதுவிலக்கு பிரச்சார பொறுப்பும் அவரிடம் வந்தது. அதனால் அவருக்கு இரண்டு தளங்கள் கிடைத்தது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த சட்டசபையிலும், வெளியேயும் எல்லாவித முயற்சிகளும் செய்யப்படவேண்டுமென்று அப்போது கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில் மதுக்கடை மறியலும் ஒரு திட்டமாக இருந்தது. மதுவிலக்கிற்காக ராஜாஜி தயாரித்த ஒரு தேசியத் திட்டம் காங்க்ரஸ் நிர்வாகக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த திட்ட் செயல்பாட்டில் டாக்டர் அன்ஸாரி, வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி ஆகியோர் ஒரு குழவாக செயல்பட்டார்கள்.

இந்த திட்டபடி ஒவ்வொரு ராஜதானியிலும் காங்கிரஸில் ஒரு மதுவிலக்குக் குழ இருக்கும். ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு மதுவிலக்கு நிர்வாகி இருப்பர் இந்த சபைகள் கள்ளுக்கடை மறியல் செய்யலாம், மதுவிலக்கு லைசன்ஸ் வழங்கும்போது ஏலத்தில் பங்கு கொள்ள வேண்டாமென்று கடைக்காரர்களை தடுக்கலாம். இப்படியெல்லாம் காங்கிரஸ் அன்று செயல்பட்டது. மதுவுக்கு எதிரான சத்தியபிரமாணங்களை தயாரித்தார். பாடல்கள் இயற்றினார்; கொடி ஒன்றை உருவாக்கினார்; ஆர்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார்.

இதையெல்லாம் அவர் காங்கிரஸில் இருந்தபோது ராஜாஜி செய்தார். அப்போது காங்கிரஸ் ஒரே கட்சியாக இருந்தது. இப்போது போல், டெல்லிக்கு ஒரு பத்து இருபது எம்பிக்களை அனுப்புகிற கிளை அலுவலகமாக தமிழக காங்கிரஸ் இருக்கவில்லை.

Dec 24, 2008

விந்தை மனிதர்



இன்று அதாவது டிசம்பர் 24 பல முக்கியங்களை கொண்ட நாள்.முதல் முதலாக அமெரிக்க விண்வெளி வீரர்கள் 1968 டிசம்பர் 24ந் தேதிதான் சந்திரனில் கால பதிக்க முடியும் என்பதை உறுதி படுத்திவிட்டுத் திரும்பினார்கள்.பிராங்க் போர்மென்,ஜெம்ஸ் லோவல்,வில்லியம் ஆண்டர்ஸ் இந்த மூவரும்தான் முதலில் சந்திரனின் இருண்ட பகுதியைப் பார்த்துவிட்டு திரும்பினார்கள்.அதற்குப் பிறகு தான் 1969 ஜீலை 20ந் தேதிதான் நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் கால் பதித்தார்.

1994ம் ஆண்டு இதே நாளில் நான்கு தீவிரவாதிகள் ஏர் பிரான்ஸ் விமானத்தை கடத்தினார்கள். கடத்திய நான்கு இளைஞர்களும் இஸ்லாமியர்கள்.1979ல்தான் சோவியத் ரஷ்யாவிற்கு `சனி திசை' ஆரம்பமானது. ரஷ்ய துருப்புகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்தது. அந்த படையை விரட்ட அமெரிக்க எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், இன்றும் அமெரிக்கர்கள் அந்த புதை மணலிலிருந்து தங்கள் கால்களை எடுக்க முடியவில்லை. தீவிரவாதத்தின் தலைநகராக இந்த பகுதி இப்போது மாறிவிட்டது.

இந்த நாளில் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி இப்போது நாம் ஏன் கவலைப்படவேண்டும்.நம் ஊர் விஷயத்திற்கு வருவோம்.இன்றைக்கு விந்தை மனிதர் மக்கள் திலகம்,புரட்சித்தலைவரென்றெல்லாம் அழைக்கப்பட்ட எம்.ஜீ.ஆரின் நினைவு நாள். இன்றைக்கு நினைவில் இருக்கிறது. முதல் நாள் டிசம்பர் 23ந் தேதி, இரவு 10 மணியிருக்கும். நண்பரும், திரைப்படத்தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு என்னைத் தொலைபேசியில் அழைத்தார். ` உனக்கு ஒரு விஷயம் தெரியும. மக்கள் திலகம், கொடை வள்ளல் எம்.ஜீ.ஆரை நாம் இழந்துவிட்டோம். இன்னும் அதிகாரபூரமான செய்தி வரவில்லை. விசாரித்துத் தெரிந்து கொள்' என்றார். அப்போது நான் ஜீனியர் விகடனின் தலைமை நிருபர். உடனே களத்தில் இறங்கினேன். அப்போது ஐஏஎஸ் அதிகார் கற்பூரசுந்தர பாண்டியன், தமிழக அரசின் செய்தித் துறை செயலர். அவர் புதிதாக திநகர் கிருஷ்ணா தெருவில், இயக்குனர் பாரதிராஜா வீட்டிற்கு எதிரே குடிவந்திருந்தார். அவருக்கு தொலைபேசி இணைப்பு வராத நேரம். பாரதிராஜா வீட்டு தொலைபேசியைத்தான் பயன்படுத்தி வந்தார். அப்போது இயக்குனர் பாரதிராஜா, எம்.ஜீ.ஆரின அதிகாரபூர்வமற்ற திரையுலக கொள்கை பிரசார பீரங்கியாகவே இருந்துவந்தார்.

உடனே நான் பாரதிராஜாவை தொலைபேசியில் அழைத்தேன். அவரது போன் தொடர்ந்து பிஸியாகவே இருந்தது. அந்த நேரத்தில் பாரதிராஜா தொலைபேசியில் அத்தனை நேரம் பேசமாட்டார் என்பது எனக்குத் தெரியும்.வெகுநேரம் கழித்து இணைப்பு கிடைத்தது. `ராமாவரம் தோட்டத்தில் என்ன நடக்கிறது ?' என்றேன். சொல்லத் தயங்கினார், நானே தொடர்ந்தேன்,` இந்த நேரத்தில் உங்கள் தொலைபேசி பிஸியாக இருக்காது. உங்கள் எதிர்வீட்டுக்காரர் செய்தித்துறை செயலர் உங்கள் போனை பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என்றால் என்ன நடக்கிறது ?' என்றேன். அதற்கு மேல் பாரதிராஜாவால் விஷயத்தை மறைக்க முடியவில்லை. ஒப்புக்கொண்டார். அப்போது மணி இரவு பதினொன்று. உடனே நான் அப்போதைய அமைச்சர்கள் அரங்கநாயகம், திருநாவுக்கரசு,,நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த ஆலடி அருணாவிற்கு இந்த தகவலை சொன்னேன். அவர்க்ள் பறந்தடித்துக்கொண்டு தோட்டத்திற்கு ஒடினார்கள். இரவு ஒரு மணிக்கு எம்.ஜீ.ஆர் மறைந்த செய்தியை அமைச்சர் திருநாவுக்கரசர் உறுதி செய்தார்.

ஆனால் அதிகாரபூர்வமாக எம்.ஜீ.ஆர் மறைந்த நேரம் விடியற்காலை 3.30 மணி என்றுதான் இன்றும் இருக்கிறது. அந்த இரவில் அந்த தோட்டத்தில் நடந்ததெல்லாமே `ரகசியம் பரம ரகசியம்' எம்.ஜீ.ஆர் உடலை முதல் மாடியிலிருந்து கீழே கொண்டுவரும்போது லிப்ட் பழதாகி நின்றது. அவரது உடலை வெளியே கொண்டுவருவதற்கு முன் அந்த முகத்துக்கு கறுப்பு கண்ணாடியும், தொப்பியும் அணிவித்தவர் இயக்குனர் பாரதி ராஜா.இந்த செய்திகள் எல்லாமே ஜீனியர் விகடனில் மட்டுமே வெளிவந்தது. பின்னார் அரசியல் சூழல்கள் மாறியபோது, அன்றைய இரவு முழவதும் அந்த வீட்டு லிப்ட் தொடர்ந்து எதற்காக பயன்படுத்தப்பட்டது என்று சிபிஐ அதிகாரிகள் பின்னாளில் என்னிடம் விசாரணை நடத்தியது வேறு விஷயம்.

அன்று அந்த வள்ளலால் வாழ்வு பெற்று, அரசியல் முகவரி பெற்றவர்கள் பலர் இப்போது திமுக தலைவர் கருணாநிதியுடன் இருக்கிறார்கள். உள்ளூர விரும்பாவிட்டாலும் கூட இன்றும் அவரை புறக்கணித்துவிட்டு அரசியல் நடத்த முடியாது என்கிற நிலைதான அதிமுகவிற்கும் உள்ளது. எம்.ஜீ.ஆர். இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்பும் பல கிராமத்து விசுவாசிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர் இறந்து ஐந்து ஆண்டுகள் கழித்து அவரை எம்.ஆர். ராதா சுட்ட வழக்கை நான் தினமணி கதிரில் நான் தொடராக எழதினேன். அது கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, நேற்று கூட இலங்கையிலிருந்து ரமேஷ் என்கிற ஒரு வாசகர் அந்த புத்தகத்தை இலங்கை புத்தகக் கண்காட்சியில் வாங்கி படித்துக்கொண்டிருப்பதாக தொலைபேசியில் சொன்னார்.

அடிப்படையில் நான் சிவாஜி ரசிகன். எம்.ஜீ.ஆர் இருக்கும்போது தொடர்ந்து அவரது அரசுக்கு எதிராக எழதி வந்தவன்.இதனாலேயே அந்த கால கட்டத்தில் கருணாநிதியின் `குறுகிய கால' அன்பைப் பெற்றவன். ஆனாலும் அவரைப் பற்றிய புத்தகம் இன்றைக்கும் எனக்கு மரியாதையை தேடிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதுதான் எம்.ஜீ.ஆர் என்கிற மூன்றெழத்தின் மந்திரம்.

மனித உள்ளங்கள்தான் பெருங்கோவில் என்றார் வள்ளலார். அப்படியானால் எம்.ஜீ.ஆருக்குத்தான் எத்தனை லட்சம் கோவில்கள்!

Dec 20, 2008

`தர்ம’ தாய்


என்றக்கும் போல்தான் அன்றைக்கும் காலையிலேயே அலுவலகம் போயிருந்தேன். `SURE SUCCESS'அலுவலகத்தில் எனக்கும் ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கல்வியாளர்கள். நானோ படிக்காத தற்குறி. அந்த நிறுவனம் வருடந்தோறும்,சென்னை மேற்கு மாம்பலம் அகோபில மடம் பள்ளியின் தலைமையாசிரியர் திரு டி.எம்.எஸ்.(அவரைப் பற்றி ஏற்கெனவே மாண்புமிகு மனிதர்கள் பகுதியில் எழதியிருக்கிறேன்) அவர்களை கொண்டு ஆங்கில மீடியம் +2 மாணவர்களுக்கு ஒரு கணித கையேடு தயாரித்து, ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கொடுத்து வருகிறது. சென்ற வருடம் மட்டுமே 5,500 மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.பெரிய முதலாளிகளோ, அரசின் உதவியோ இல்லாமல் இந்த காரியத்தை செய்வது மிகவும் கடினம். சாதாரண நடுத்தர மக்களிடம் வாங்கியே இந்த காரியத்தை சாதித்தார்கள்.இதைத்தான் இந்த நிறுவனம் செய்து வருகிறது.

இந்த அலுவலகத்தில் நுழைந்த போது, வாசலிலிருந்த காவலாளி ` சார், ஒரு அம்மா, காலையிலிருந்தே உங்க அலுவலகத்தில யாரையாவது பாக்கணும்னு காத்திருக்காங்க’ அந்த பெண்மணி இருந்த இடத்தை காட்டினார்.வறுமையை பறைசாற்றும் உடை, தோற்றம். அந்த பெண்மணிக்கு நடுத்தர வயது. மற்றவர்கள் வராததால் அவரை வரவேற்பறையில் உட்காரச் சொன்னேன்.அவர் மற்றவர்களுக்காக காத்திருக்கவில்லை. தன் இடுப்பிலிருந்து ஒரு சுருக்கு பையை எடுத்து என் முன்னிருந்த மேஜை மீது வைத்தார். பிரித்தார். அதில் சில்லறையாகவும், நோட்டாகவும் இருந்த காசுகளை கொட்டினார். அவரது இடது கையில் சென்ற வருடம் இந்த நிறுவனம் கொடுத்த கணிதக் கையேடு.`ஐயா, எனக்கு இரட்டை பிள்ளைங்க. ஒண்ணு பொண்ணு, ஒண்ணு பையன். இரண்டும் போன வருஷம் +2 பரீட்சை எழதினாங்க. அவங்க படிக்கிற பள்ளிக்கு வந்து நீங்க புஸ்தகம் கொடுத்தீங்க. இரண்டு பேரும் நல்ல மார்க் வாங்கி அவங்க தகுதியிலேயே அண்ணா பல்கலைக்கழகத்தில இடம் கிடைச்சிருச்சு. நான் வேலை பாக்கற வீட்டுல அவங்க எங்க பிள்ளைங்க மார்க்கை பாத்துட்டு மேலே படிக்க வைக்கிறதா சொல்லிட்டாங்க.எங்க பிள்ளைங்களுக்கு கணக்குல நல்ல மார்க். அதுக்கு இந்த புஸ்தகம்தான் காரணம்னு சொல்றாங்க.இந்த தர்ம காரியத்தை நிறுத்திடாதீங்க. வருஷா வருஷம் கொடுங்க. என் பிள்ளைங்க மாதிரி எத்தனை குழந்தைங்க இருக்கும். இதில ஐயாயிரம் ரூபாய் இருக்குங்க. இப்போதைக்கு என்னால இவ்வளவுதான் இருக்கு. என் பிள்ளைங்க நல்ல வேலைக்கு போனா நிறைய கொடுப்பேன். இது சத்தியமுங்க’ சொல்லும்போதே நெகிழ்ந்தார்.

அவருடைய வருமானத்திற்கு அந்த பணம் லட்சங்களுக்கு சமம்.அந்த பணத்தை கூட தன் நகைகளை அடகு வைத்து கொடுத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன்.தனக்கு விளம்பரமோ, பெயரோ தேவையில்லை என்று சொல்லிவிட்டு போனார்.

மனிதர்களின் மேன்மை பணத்தினாலும், புகழினாலும் வருவதில்லை என்பதை புரிய வைத்தார். என் அலுவலக நண்பர்களிடம் சொன்னேன். `புத்தக தானத்தை நிறுத்தாதீர்கள். அடுத்த வேளைக்கு சோறில்லாத பெண்ணே செய்யும்போது, பல நல்ல உள்ளங்கள் செய்ய மாட்டார்களா ?’ என்றேன். தயக்கத்தோடு ஏற்றுக்கொண்டார்கள்.

அவர்களுக்கே திகைப்ப்பு! சென்றவிடமெல்லாம் தங்களால் முடிந்ததை மனிதர்கள் இந்த தானத்திற்கு உதவ முன் வருகிறார்கள்.எனக்கு தெரிந்தவரையில் வெளியே தெரிந்த நபர்கள் அளித்த நன்கொடை என்பது முதலில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா. கங்கா பவுண்டேஷன் செந்தில்.கோவை நண்பர் ராதாகிருஷ்ணன்,ஜெய மாருதி சாரிடபிள் ட்ரஸ்ட், டென்த் பிளானட் குமரன், அரசியல் பிரமுகர் கெளரிசங்கர், அடையாறு அருணாசலம், மதன் மோகன் என்று மனிதர்கள் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

இதில் `திருட்டுப் பயலே’ `சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் சென்ற வருடம் ஆயிரம் புத்தகங்களுக்கு பணம் கொடுத்தார். இந்த வருடம் இரண்டாயிரத்துக்கும் பணம் கொடுத்துவிட்டார். தமிழகம் முழவதும், மாநகராட்சி, முனிசிபில், ஏய்டட் பள்ளிகளில் படிக்கும் ஆங்கில மீடியம் ஏழை குழந்தைகளின் எண்ணிக்கை 18,000 அத்தனை பேருக்கும் இந்த தானம் சாத்தியமா என்பது தெரியவில்லை.

`எங்களுக்கு சாதாரண, படிப்பின் மேன்மை தெரிந்த நடுத்தர மக்கள் அவர்களால் இயன்றதைக் கொடுக்கட்டும். ஒரு புத்தகத்தின் விலை 95.அலுவலகத்துக்கு வந்த ஏழைத் தாயினால் ஐம்பது புத்தகங்களுக்கு கொடுக்க முடிகிறதென்றால், மற்றவர்களால் முடியாமலா போகும்.’ என்கிறார்கள்.

` என்னால் முடிந்ததை செய்கிறேன். கூடவே முடிந்தவர்கள் ஒரு பத்து பேரையாவது அறிமுகம் செய்கிறேன்’ என்று சொன்னேன்.

ஒரு நல்ல காரியம் தொடர இந்த வருடம் தூண்டிய அந்த பெண்மணிதான் என்னைப் பொருத்தவரையில் `தர்ம’தாய்

Dec 19, 2008

இடைவேளைக்கு பிறகு நான்


ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு வலைப்பின்னலுக்குள் வந்திருக்கிறேன். நடுவில் zee தொலைக்காட்சியில் தினமும் காலை 8.30லிருந்து 9 மணிவரை நானும் பத்திரிகையாளர் ஜென்ராம் அவர்களும் சேர்ந்து முதல் குரல் என்கிற அரசியல் நிகழ்ச்சி நடத்தத்துவங்கி இன்றோடு இரண்டு மாதங்கள் ஆறு நாட்கள் ஒடிவிட்டது. காலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அலுவலக அவசரத்தில் காலையில் பார்க்க முடியாமல் போகும் நேயர்களுக்காக அன்றிரவே இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது.

இது தவிர சனி, ஞாயிறு இரு தினங்களும் இரவு 9.30 மணிக்கு தமிழர் பார்வை என்கிற நிகழ்ச்சியின் நான் காணும் நேர்காணல்கள் ஒளிபரப்பாகிறது. அன்றாட நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி அரை மணி நேரம் என்றாலும் அதற்கான ஆயத்தங்கள் நிறையவே தேவைப்படுகிறது.

வலைப்பின்னலில் இந்த இடைவேளை கூட நான் என்னை புதுப்பித்துக் கொள்ள அல்ல இல்லாத புத்தியை இருப்பதாக நினைத்து கொஞ்சம் கூர் தீட்டிக்கொள்ள என்று நிறைய காரணங்கள் சொல்லிக்கொள்ளலாம். எது எப்படியோ மீண்டும் உள்ளே வந்துவிட்டேன். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும், நேரமும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

Sep 9, 2008

காற்றில் கரைந்த தந்தி


அது ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். சினிமாவில் நிறைய படித்த, ரசனையுள்ள, சங்கீதம் ஞானம் கொண்டவர்கள் இருந்தார்கள். அப்ப்டி ஒருவர்தான் ஏ.பி. நாகராஜன். அவர் இல்லையென்றால், உடலால் மறைந்தாலும், கானத்தால் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் குன்னக்குடி வைத்தியநாதன், தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கமாட்டார்.

முதலில் மாடர்ன் தியேட்டர்ஸில் இசையமைப்பாளர் ஜி.ராமநாதனிடம்தான் குன்னக்குடி வயலின் வித்வானாக சேர்ந்தார். தன் சமயோஜிதத்தால் ராமநாதனிடம் சேர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.அவர் முன் வயலின் வாசித்துக்காட்டுவதற்கு முன்பே அவருக்கு பிடித்த ராகம் சாருகேசி என்பதை தெரிந்து கொண்டார் குன்னக்குடி.சுத்தமான கர்நாடக பாணி பாடலான ஸ்வாதித்திருநாளின் `கிருபய பாலய' பாடலைத்தான் முதலில் அவருக்கு வாசித்துக் காட்டினார். அவர் ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர் அதே ராகத்தில் இசையமைத்த `மன்மதலீலையை வென்றார் உண்டோ' வை வாசித்தார். அப்படியே சேர்த்துக்கொண்டார் ராமநாதன்.

1952ல் சென்னைக்கு வந்தார். ஒரு எட்டு ஆண்டுகள் பக்க வாத்யம்தான். 1960களில் தான் வயலினுக்கு தனி அந்தஸ்து கொடுத்து வாசிக்க ஆரம்பித்தார். முதலில் தனிப்பாடல்கள் பக்தி பாடல்கள் தான் கிராமபோன் கம்பெனிகளுக்கு செய்து கொண்டிருந்தார். அப்படி அவர் இயற்றிய ஒரு பக்தி பாடல்தான் தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. அந்தப் பாடல்தான் `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்'.பூவை செங்குட்டுவனின் இந்த பாடலை பாடியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள்.

பல சமயங்கலின் என் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும்,பிரும்ம கான சபாவிலும் நாங்கள் நிறைய பேசிக்கொண்டிருப்போம்.அப்போதுதான் அந்த சம்பவத்தைஅவர் நினைவு கூர்ந்தார். 1967களில் ஒரு நாள் ஒரு சினிமா கம்பெனியின் கார் இவர் வீட்டு முன்பு வந்த நின்றது. வந்த கார் இவரை ஏ.பி.நாகராஜனிடம் அழைத்துச் செல்கிற்து.`நீங்கள் இசையமைத்த `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' பாடலை என் `கந்தன் கருணை' படத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் ' என்றார் ஏபிஎன்.

`கே.வி. மகாதேவன் சம்மதிக்க வேண்டுமே ?' குன்னக்குடி. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் மகாதேவன்.`அவர் ஒப்புக்கொண்டுவிட்டார்' என்றார் ஏபிஎன். அப்படித்தான் கந்தன் கருணையில் இந்த பாடல் இடம்பெற்று பிரபலமடைந்தது. அதாவது நல்ல இசை எங்கிருந்தாலும், அதை தேடி சேர்க்கிற ரசனை படைப்பாளிகளிடம் இருந்தது.

பிறகு பல சினிமாக் கம்பெனிகளுக்கு ஏறி இறங்கி அலைந்துதான் மிச்சம்.1969 களில் ஏபிஎன் மீண்டும் அழைத்து இவருக்கு வாய்ப்பு கொட்டுத்தார் அந்தப் படம்தான் `வா ராஜா வா'. மகாபலிபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் ஒரு சிறுவனைச் சுற்றிக்கதை. இதில் பிரபல கவிஞர்கள் யாருமே பாடல் எழதவில்லை. இந்த படத்தில் அத்தனை பாடல்களும் பிரபலம்.` பூவை செங்குட்டுவனின், ` இறைவன் படைத்த உலகையெல்லாம் மனிதன் ஆளுகிறான்' குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பாவின் `கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா' நெல்லை அருள்மணி எழதிய ` உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலை'காற்றலைகளில் பல காலம் தவழ்ந்து கொண்டேயிருந்தது.

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏபிஎன் எடுத்த படம் `திருமலை தென்குமரி' பஸ்ஸில் கோவில்களுக்கு செல்லும் பயணிகளை வைத்து படம். இதில் எல்லா பாடல்களுமே பிரபலம். கானடா, பீம்ப்ளாஸ், கல்யாணி, குந்தலவராளி ஆகியவற்றை தொடும் அரிய பாடல் சீர்காழியின் குரலில் கணிரென்று ஒலிக்கும் `மதுரை அரசாளும் மீனாட்சி'
`திருப்பதி மலை வாழம் வெங்கடேசா' `குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா' இந்தப் படத்தில் பிரபலமான பாடல்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸ் குமரியில். அங்கு ஒரு கோஷ்டி பாடல் உண்டு.` நீலக்கடல் ஒரத்திலே நிலம் கொண்டு செல்லாமல், காலம் எல்லாம் காவல் செய்யும் கன்னித்தெய்வம் குமரியம்மா' இது எல். ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல். காபரே பாடிக்கொண்டிருந்த ஈஸ்வரி கருமாரிக்கு வந்தது இப்படித்தான்.

பக்தர்களையும், சங்கீதப் பிரியர்களையும் பிரமிக்க வைத்த படம் தேவரின் ` தெய்வம்'.கர்நாடக சங்கீதத்தின் பிரபலங்களெல்லாம் இந்த படத்தில் பாடினார்கள். இதில் தான் முதல் முறையாக மதுரை சோமுவை படத்திற்கு பாட சம்மதிக்க வைத்தார் குன்னக்குடி. அடுத்த பெங்களூர் ரமனியம்மாள். ` குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்'கொட்டகையில் பெண்கள் சாமி வந்து ஆடுவார்கள். படம் வெளியான வெலிங்கடன் (இப்போது ஷாப்பிங் மால்) கொட்டகையில் ஒரு பெரிய முருகர் சிலையே நிறுவியிருந்தார் தேவர்.

இதற்கு முன்பு வந்த படம் அகத்தியர். இதில் ராவணனுக்கும், அகத்தியருக்கும் ஒரு பாட்டுப் போட்டி. அகத்தியர் சீர்காழி. ராவணன் ஆர்.எஸ். மனோகர். `வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்' டி.என்.எஸ்ஸீம், சீர்காழியும் பாடுவார்கள். இந்த பாடல் வரிக்கு வரி மாறிவரும் ராக மாலிகை.

`மேல் நாட்டு மருமகள்' சிவகுமார், கமல்ஹாசன், ஒரு அயல்நாட்டு பெண்மனி, வாணிகணபதி (கமலின் முன்னாள் மனைவி). இதில் உஷா உதூப்பை வைத்து, ஒரு பாப் பாடலை பாட வைத்து பிரபலமாக்கினார் குன்னக்குடி. தமிழ் மேதை கி.வா.ஜ். முதலில் சினிமாவிற்கு பாடல் எழதியது இவருடைய இசையில் வெளியான `நம்ம வீட்டு தெய்வம்' படத்தில்தான். `டி.எம்.எஸ் பாடிய `சிவனும் திருமாலும் நீயோ, அருள் செய்யும் மாகாளி நீயோ' மிகப்பிரபலம்.

கர்நாடக சங்கித்தத்தை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சென்ற ஒரு பாமர வித்வானின் வயலின் தந்தியும் அவரோடு காற்றில் கரைந்து விட்டது.

Sep 3, 2008

விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்?!


பிரபஞ்ச சக்தி,காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர்.பூமி, காற்று, நெருப்பு,நீர்,வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழ வடிவம்தான் இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள்.`ஒரு கை த்னக்கும்,ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு,இரு கைகள் நம்மைக் காக்க'என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர்.

கடவுள்களுக்கும் பட்டங்கள் உண்டு. சிவனுக்கு `ஆல் அமர் செல்வன்' கண்ணனுக்கு, `ஆலிலைப் பாலன்' விநாயகனுக்கு ஆலமர அல்லது அரசமரத்தடி பிள்ளையார் என்று உண்டு. பல்வேறு வடிவங்களில் இவரை வழிபடுவார்கள். மகா கணபதி,ஹரித்ரா கணபதி அல்லது துந்திராஜ கணபதி, உச்சிஷ்ட கணபதி,நவநீதி கணபதி, ஸ்வர்ண கணபதி, சந்தான கணபதி என்கிற ஆறு வடிவ்ங்களில் வழிபாடுகள் உண்டு.

முத்கல புராணம் விநாயகரின் எட்டு அவதாரங்களையும்,முப்பத்திரண்டு திருவுருவங்களையும் விவரிக்கிறது. எட்டு அவதாரங்கள் என்பது மனிதர்களின் எட்டு பலவீனங்கள் அல்லது அசுர குணங்களை குறிக்கும். அகந்தையை வெல்லும் ஏகதந்தர்,செருக்கை அகற்றும் தும்ரவர்ணர்,பொறாமையை அழிக்கும் வக்ரதுண்டர்,மோகத்தை அடக்கும் மகோதரர்,பேராசையை நீக்கும் கஜானானர்,கோபத்தை குறைக்கும் லம்போதரர், காமத்தை விலக்கும் விடர்,தற்பெருமையை தணிப்பது விக்னராஜா.

முப்பத்திரெண்டு திருவுருவங்கள்:

1.ஸ்ரீபால விநாயகர் "- குழந்தை வடிவம், யானைத்தலை; பொன்னிற மேனி;நான்கு கைகளில் ஒன்றில் வாழைப்பழம்,ஒன்றில் மாம்பழம்,ஒன்றில் கரும்பு, ஒன்றில் பலாப்பழம்,துதிக் `கை'யில் அவருக்கு பிடித்த கொழக்கட்டை.

2.ஸ்ரீ தருண விநாயகர் : இளமை பொங்கும் அழகிய இளைஞனாக,ஒடிந்த தந்தம்,விளாம்பழம், கரும்புத்துண்டம், அங்குசம், பாசம், நெற்கதிர்,நாவற்பழம்,மோதகம் தாங்கிய எட்டு கைகளும் கொண்ட சிவந்த மேனியர்.

3.ஸ்ரீ பக்தி விநாயகர் : அறுவடை கால முழ நிலவு போல் ஒளிரும் சாம்பல நிற மேனியர்; வாழைப்பழம், மாம்பழம்,தேங்காய்,கிண்ணம் நிறைய பாயசம் கொண்ட நான்கு கைகள்.

4.ஸ்ரீ வீர விநாயகர் : வல்லமை வாய்ந்த மாவீரர் போல் அனைவரையும் கவர்ந்தீர்க்கும் வகையில், நின்ற நிலையில் அம்பு அங்குசம், மழ, குந்தாலி, சம்மட்டி, சூலம்,வாள்,சக்கரம், சங்கு, கேடயம், கதை, கொடி, பாசம், நாகம், வேல்,வில் கொண்ட பதினாறு கரங்கள் கொண்ட சிவந்த மேனி.

5.ஸ்ரீ சக்தி விநாயகர் : தனது சக்தியரில் ஒருவ்ரை மடியில் அமர்த்தி இடது கீழ்க்க்கரத்தால் அணைத்த வண்ணம் உட்கார்ந்த நிலையில் அங்குசம் பாசம் ஏந்தி வலது கீழ்க்கரத்தால் அபயம் அளிக்கும் நான்கு கரமுடைய ஆரஞ்சு சிவப்பு மேனியர்.

6.ஸ்ரீ துவிஜ விநாயகர்: நான்கு முக வெண்ணிலவு வண்ண மேனி, அக்கமாலை,தண்டம், கமண்டலம்,ஏடு ஏந்திய நான்கு கரங்கள்.

7.ஸ்ரீ சித்தி விநாயகர்: எடுத்ததை முடித்து வைக்கும் பொன் மஞ்சள் நிற மேனி,மாம்பழம்,பாசு,கரும்புத்துண்டம், மலர்க்கொத்து கொண்ட நான்கு கரங்கள்,துதிக்கையில் எள்ளுருண்டை.

8.ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர்: பேரின்பம் அருளும் பண்பாட்டு காவலர், நீல நிற மேனி, தனது சக்தியுடன் வீற்றிருக்கும் இவர் அக்கமாலை, மாதுளம் பழம், வஜ்ஜிர திரிசூலம், நீலோற்பலம், நெற்கதிர், வீணை தாங்கிய ஆறு கரங்கள்.

9.ஸ்ரீ ஷிப்ர விநாயகர்: வரந்தரு விநாயகரான இவர் தந்தம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி நான்கு கரங்களில் தாங்கியிருப்பார் துதிக்கையில் இரத்தின கும்பம் கொண்ட வண்ன மேனி.

10.ஸ்ரீ விக்ன விநாயகர் : விக்கினங்களின் அதிபதி. தந்தம், மலரம்பு, பரசு, சக்கரம், சங்கு, பாசம், கரும்புவில், பூங்கொத்து ஏந்திய எட்டு கரங்கள். துதிக்கையில் கொழக்கட்டையை வைத்திருக்கும் பொன்னிற மேனி.

11.ஸ்ரீ ஹரம்ப விநாயகர்: சிங்கவாகனத்தில் அமர்ந்திருக்கும் ஐந்து முக வெண்ணிறமேனி.அபயகரம்,தந்தம்,மலர்மாலை,அக்கமாலை,சுத்தி, பாசம், பழம், கதை, கொழக்கட்டை கொண்ட பத்து கரம்.

12.ஸ்ரீ லட்சுமி விநாயகர்: வெற்றியைத் தருபவர்; நீல மலர் ஏந்திய இருதேவியர்களுடைய தூய வெண்ணிற மேனியர்; பச்சைக்கிளி, மாதுளம் பழம், வாள், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, மாணிக்கக்கும்பம், வரம் தரும் கரம் கொண்ட எட்டு கரங்கள்.

13.ஸ்ரீ மகர விநாயகர்: மூன்று கண்களுடன் நெற்றியில் பிறைச் சந்திரன் ஒளிர, சிவப்பு வண்ணத்தோற்றம். தந்தம், மாதுளம்பழம், நீலோற்பலம், நெற்கதிர், சக்கரம், பாசம், தாமரை, கரும்புவில், கதை ஆகியவற்றைத் தாங்கிய ஒன்பது கரங்கள், தாமரை எந்திய கையுடன் கூடிய சக்தியை பத்தாவது கையில் தழவிக்கொண்டு துதிக்கையில் ரத்தின கலசம்.

14.ஸ்ரீ விஜய விநாயகர்: மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் வெற்றியைத் தரும் செந்நிற மேனி, தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் தாங்கிய நான்கு கரங்கள்.

15.ஸ்ரீ நிருத்திய விநாயகர்: ஊன்றிய இடது கால்,தூக்கிய வலது கால், கற்பக விருட்சத்தனடியில் ஆனந்த நடனமாடும் பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், அபிநயம் காட்டுவது போலுள்ள உயர்த்திய கையிலே பாசம், கொழக்கட்டை கொண்ட நான்கு கரங்கள்.

16.ஸ்ரீ ஊர்த்துவ விநயகர்: இடது மடியில் அமர்ந்திருக்கும் பச்சை நிறமுடைய தேவியை அணைத்த வண்ணமுள்ள பொன்னிற மேனி. தந்தம், அம்பு, செங்கழநீர்மலர், நெற்கதிர், கரும்புவில்,தாமரை மலர் கொண்ட ஆறு கரங்கள்.

17.ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்: பிறை சூடி, முக்கண்ணனுடன் செம்பட்டுடையும், செம்மலர் மாலையும் அணிந்து குட்டைக் கைகால்களை கொண்டு பத்மாசன நிலையில் மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி, மாதுளம் பழம், அங்குசம், பாசம், கொண்ட நான்கு கரங்கள்.

18.ஸ்ரீ வரத விநாயகர்: வரம் தரும் பிறைசூடிய முக்கண், செந்நிற மேனி, தேன்கிண்ணம், அங்குசம், பாசம், துவஜம் கொண்ட நான்கு கரங்கள்.

19.ஸ்ரீ திரயாட்சர விநாயகர்: ஆடும் காதுகளில் சாமரம் எனும் அணிகளும், தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் கொண்ட நான்கு கரங்கள். தும்பிக்கையில் கொழக்கட்டை பொன்னிற மேனி.

20.ஸ்ரீ ஷிப்ர பிரசாத விநாயகர்: பிறையுடையாடை, முக்கண் கொண்ட சிவந்த மேனி, தந்தம், தாமரை, அங்குசம், பாசம், கற்பகக் கொடியுடன் ஆறு கரங்கள். துதிக்கையில் மாதுளம் பழம்.

21.ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்: மஞ்சள் ஆடையுடைய பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், மோதகம் கொண்ட நான்கு கரங்கள்.

22.ஸ்ரீ ஏகதந்த விநாயகர்: பெருத்த வயிறு, ஒற்றைத் தந்தம், அக்கமாலை, கோடரி, லட்டு கொண்ட நான்கு கரங்களைக்கொண்ட நீல மேனி.

23.ஸ்ரீ சிருஷ்டி விநாயகர்: தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம். கொண்ட நான்கு கரங்கள். செந்நிற மேனியில் பெருச்சாளி வாகனம்.

24.ஸ்ரீ உத்தண்ட விநாயகர்: வலது கையில் தாமரை ஏந்தியுள்ள பச்சை நிற தேவியை இடது கையால் அணைத்துள்ள செந்நிற மேனி. த்ந்தம், மலர்மாலை, தாமரை, கதை, பாசம், நீலோற்பலம்,நெற்கதிர், கரும்புவில், மாதுளம்பழம் கொண்ட ஒன்பது கரங்கள் துதிக்கையில் ரத்ன கும்பம்.

25.ஸ்ரீ ருணமோகன விநாயகர்: செம்பட்டுடுத்தி வெண்பளிங்கு நிறம் கொண்டவர். தந்தம், அங்குசம், பாசம், நாவற்பழம் ஏந்திய நான்கு கரங்கள்.

26,ஸ்ரீ துண்டி விநாயகர்: நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் செந்நிற மேனி.தந்தம், அக்கமாலை, கோடரி, ரத்தின பாத்திரம் தாங்கிய நான்கு கரங்கள்.

27.ஸ்ரீ இருமுக விநாயகர்: இரு முகம், செந்நிற ஆடை, ரத்தின கீரிடம், நீலநிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், ரத்தின பாத்திரம் கொண்ட நான்கு கரங்கள்.

28.ஸ்ரீ திரிமுக விநாயகர்: அபயம், அக்கமாலை, அங்குசம் உள்ள மூன்று வலது கரங்கள், பாசம், அமுத கலசம், வரதம் மூன்று இடது கரங்கள், தங்க தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி.

29.ஸ்ரீ சிங்க விநாயகர்: சிங்க வாகனத்தில் அமர்ந்துள்ள வெண்ணிற மேனி. வரதம்,வீணை, சிங்கம், கற்பகக்கொடி கொண்ட நான்கு வலக்க்ரங்கள், தாமரை, மலர்க்கொத்து, ரத்தின கவசம், அபயம் கொண்ட நான்கு கரங்கள்.

30.ஸ்ரீ யோக விநாயகர் : யோக ஆசனத்தில் யோக பட்டம் கட்டிக்கொண்டு யோக தண்டம், அக்கமாலை, பாசம், கரும்பு தாங்கிய நான்கு கரங்கள், நீல நிற ஆடை அணிந்த பால சூரிய நிறம்.

31.ஸ்ரீ துர்க்கா கணபதி: அம்பு, தாமரை, அக்கமாலை, அங்குசம், பாசம், அஸ்திரம், கொடி, வில் ஆகியவற்றை எந்திய எட்டு கரங்கள் செந்நிற ஆடையுடைய பொன்னிறம்.

32.ஸ்ரீ சங்கட ஹர விநாயகர்: துயரங்களைப் போக்குபவர், நீல ஆடை அணிந்த பால சூரியன் போன்ற நிறம். இடது மடியில் நில மலரை ஏந்திய பச்சை மேனியுடைய தேவியை அமர்த்தியிருப்பவர். வரதம் அங்குசமுடைய வலக்கரம், பாசம், பாயச பாத்திரமுடைய இடக்கரம்.

Aug 24, 2008

எது நாகரீகம் ?

Geetha

தோற்றத்தை வைத்து மனிதர்களை எடைபோடுவது, மகாகவி பாரதி சொல்லும் காட்சி பிழைதான். மனிதர்களின் தரத்தை தோற்றங்களினால் எடை போட்டுவிட முடியாது. ஆனால் தோற்றத்தை வைத்தே நாம் மனிதர்களை புரிந்து கொள்கிறோம். பெரும்பாலும் தவறாகவே.
அந்தப் பெண்மணியின் தோற்றத்தை வைத்துத் தான் முதலில் நான் அவரை எடை போட்டேன். ஆனால் அது தவறு என்பதை புரிந்து கொள்ள சில நாட்கள் ஆயிற்று.

அப்போது நான் ஜெயா டிவியில் நாட்டு நடப்பு நிகழ்ச்சியை விவாதம் என்கிற தலைப்பில் நடத்திக்கொண்டிருந்த சமயம். நாட்டு நடப்பு என்பது வெறும் அரசியல் அலசல் மட்டுமல்ல என்பதில் தீவிரமாக இருப்பவன் நான். அதனால் பிரபலமாகாத, வெகுஜன ஊடகங்களில் அதிகம் தென்படாத திறமையாளர்களை தேடிக்கொண்டு வந்த பேட்டி எடுத்துக்கொண்டிருந்தேன்.

அப்போது என் கவனத்திற்கு வந்தவர்தான் திருமதி கீதா மாதவன்.அமெரிக்க தூதரக நண்பர் மூலமாகத்தான் முதலின் அவர் என் கவனத்திற்கு வந்தார். அவர் வாங்கிய டாக்டர்
பட்டம்தான் என்னை முதலில் கவர்ந்தது. தீவிரவாதத்தில் சர்வதேச சட்டம் பற்றித்தான் அவர் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறார் என்று எனக்குச் சொல்லப்பட்டது. அடிப்படையில் அவர் ஒரு வழக்கறிஞர் என்பதை தெரிந்து கொண்டேன்.சட்டத்தில் எத்தனையோ பிரிவுகள் இருக்கும்போது ஒரு பெண்மணிக்கு எப்படி தீவிரவாத சட்டத்தில் ஈடுபாடு வந்தது என்கிற கேள்வி என்னை குடைந்து கொண்டிருந்தது.

அவரை எப்படியும் நிகழ்ச்சிக்கு வரவழைக்கவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். ஆனால் உள்ளுக்குள் ஒரு சின்ன உறுத்தல். அவரைப் பற்றி சொன்னது அமெரிக்க தூதரக நண்பர். நான் நடத்துவதோ தமிழ் நிகழ்ச்சி. தமிழ்நாட்டில் பல துறைகளில் அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள்.ஆனால் தமிழில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு அதில் பல பேர் ஒத்துவரமாட்டார்கள். காரணம் அவர்களால் தொடர்ந்து தமிழில் பேச வராது. கீதா மாதவனும் அப்படியிருந்துவிட்டால் என்ன செய்வது? அதனாலேயே அவரை நிகழ்ச்சிக்கு அழைப்பதை சிறிது காலம் ஒத்திப்போட்டேன்.

பிறகு ஒரு வழியாக அழைக்கலாமென்று முடிவு செய்து தொலைபேசியில் அழைத்தேன். எடுத்தவுடனேயே ஆங்கிலத்தில்தான் தன் பேச்சை ஆரம்பித்தார். குரலில் எழந்த ஏமாற்றத்தை அடக்கிக்கொண்டு நிகழ்ச்சிக்கு அழைத்தேன். அவரும் ஒப்புக்கொண்டார். பேச்சை முடிக்கும்போது, ` மேடம், நிகழ்ச்சி தமிழில் உங்களுக்கு தமிழ் சுமாராகவாவது பேச வருமா ?' இது நான். மறுமுனையில் கலகலப்பான் சிரிப்பு. ` எனக்கு தமிழ் வராது என்று உங்களுக்கு யார் சொன்னது ? படித்தது வட நாட்டில், ஆங்கில மீடியத்தில் என்றாலும், அடிப்படையில் எங்களது பூர்விகம் நெல்லை மாவட்டம்' என்றார்.

என ம்னதுக்குள் ஒரு உற்சாக துள்ளல். தமிழில் பேசக்கூடிய ஒரு அறிவார்ந்த பெண்மணி கிடைத்துவிட்டார் என்கிற மகிழ்ச்சி ஒரு புறம், கூடவே எங்கள் மாவட்டத்துக்காரர் என்பதில் இருட்டிப்பு மகிழ்ச்சி. தன் கணவரும், சென்னையில் பிரபல வழக்கறிஞருமான மாதவனுடன் தான் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். புடவை அணிந்திருந்தாலும். தோற்றத்திலும், உரையாடலிலும் ஏராளமான ஆங்கில கலாச்சார வாடை.

நிகழ்ச்சியின் படப்பிடிப்பு துவங்கும்வரை எனக்குள் படபடப்புதான். என் முதல் கேள்விக்கு அவர் அளிக்கும் பதிலில்தான் அன்றைய நிகழ்ச்சியின் உயிரே இருந்தது. எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும், பயப்படாமல் கேள்வி கேட்பது என் இயல்பு. மேலும் என் நிகழ்ச்சிகளில் முதல் கேள்வியை மட்டும்தான் மனதிற்குள் தயார் செய்து வைப்பேன். பிறகு எதிரே இருப்பவர் சொல்லும் பதில் மூலமாகத்தான் என் அடுத்த கேள்வி உருவெடுக்கும்.

என் முதல் கேள்விக்கு அவர் தங்கு தடையின்றி தமிழில் பதில் சொன்ன விதத்தில் நான் முதல் முறையாக அடுத்த கேள்வி கேட்க தடுமாறினேன். காரணம் இந்த பெண்மணியிடமிருந்து இப்படியொரு தமிழை நான் எதிர்பார்க்கவேயில்லை. பிறகு அந்தத் தம்பதிகள் குடும்ப நண்பர்களானார்கள். திரு மாதவனுக்கு என் எழத்து நடை மீது அலாதி பிரியம் உண்டு. எங்கு பார்த்தாலும் என் எழத்தை பற்றியே சொல்லிக்கொண்டிருப்பார்.

பழைய தமிழ் சினிமா பாடல்களில் எனக்கிருந்த ஆர்வம் காரணமாக ஜெயா தொலைகாட்சியில் தேன்கிண்ணம் நிகழ்ச்சியும் நடத்திக்கொண்டிருந்தேன். ஒரு பொது இடத்தில் சந்தித்தபோது,கீதா மாத்வன் தேன்கிண்ணம் பற்றியும் அதில் வருகிற பாடல்கள் பற்றியும் சரளமாக என்னுடன் பேசினார். அவருக்கு பிடித்தமான பாடல்களை வரிசைப்படூத்தினார். அதில் முதலிடம் வகித்தது குழந்தையும் தெய்வமும் படத்தில் வரும் அன்புள்ள மான் விழியே, வேட்டைக்காரனில் வரும் உன்னையறிந்தால், காக்கும் கரங்கள் படத்தில் ஞாயிறு என்பது பெண்ணாக என்று அவருடைய நேயர் விருப்ப பட்டியல் நீண்டது. அவரது ரசனையும், பழைய மெல்லிசை அதன் மொழி வளம் மீது அவருக்கிருந்த ஆர்வம் என்னை பிரமிப்பில் தள்ளியது.

அவருடைய் பெற்றோர்களுக்கு அவர் ஒரே மகள். தந்தை ராணுவத்தில் பணிபுரிந்ததால், அவர் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே வட இந்தியாவில்தான். வட இந்தியர்கள் தூய இந்தி என்றால் உத்திரிபிரதேச இந்தியைத்தான் சொல்லுவார்கள். அந்த இந்தியை அட்சர சுத்தமாக பேசக்கூடியவர். தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்த பலருக்கே தமிழ் தாளபோடும்போது இவருக்கு மட்டும் எப்படி சுத்த தமிழம் சாத்தியமாயிற்று ? தமிழை எழத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தது ஆனந்த விகடன் மூலமாக. தாமிரபரணி பூர்விகம் அவருக்குள் தமிழை ஆழமாக பதித்திருந்தது எனக்குப் புரிந்தது.


வருடத்தில் பல நாட்கள் அயல்நாடுகளுக்கு சென்று திரும்பி கொண்டிருப்பவர். பல நாடுகளில் கூட்ட்ங்களுக்கு பேச போய்வருவார். அவர் வக்கீல் என்றாலும், முழ நேரமாக அதில் ஈடுபடாதது எனக்குள் வியப்பை விதைத்தது. அவரிடம் அதற்கான காரணம் இருந்தது. திருமணமாகி கருவுற்றதும், தொழிலை விட தனக்கு பிறக்கப்போகும் குழந்தைதான் முக்கியம் என்று முடிவெடுத்தார். இவருக்கு ஆடம்பரமெல்லாம் ஒரு நல்ல தாயாக இருப்பதுதான். தன் படிப்பு, தனக்க்குக் கிடைக்கும் கெளரவங்களை விட மேலானது தாய்மை என்று முடிவெடுத்தார். கணவரின் வருமானத்தில் குடும்பம் நடத்தினாலே போதும், வருமானத்திற்காக ஒரு தாயின் கடமையை இழக்கக்கூடாது என்பதில் இவருக்கு தீவிரம் அதிகம்.

சராசரி குடும்ப பெண்கள் கூட இன்றைக்கு குழந்தைகளோடு தியேட்டரிலும், தொலைக்காட்சிகளிலும் சினிமா பார்ப்பது என்பது ஒரு பெருமையாகவே கருதப்படுகிறது. ஆனால் தன் மகன் நிரஞ்சனுக்கு ஐந்து வயதாகும்வரையில் தான் சினிமா பார்ப்பதற்கே தடை போட்டுக்கொண்டார்.உலக அரங்கில் பல இடங்களிலிருந்து இவருக்கு தொடர்ந்து அழைப்பு வந்தாலும் இவருக்கு முதல் முன்னுரிமை தன் குடும்பம் தன் பிள்ளை. மிகச் சிறந்த படிப்பாளி. அவரது ஆங்கில நடையைக்கொண்டு அவர் முனைந்தால் இந்தியாவிலேயே ஒரு நல்ல நாவலாசிரியையாக வர முடியும்.பல அயல் நாட்டு தூதரக விருந்துகளில் இந்த தம்பதிகளை பார்க்கலாம். தோற்றத்திற்கும் அவரது வாழ்க்கை முறைக்கும் துளியும் தொடர்பில்லை.

மகன் கல்லூரியில் படிக்கிறார். இன்றைக்கும் வெளியே எங்கே வேலை இருந்தாலும் தன் மகனுக்கு தான் தேவைப்படும்போது எப்போதும் தான் அங்கு இருக்க வேண்டுமென்பது இவரது அடிப்படை உறுதி. படித்தபடிப்பும், அயல்நாட்டு புழக்கமும் இவரிமிருக்கு அடிப்படை தாய்மையை பறித்து கொள்ள இவர் அனுமதித்தேயில்லை. இது எனக்கு ஒரு புதுப் பார்வையாகவே இருந்தது.வெகு சிலரிடம்தான் படிப்பு, பாரம்பரிய பழக்கமும் இணைந்து இருக்கும் அதில் என் கண்ணுக்கு பட்ட முதல் பெண்மணி இவர்தான். கிராமங்களில் பாட்டிகள் ரசம், குழம்ப்பு போன்றவற்றை ஈயப்பாத்திரத்தில்தான் வைப்பார்கள். அது உடலுக்கு நல்லது என்பார்கள். அந்த பாத்திரத்திற்கு அடிக்கடி மூலாம் போட்டு வைப்பார்கள். கீதா மாதவன் ஆங்கில மூலாம் பூசப்பட்ட குணமளிக்கும் கிராமத்து ஈயப்பாத்திரம்.

பொய்யான சில பேர்க்குப்
புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு
இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு
எது நாகரீகம்?
முன்னோர்கள் சொன்னார்கள்

அது நாகரீகம் என்கிற வாலியின் வரிகள் தான் எனக்கு இவரை பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் அந்நிய மொழியும், பயணமும் நம் அறிவை வளர்த்துக்கொள்ள பயன்படலாம், ஆனால் நம் அடிப்படை பண்புகளை சுரண்ட அல்ல என்பதற்கு இந்த பெண்மணி ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

ஒபாமா- வைகோ சந்திப்பு



உலகத்திலேயே இனவெறியால அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் நீக்ரோக்கள் என்றழைக்கப்படும் கறுப்பர்கள் தான். கடந்த காலத்தில் தான் படித்த சரித்திரங்கள், நாவல்கள் மூலமாக வைகோ மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அதனாலேயே ஒபாமாவை சந்திக்க வேண்டுமென்றும் முனைப்போடு அமெரிக்காவிற்கு கிளம்பினார்.

அதற்கு முன்பாகவே, கறுப்பர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள், மற்றும் ஒபாமாவின் பின்னனி எல்லாவற்றையும் தொகுத்து ஆங்கிலத்தில் `YES WE CAN' என்கிற நூலை ஒபாமாவுக்கு அனுப்பியிருந்தார். அதை அவரும் பார்த்திருந்த தகவல் வைகோவிற்கு கிடைத்திருந்தது.

அங்கு வாழம் தன் நண்பர்கள் மூலமாக அவரை சந்திக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அவருக்கு இருந்த நேர நெருக்கடியால், அவருடைய மனைவியைத்தான் சந்திக்க முடியும் என்று தகவல் கிடைத்தது. ஆனால் வைகோ அதற்கு உடன்ப்டவில்லை. அவரை எப்படியும் சந்தித்தே தீர வேண்டுமென்கிற உறுதியோடு இருந்தார்.

இந்த சந்திப்பு எப்படி சாத்தியமாயிற்று ?

அவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பிரசாரத்திற்கு வருகிறார். அதற்கு முன்பு, அந்த ஊர் முக்கிய பிரமுகர்களை ஒரு ஹோட்டலில் சந்திக்கிறார். நீங்கள் அங்கு வந்தால் ஒரு நிமிடம் அவரை சந்திக்கலாம் என்று சொல்லப்பட்டது. அவரை சந்தித்துவிட முடியுமென்கிற நம்பிக்கை எனக்கு வந்தது. கூடவே எனக்கு பல படித்த சம்ப்வங்கள் நினைவுக்கு வந்தது. ஒபாமா வெற்றி பெற்றால். உலகப் புகழ் பெற்ற நாவலான ` அங்கிள் டாம்ஸ் காபின்' புத்தகத்தின் ஆசிரியர் ஹெரியட் பீச்சர் ஸ்டவ்,மேடம் ரோஸா பார்க்கிற்கு நேர்ந்த அவமானத்தால் மார்ட்டி லூதர் கிங் கறுப்பர்களுக்காக நடத்திய போராட்டமெல்லாம் வெற்றி பெற்ற நிலை வரும் என்று நினைத்துக்கொண்டேன்.

குறிப்பிட்ட நாளின் சிறிது தாமதமாகத்தான் வந்தார். என்னிடம் வந்த நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். ஏற்கெனவே நான் அனுப்பியிருந்த புத்தகத்தின் பிரதியை அவரிடம் நீட்டியபோது, ` நீங்கள் தானே வைகோ?' என்றார். நான் வியந்து போனேன். அந்த புத்தகத்தில் கையெழத்து வாங்க அவரிடம் நீட்டினேன். இடது கையால் கையெழத்துப் போட்டுக்கொண்டிருக்கும்போது, ` நீங்கள் பதவியேற்கிற நாளில், அபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங்கின கனவுகள் நிறைவேறும். உங்களுடைய வேகமும், ஈர்ப்பும்
கண்டங்களின் எல்லைகளையெல்லாம் தாண்டி டி பல கோடி மக்களின் இதயங்களையும், மனதையும் கவர்ந்து விட்டது.

நீங்கள் ஜனாதிபதியாகிற காலத்தில் அதிசயத்தக்க மாற்றங்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழவதுமுள்ள நசுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய விடியலை கொண்டுவரும் என்று நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதற்காக நான் இயற்கை அன்னையை பிரார்த்திக்கிறேன்' என்றேன். மகிழ்ச்சியோடு என்னை தழவிக்கொண்டார்.

ஒரு கறுப்பர் அமெரிக்காவின் அதிபராக முடியாதென்கிற பேச்சு இன்னமும் இருக்கிறேதே ?

அது தவறு. முதல் முறையாக அமெரிக்க தேர்தலில் இளைஞர்கள், இன வேறுபாடுகளை தாண்டி ஆர்வம் காட்டுகிறார்கள். எல்லா இடங்களிலும் ஒபாமாவைப் பற்றித்தான் பேச்சு. இளைஞர்களிடையெ கறுப்பு, வெள்ளை வேறுபாடில்லை. இதை நவம்பர் 4 நடைபெறும் தேர்தல் உறுதி படுத்தும்.

தமிழக தேர்தல், அரசியல் நிலவரம் குறித்து பேச நிறைய விஷயங்கள் இருந்தாலும் அதை அந்த சமயத்தில் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்து அவரிடமிருந்து விடை பெற்றேன்.

Jul 30, 2008

`ஆமாம். நம்மால் முடியும்!


எனது முப்பதாண்டு பத்திரிகை அனுபவத்தில் பல முக்கிய பிரமுகர்களை சந்திக்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்கிற செளகரியமே பல தரப்பட்ட மனிதர்களை சந்தித்து அவர்களிடம் இருக்கும் குறையை தவிர்த்து நிறைகளை எடுத்துக்கொள்ள முடியும். அவர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு அவர்களுக்குள்ள தனித்தன்மை என்ன என்பதை பார்க்க முடியும். அரசியல் தலைவர்களிடம் நாம் முரண்படலாம். கருத்து மாறுபாடு கொள்ளலாம். அவர்களின் பொது வாழ்க்கையின் தூய்மையை கூட நாம் சந்தேகப்படலாம். அந்த சந்தேகம் கூட அவர்கள் ஒரு பெரிய தகுதிக்கு வந்த பிறகு தான் ஏற்படும்.ஆனால் பலரிடம் பல விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன்.

மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவை நான் முதன் முதலில் சந்தித்தது 1982ம் வருடம். அப்போது திருச்செந்தூர் முருகனின் வேல் திருடு போய் அது தொடர்பாக அறநிலையத்துறையை சேர்ந்த சுப்ரமணிய பிள்ளை மர்மமான முறையில் இறந்து போனார். அப்போது தமிழகத்தின் முதல்வர் எம்.ஜி.ஆர். அறநிலையத்துறை அமைச்சர் இன்று எல்லா விழாக்களிலும் கலைஞர் கருணாநிதியோடு இருக்கும் ஆர்.எம். வீரப்பன்.

இதை திமுக பெரிய விவகாரமாக்கியது. திமுக தலைவர் கருணாநிதி, மதுரையிலிருந்து திருச்செந்தூர்வரை நடைபயணம் போனார். அப்போது நான் ஒரு பகுதி நேர நிருபர். அப்போது நண்பர் ஞானி தீம்தரிகிட பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தார். அவருடைய பத்திரிகைக்காக நானும் பத்திரிகையாளனாக அந்த நடை பயணத்தில் கலந்து கொண்டேன். அப்போது கருணாநிதி நடந்து போகிற பாதையில் சிறு கல் இருந்தால், அதை அவருக்கு முன்னால் ஒடிப்போய் அதை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார் ஒருவர். ரோஸ் கலர் சட்டை அதை தன்னுடைய கறுப்பு பேண்டுக்குள் தள்ளியிருந்தார். நல்ல உயரம். மிடுக்கான தோற்றம். விசாரித்தேன் அவர்தான் வை.கோபால்சாமி,(அப்போது வைகோ அல்ல)வழக்கறிஞர். மாநிலங்களவை உறுப்பினர். கலிங்கப்பட்டிக்காரர் என்றார்கள்.

அவரை கவனிக்கத்துவங்கினேன். பின்னார் 1983ம் ஆண்டு விகடனில் சேர்ந்த போது அப்போது நான் ஆனந்த விகடனில் சாண்ட்விச் என்றொரு பகுதி எழதிக்கொண்டிருந்தேன். அதாவது அரசியல் தலைவர்களில் அரசியல் இல்லாத இன்னோரு முகம்.அப்போதுதான் இன்றைய வைகோ எத்தனை ஆழ்ந்து படிக்கக்கூடியவர் என்பதை புரிந்து கொண்டேன். நாடாளுமன்றத்தில் அவர் முதல் முதலாக நுழைந்து போது, அவருக்கு கிடைத்த நண்பர்கள் பிலுமோடி,இந்திரஜித குபதா, இவர் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, ஜோதிர்மாய் பாசு, (மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு அல்ல) இவரும் மார்க்ஸிஸ்ட கட்சி உறுப்பினர். மாநிலங்களவையின் மேன்மையையும், இதை கற்றவர்கள் சபை என்று சொல்வார்கள் (அன்றைக்கு அப்படித்தானிருந்தது மாநிலங்களவை) மாநிலங்களவையில் பேச ஒரு உறுப்பினர் எப்படி தன்னை தயார் செய்து கொள்ள வேண்டுமென்று வைகோவிற்கு சொன்ன்வர். இதை வைகோவே என்னிடத்தில் 1986ல் டெல்லியில் நான் அவருடைய 2, மீனா பாக் வீட்டில் இருந்தபோது சொல்லியிருக்கிறார்.விருந்தோம்பல், நாடாளுமன்ற கூட்டத்திற்கு போகுமுன் ஒரு உறுப்பினர் தன்னை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டுமென்பதையும் அவரிடம் தெரிந்து கொண்டேன்.

அடுத்தநாள் மாநிலங்களவை கூட்டத்திற்கு போகுமுன், விடியற்காலை நான்கு மணிவரையில் குறிப்பெடுப்பார். கடுமையான உழைப்பாளி. பிறகு அதே 1986ம் ஆண்டில் எங்கள் ஊர் தென்திருப்பேரையில் எங்கள் பெருமாள் கோயில் நகைகள் களவு போயிற்கு. அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் முதல் முதலாக நெல்லை இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதற்கு முன்பு அவர் எம்.எல்.சி.யாகி அமைச்சரானவர். அப்போது தமிழகத்தில் மேல்சபை இருந்தது. பின்ன்ர் எம்.ஜிஆர். வெண்ணிற ஆடை நிர்மலாவை மேல்சபை உறுப்பினராக்க நினைத்தார். அது முடியாமல் போகவே மேல்சபையையே எம்.ஜி.ஆர் கலைத்தார்.அதனால் ஆர்.எம்.வீ. மந்திரி பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் இடைத்தேர்தலில் நிற்க வேண்டிய கட்டாயம். இந்த சமயத்தில் நான் ஜீனியர் விகடன் நிருபராக நெல்லையில் முகாமிட்டிருந்தேன். அப்போதுதான் எங்கள் ஊரில் நகை கொள்ளை.

இதை பெரிதுபடுத்தாவிட்டால் ஏதோ ஒரு சின்ன கிராமத்தில் நடந்த ஒரு சாதாரண திருட்டாக இந்த சம்பவம் புதையுண்டு போயிருக்கும். ஒரு விடியற்காலை நேரத்தில், நெல்லையிலிருந்து திமுகவின் முக்கிய தலைவரான வைகோவை தென்திருப்பேரை அழைத்துப்போனேன்.பிறகு விவகாரம் பூதாகரமெடுத்தது. பிறகு வைகோ தேர்தல் பிரசாரத்திற்கு வந்த கருணாநிதியை தென் திருப்பேரை அழைத்து வந்தார்.பிறகு தென்ருப்பேரை செய்திகளில் இருந்தது. அந்த வழக்கு நடக்கும்போதெல்லாம், ஊள்ளூர் நாளிதழகள் அந்த செய்தியை தவிர்க்க முடியாமல் போனது.

இப்படித்தான் எனக்கு அவருக்கும் பழக்கம். நான் அவரோடு மேடையிலேயே பெரியார் திடலில் முரண்பட்டிருக்கிறேன். அவர் ரகசிய்மாக யாழ்ப்பாணம் பயணம் போனதை முதலில் உலகிற்கு சொன்ன பெருமை ஜீவிக்கும், எனக்கு உண்டு அது வேறு விஷயம்.வைகோ எழதிய பல புத்தகங்களை நான் இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அவர் 19 மாதங்கள் `பொடா' சட்டத்திலிருந்தபோது தனது கட்சி பத்திரிகையான சங்கொலியில் தினமும் எழதி வந்தார். பின்ன்ர் அதுவே `சிறையில் விரிந்த மலர்கள்' என்கிற பெயரில் சுமார் 682 பக்க புத்தகமாக வந்தது.அது உண்மையிலேயே ஒரு சரித்திர பொக்கிஷம் எத்தனை தகவல்கள். நேருவின் `GLIMPSES OF THE WORLD HISTROY' தான் இவருக்கு உந்துதலாக இருந்திருக்க வேண்டும்.நேதாஜியைப் பற்றி அத்தனை குறிப்புகள் ஒரே புத்தக்கத்தில் வேறு எங்காவது கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதே போல் ஆபிரகாம் லிங்கன், கரிபால்டி இப்படி பல விஷயங்கள்.

ஒரு 800 பக்க ஆங்கில நாவலை தமிழில் சுருக்குவது என்பது மிகவும் கடினம். இர்விங் வாலஸின் மிகச் சிறந்த நாவல் `தி மேன்' ஒரு கறுப்பர் அமெரிக்காவின் ஜனாதிபாதியானால் என்ன நடக்கும் எனப்துதான் கரு. அதை தன்னுடைய புத்தகத்தில் 17 பக்கத்தில் சுருக்கியிருந்தார் வைகோ. அருமையான மொழிபெயர்ப்பு. காரணம் உலகத்திலேயே அதிகமான இன கொடுமைகளுக்கு ஆளானவர்கள் கறுப்பர்கள் தான் என்பதில் வைகோவிற்கு தீவிர உறுதி உண்டு.

இப்படி அவர்கள் மீது ஆழ்ந்த பற்று கொண்ட வைகோ, அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவை சந்தித்துவிட்டு தாயகம் திரும்பியதும் அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

(தொடரும்)

Jul 23, 2008

கணித `பாட'கர், ஒரு காலப்பெட்டகம்


தங்களின் வலைப் பதிவில் என் குருநாதர் திரு டி.எம்.எஸ். அவர்களைப் பற்றி எழதியிருந்ததை படித்தேன்.. நன்றி பெருக்கோடு, ஆனந்த கண்ணீரோடு உங்களுக்கு எழதுகிறேன். அவரைப் பற்றி எழதியதற்காக உங்களுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

நான் தற்போது சென்னை விப்ரோவில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு இருவர் காரணம். ஒன்று என் தாய், இரண்டாவது என் குருநாதர் திரு டி,எம்.எஸ்.இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும் கொடுமை என்பார்கள். அந்தக் கொடுமையை இளமையில் அனுபவித்தவன் நான். நான் மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகன், நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேரன்.
எனக்கு முன்றரை வயது இருக்கும்போது என் தந்தையை இழந்தேன். என் தாயின் அரவணைப்பில் வளர்ந்தேன்.

நான் எட்டாவது வகுப்பு படிக்கும்போதுதான் எனக்கு படிப்பில் நாட்டம் ஏற்பட்டது. கலைமகளின் அருள் என் மீது படர ஆரம்பித்தது. நன்கு படிக்க துவங்கினேன். எப்போதுமே நான் படிப்பில் முன்னேற வேண்டுமென்கிற வெறி என் தாய்க்கு இருந்தது.. பத்தாம் வகுப்பு வரை நான் மேற்குமாம்பலம் அஞ்சுகம் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில் 447/500 எடுத்தேன். இந்த மதிப்பெண் எனக்கு அகோபில மடம் பள்ளியில் இடம் வாங்கி கொடுத்தது. அப்போது அங்கு நான் சந்தித்த முதல் மனிதர்தான் என் குருநாதர் திரு டி.எம்.எஸ். எனக்கு உந்துசகதியாகவும், கிரியாஊக்கியாகவும் அவர் விளங்கினார். அவர் கொடுத்த உற்சாகத்தில் எனக்கு படிப்பில் முழ ஈடுபாடு வந்தது. கல்வியை நேசிக்க துவங்கினேன்.

வீட்டிலோ கடும் பொருளாதார நெருக்கடி. என்னை படிக்க வைக்க என் தாய் போராடினார். என் குரு எனக்கு ஸ்காலர்ஷிப் வாங்கித்தந்தார். என் நண்பர்கள் அசோக்குமார்,செந்தில்,பிரஸாத்,செந்தில்குமார் வீரமணி, அசோக் சுகுமார், விஷ்ணு, இந்த ஆறு பேரும் முருகப் பெருமானை காத்த ஆறு கார்த்திகை பெண்களை போல என்னைக் காத்தார்கள். பள்ஸ் டூவில் 96% சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன்.பொறியற் கல்லூரியில் படிக்க நினைத்தேன். வறுமையோ துரத்தியது. பிலானியிலுள்ள பிர்லா இன்ஸ்டிட்டியூட்டின் சேர்ந்து இரண்டு வருடங்கள் படித்தேன். சொந்த காரணங்களினால் படிப்பை தொடர முடியவில்லை.என்னை நானே நொந்து கொண்டேன். சொந்த சகோதர, சகோதரிகளும், நெருங்கிய நண்பர்களும் கூட என்னை புறக்கணித்தார்கள். இந்த சோதனையான காலங்களிலெல்லாம் என்க்கு உற்சாகமூட்டியவர்கள், என் தாயும், குருவும்தான்.

அந்த கால கட்டத்தில் ஒரு ஸ்கீரீன் பிரிண்டிங் நிறுவனத்தில் 1,500 ரூபாய சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலை வருபவர்களுக்கு டீ வாங்கிக்கொடுப்பது.நரக வேதனையென்றாலும், என் நிலையை உணர்ந்து அதையும் ஏற்றுக்கொண்டேன். பிறகு விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் சேர்ந்தேன். குடும்பத்தினர் நான் வேலைக்கு போய் தாய்க்கு உதவியாக இருக்க வேண்டுமென்றார்கள். ஆனால் என் தாயாரோ பிடிவாதமாக நான் படிக்க வேண்டுமென்றார்.

அந்த தாயின் லட்சியத்தை நிறைவேற்ற பட்டப்படிப்பில் 96.5% வாங்கி தங்கப் பதக்கம் வென்றேன்.அப்போதுதான் விப்ரோ பெங்களூரிலிருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. என்னுடன் என் தாயும் வந்திருந்தார். தங்குவதற்கு கூட வசதி இல்லை. அங்கிருந்த உறவினர்கள் என்னை தன் போல் பார்த்துக்கொண்டதை இன்று நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். அங்கேயே முதலில் HR பிரிவில் வேலை கிடைத்தது. பிறகு சாப்ட்வேர் பிரிவுக்கு வ்ந்தேன். அந்தப்பிரிவில் வாரம் ஐந்து நாட்கள் வேலை, இரண்டு நாட்கள் அங்கேயே எம்.எஸ்(சாப்ட்வேர்) படிப்பு. இது துவங்கியது 2004ம் ஆண்டு. வாழ்க்கையில் வசந்தம் வீசத்துவங்கியபோது என் தாய் 2005 மே 5ந்தேதி என் கண்முன்னே மாரடைப்பினால் காலமானார்கள்.பலனை கூட அனுபவிக்காமல் அந்த புண்ணியவதி போய் சேர்ந்தது இன்னும் என்னை வாட்டிக்கொண்டிருக்கிறது.

தாயின் அரவணைப்பு, தந்தையின் கண்டிப்பு. எனக்கு தாயின் அரவணைப்பு கிடைத்தது, நான் என் தந்தையை கண்டது என் நினைவிலில்லை. ஆனால் எனக்கு தந்தையாக இருந்து என்னை அரவணைத்துக்கொண்டவர் என் குரு டி.எம்.எஸ். ஒரு ஆசானாக, தந்தையாக, ஒரு நடமாடும் தெய்வமாக இருக்கிறார் திரு டி.எம்.எஸ். அவர் என்னைப் போல பல மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தவர். அவர் மாணவர்களுக்கு செய்கிற பல உதவிகளை அவர் அனுமதியில்லாமல் சொல்ல முடியாது. அவர் கணித `பாட' கர் மட்டுமல்ல், அவர் ஒரு கால பெட்டகம்.

இப்படிக்கு

மதன் மோகன்

Jul 3, 2008

கணித `பாட'கர் டி.எம்.எஸ்.



`கவிஞன் நானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்'

என்று தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டார் கவிஞர் கண்ணதாசன்.சென்னையில் ஒரு மனிதக் கணிதம், பல காவிய காலங்களை உருவாக்கப்போகும் அடுத்த தலைமுறையை சரியாக செப்பனிட்டுக்கொண்டிருக்கிறது.

அவர் சென்னை மேற்கு மாம்பலம் அகோபில மடம் ஹையர் செகண்டரி பள்ளியின் தலைமையாசிரியர் டி.எம்.எஸ்.இவரது இரண்டு கண்களில் ஒரு கண் கணிதம். இன்னொரு கண் கருணை.

பொதுவாகவே எனக்கு இந்த ஆசிரிய இனத்தின் மீது கோபமுண்டு.உண்மையில் அவர்கள் ஆசிரியர்களாக இல்லாமல், புத்தகத்திற்கும் மாணவர்களுக்குமிடையே ஒரு `மொழிபெயர்ப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால் பல மாணவர்களால் பாடத்தில் லயிக்க முடிவதில்லை. பல வகுப்புகளில் மாணவர்கள் தூங்குவதற்கு இதுவும் ஒரு காரணம்.அப்பொதெல்லாம் எனக்கு அச்சு இயந்திரங்களை கண்டு பிடித்தவன் மீது கோபம் வரும். `கற்றலிற் கேட்டலே நன்று' என்கிற குரு குல கல்வி முறைக்கே நாம் போய் விடலாமோ என்று தோன்றும்.

ஆனால் சில ஆசிரியர்கள் தான் இந்த எண்ணத்தை மாற்றுகிறார்கள். உதாரணமாக எனக்கு திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒரு தமிழ் ஆசிரியர் இருந்தார். வி.வி.நடராஜன். இன்றைக்கு எனக்கும் தமிழில் எழத துணிச்சல் உண்டென்றால் அதற்கு வித்திட்டவர் அவர். எங்கள் உறவினர் ஒருவர் உண்டு. அவர் பெயர் கி. குழைக்காதன். அவருடைய தமிழ் போதனையைப் பற்றி பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரை எல்லோரும் ஆசிரியர் கி.கு என்றுதான் அழைப்பார்கள்.அவரது பேத்தி ஜென்னிக்கு தமிழ் மீது இருந்த பயத்தைப் போக்கி அதை ரசிக்க வைத்தவர். அந்த வரிசையில் என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த மாண்புமிகு மனிதர் இந்த கணித டி.எம்.எஸ்.

`கணித சூத்திரங்களை மனப்பாடம் செய்தால் உருப்படவே முடியாது' என்பது இவரது வாதம். அதன் அடிப்படையை புரிய வைப்பார்.இவரது பள்ளி வாழ்க்கை தவிர, ஏராளமான குழந்தைகளுக்கு அதுவும் ப்ளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி. `ஏழை நான் ஆனால் படிக்க ஆசை' என்று இவர் எதிரே நின்று சொன்னால் போதும். அப்ப்டியே அரவணைத்துக்கொள்வார்.

இவருக்குள்ள அலாதியான வெறி தான் சொல்லிக்கொடுக்கும் கணித முறை ஏழை குழந்தைகளை சென்றடைய வேண்டும். வசதி படைத்த குழந்தைகளுக்கு பல வாய்ப்புகள் வசதி மூலமாக கிடைக்கும். அந்த ஏழைக் குழந்தைக்குள் இருக்கும் கணித திறனை யார் நீருற்றி வளர்க்கப்போகிறார்கள்' என்பதைத்தான் தூக்கத்திலும் புலம்பிக்கொண்டிர்ருப்பார்.

மேற்கு மாம்பலம் பகுதிக்கு இவரை ஒரு `சூப்பர் ஸ்டார்' என்றே சொல்லலாம்.அவருடன் நடந்து போனால், பல லட்ச ரூபாய் காரில் போகிறவர் கூட நிறுத்தி வணக்கம் சொல்லிவிட்டு போவார். காரணம் அவர் இவருடைய பழைய மாணவராக இருப்பார். அந்த மாணவரின் பூர்விக வாழ்க்கை குடிசையில் கூட துவங்கியிருக்கும்.

ஒரு சிறந்த உதாரணம். இவ்ரது வீட்டில் பாத்திரங்கள் தேய்த்து, துணி தோய்த்து கொடுக்கும் பெண் ஆண்டாள். பல வருடங்களாக இவரது வீட்டில் பணி புரிகிறார்.அந்தப் பெண் இவர் வீட்டில் வேலை செய்ய வந்தபோது அவரது மகனுக்கு சிறு வயது. விளையாட்டுத்தனமாக இருந்த அந்த பிள்ளை இன்று அமெரிக்காவில்.தன் தாய்க்கு மேற்கு மாம்பலம் பகுதியிலேயே பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள வீடு வாங்கிக்கொடுத்திருக்கிறான். ஆனால் ஆண்டாள் அம்மாள் இன்றும் வந்து இவர் வீட்டில் வந்து பணி புரிகிறார்.` எனக்கு கணிதம் மட்டுமா கொடுத்தார், படிக்க காசுமல்லவா கொடுத்தார்' என்கிறான் அமெரிக்காவில் உள்ள அந்தப் பிள்ளை.

தான் வாங்கும் சம்பள காசுக்காக கற்றுக்கொடுப்பதென்பது வேறு. கல்வியினால் ஒரு தலைமுறை தழைக்க வேண்டுமென்று ஒரு யாகமாக இந்தப் புனிதப் பணியை செய்பவர்கள் சிலர்.அதில் இவரும் ஒருவர். என்னுடைய வலைப்பதிவில் ஒரு விளம்பரம் இருக்கும். அந்த புத்தகத்திற்கு சொந்தக்காரர் டி.எம். எஸ். இந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர் மாணவர்களுக்காக ஒரு கணித கையேடு த்யாரித்தார். அதாவது மார்ச் 4 ந்தேதி ப்ள்ஸ் டூ பரீட்ச்சை எழதப்போகும் மாணவர்களுக்காக. புத்தகத்தில் விலை 70 ரூபாய். புத்தகம் தயாரானவுடம் யோசித்தார். இதை ஏழை மாணவர்கள் எப்படி வாங்குவார்கள்? உடனே வசதியாக இருக்கும் தன் மாணவக் கண்மணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். அச்சடித்த 5,000 புத்தகங்களும் நன்கொடை மூலமாக ஏழைப் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யபட்டது.

இதில் இன்னொரு செய்தி. எந்த மாதிரியான கேள்விகள் வரும் என்று இவர் சொல்லியிருந்தாரோ அதுவே பரீட்சையிலும் வந்தது. பல பள்ளி தலைமை ஆசிரியர்கள் இப்போது தமிழகம் முழவதுமிருந்து கடிதங்கள் எழதுகிறார்கள் இலவச புத்தகம் கேட்டு!இப்போது அந்த மகத்தான பணியிலிருக்கிறார்.` நான் பணக்காரனாக இருந்திருந்தால், என் செலவிலேயே தமிழ்கம் முழவதும், தமிழ் மீடிய மாணவர்களுக்கும் கூட கொடுப்பேன். அதனால் இந்த வருடம் ஆங்கில மீடியத்துக்கும் மட்டும் நன்கொடை கேட்க போகிறேன். கணிதம் மேல் மோகம் கொண்ட `கர்ண'ர்கள் கொடுக்கும் நிதி குவிந்தால் தமிழக்கும் கொண்டு வ்ருவேன்' என்கிறார். ஒரு ஐந்து புத்தகத்தின் விலையை கொடுத்தால் கூட அது பெரிய நன்கொடை என்கிறார்.

ஜாதி, மத, இன வேறுபாடில்லாமல் இந்த `ஆரியர்' செய்யும் பணி இன்றைய காலம் கவனிக்காமல் போகலாம். ஆனால் பாடகர் டி.எம்.எஸ்ஸின் குரலில் ` நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற' என்று பல லட்சம் உள்ளங்கள் பாடிக்கொண்டேயிருக்கும்.

Jun 26, 2008

கமலுடன் ஒரு மாலை


எனக்கும் கமல்ஹாசனுக்கும் சுமார் முப்பதாண்டு நட்பு உண்டு. அடிக்கடி சந்திக்கிற
வாய்ப்பு இல்லையென்றாலும்,ஒவ்வொரு சந்திப்பின்போதும்.அவர் தன்னை ஏதாவது ஒரு விதத்தில புதுப்பித்து கொண்டிருப்பது தெரியும்.

இத்தனை படங்கள் நடித்து ஒரு இமாலய இடத்திற்கு போயிருந்தாலும், ஒவ்வொரு படத்தையும் தன் முதல் படமான இன்றும் நினைக்கிற அவருடைய தொழில் வெறி பிரமிக்க வைக்கும்.

வைரமுத்து வீட்டு திருமணத்தின்போது இந்த வாரம் சந்திப்போம் என்று சொல்லியிருந்தார். புதன்கிழமை (25.6.2008) மாலையின், நானும், நூற்றாண்டை கடந்து விட்ட அல்லயன்ஸ் தமிழ் பதிப்பகத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனும் போயிருந்தோம். வழக்கம் போல ஸ்ரீனிவாசன் கமலுக்கு கொடுக்க ஏராளமான புத்தகங்கள் கொண்டு வந்திருந்தார். இம்முறை ஏராளமான ஆன்மிக புத்தகங்கள்.

தன்னுடைய அலுவலக அறையில் லாப் டாப் போன்ற ந்வீன கருவிகள் சூழ அமர்ந்திருந்தார். அவரை சுற்றிலும் ஏராளமான புத்தகங்கள்.புன்முறுவலோடு வரவேற்றார்.`தசாவதாரம்' பற்றிய பேச்சுடன் ஆரம்பித்தது எங்களது அன்றைய மாலை சந்திப்பு. `படத்தைப் பத்தி பல விதமான விவாதங்கள் நடந்துக்கிட்டிருக்கு. ஆனால் இப்படி ஒரு முயற்சி வெற்றி அடைஞ்சுதில அடுத்து இன்னும் ஏதாவது புதுசு பண்ணலாம்ங்கிற நம்பிக்கை இருக்கு ' என்றார்.

`வியாபார ரீதியில் படம் எப்படி ?'

`இதைத்தான் எழத்தாளர் ஜெயகாந்தனும் என்னிடம் கேட்டார்.`ஏம்பா, எனக்கு படம் பிடிச்சிருக்கு. அதனாலதான் பயமா இருக்கு. எனக்கு பிடிக்கிற படங்கள் வெற்றி பெர்றுவதில்லை. இந்த சினிமா எப்படி?' என்றார்.

`அது சித்தாள் வரைக்கும் படத்துக்கு வராங்க.( ஜெயகாந்தனின் மிகப்பிரபலமான நாவல் ` சினிமாவுக்கு போன சித்தாளு') என்று சொன்னேன். இந்த படம் கீழ இறங்காதுன்னு சொன்னாங்க. எனக்கு வர்ற தகவல் எல்லாம் எம்ஜிஆர் படம் பாக்க வர்ற மாதிரி வராங்கன்னு தகவல்'.

`முதல்ல இப்படி ஒரு படம் பண்ணனும்னு எங்க ஆரம்பிச்சது ?' இது நான்.

`வேட்டையாடு விளையாடு' முடிஞ்சதும், அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்ச போது கெளதம் மேனன் ` பச்சைக்கிளி முத்துச்சரம்' கதையத்தான் எனக்கு சொன்னார்.எனக்கு
ஒத்துவராதுன்னு தோணிச்சு.உடனே ஏதாவது வித்யாசமா பண்ணலாமேன்னு, ` நவராத்திரி'யில சிவாஜி சார் பண்ணின மாதிரி, ஒன்பது வேடங்கள்னு பேச்சு ஆரம்பிச்சு, அப்புறம்தான் ஒரு படி மேலே போய பத்து வேடங்கள்ன்னு யோசிச்சப்பதான், ` இந்த `தசாவதாரம்' விஷயம் வந்தது'

`இந்த ரங்கராஜ நம்பி விஷயம்?'

`இந்த மோதல்கள் வரலாற்றில இருக்கு. அந்த காலத்தை களப்பிரர்கள் காலம்னு சொல்வாங்க. சரித்திரலேயே நடந்த மிகப்பெரிய இன ஒழிப்புன்னா அது சமண மதத்துக்கு நடந்த மாதிரி எப்போதுமே நடந்ததில்ல. அதற்கு பிறகுதான் பல விவகாரங்கள் முளைத்தது. அதற்கு முன்பு பிறாமணர்கள் புலால் சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருந்தாங்க. இந்த சுத்த சைவமெல்லாம், சமணர்களிடமிருந்ந்துதான் பிறாமணர்களுக்கு வந்தது.வரலாற்றை நல்ல படிச்சு பார்த்தா, ஆர்ய சத்ரியர்கள், ஆர்ய் சூத்திரர்கள் என்றெல்லாம் கூட பிரிவுகள் கூட இருந்தது. அப்போது வைணவர்கள், குறிப்பாக ராமாஜரின் சீடர்கள் வீரமாக இருந்திருக்காங்க. தங்களுடைய கொள்கையில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார்கள். அதற்கு பிறகு மனித குலத்தில் சில மனிதர்கள் அவதாரம் எடுத்தாங்கன்னு சொல்ற மாதிரியான கதைதான். நாம் இன்றைக்கு பண்ற தவறுகள்தான் நாளைக்கு நம்மை வழி நடத்தும்.

அந்த ஆரம்ப காட்சியில் நீங்க `விஷ்ணு ஸகஸ்ரநாமம்' சொல்லும்போது, அது ஏதோ மனப்பாடம் பண்ணி சொன்ன மாதிரி இல்லையே ? தினமும் கோயிலுக்கு போகிற ஒரு தீவிர வைணவர் சொல்ற மாதிரி தானே இருந்தது.?

`ஆமாம், எனக்கு விஷணு ஸ்கஸ்ரநாமம் முழசா தெரியுமே' கொஞ்சம் சொல்லிக்காட்டுகிறார்.`சுப்ரபாதம் முழசா தெரியும். திருப்பல்லாண்டு கூட தெரியும். எனக்கு அபிராமி அந்தாதி தெரிஞ்சதினாலதான் என்னால் `குணா' படத்தில் அதை சொல்ல முடிஞ்சுது. இதுக்கு காரணம் டி.கே. சண்முகம் அண்ணாச்சி.குழந்தையாக இருந்தபோது அவருடைய நாடக குழுவில இருந்தேன். ஊர் ஊரா போவோம். அப்ப கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போவார். எந்த கோவிலுக்கு போறோமோ அந்த பாடல் சொல்லணும். அப்படித்தான் தேவாரம், திருவாசகம் படிச்சேன். பிரபந்தத்தில எனக்கு பல பாடல்கள் தெரியும்'அபிராமி அந்தாதியிலும், திவ்யபிரபந்தத்திலும் சில பாடல்கள் சொல்லிக்காட்டினார்.
உண்மையிலேயே ஆதி சங்கரரும், ராமானுஜரும்தான் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகள்.அவங்க தப்பா எடுத்துக்கலைன்னு ஒரு விஷயம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கி.வீரமணியும், தொல்திருமாவளவனும் தங்களை ராமானுஜதாஸன்னு சொல்லிக்கிட்டா கூட தப்பில்ல. ஏன் தெரியுமா ? பண்டை காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவுக்காரங்கதான் மூட்டைத் தூக்கிக்கிட்டு போவாங்க. வழியில அவங்களுக்கு முதுகு வலிச்சா, யாரும் உதவிக்கு வரமாட்டாங்க. மூட்டையை கீழே தரையில் வெச்சா, மறுபடியும் சுமக்கிறது கஷ்டம். இப்ப கூட கிராமப்பகுதிகள்ள, நீங்க மூணு கல் நட்ட சுமைதாங்கி கல் இருக்கும். இதை நிறுவனம்னு முதல்ல சொன்னவர் யார் தெரியுமா? ராமானுஜர்தான்.இது ராமானுஜர் படம் எடுத்த ஜீ.வி, ஐயர் சொல்லித்தான் எனக்கே தெரியும். ஒரு நாள் ஒரு கிராமத்து பக்கம் இருந்தோம். அப்ப அங்கிருந்த சுமைதாங்கி கல்லை பார்த்து அதை தொட்டு கும்பிட்டார். என்னன்னு கேட்டேன். இது ராமானுஜருடைய ஏற்பாடு என்றார். இதை யாராவது அந்த காலத்தில யோசிச்சிருப்பாங்களா.இப்படி ராமானுஜரைப் பற்றி கேள்விப்பட்ட பல விஷயங்களில் பாதிப்புதான் அந்த பாத்திரம்.

`இந்த படத்தின் மூலமாக கடவுள் அவதாரம் இருக்குன்னு ஒத்துக்கிறீங்களா ?

`அது உங்க perception. அதுதான் படத்திலேயே சொல்லியிருக்கேனே. கடவுள் இருந்தா நல்லாயிருக்கும்னு. எனக்கு பல ஆன்மிகப் பெரியவர்கள் நல்ல தமிழ் கத்துக் கொடுத்திருக்காங்க. ஒரு விஷயம் சொல்லணும். நான் சினிமாவில வளர்ந்துக்கிட்டுருக்கிற நேரம். வாரியார் சுவாமிகள் எங்கப்பாவுக்கு நல்ல நண்பர். பல சமயங்கள்ள எங்கப்பாவோடு அவருடைய காலட்சேபங்களுக்கு போயிருக்கேன். ஒரு நாள் தீடிர்ன்னு வாரியார் சுவாமிகள் என் வீட்டுக்கு வந்தார். `உனக்கு நம்பிக்கை இல்லேன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முருகனுக்கு கோவில் கட்டறேன். நீ எனக்காக பணம் கொடுக்கணும்'னு சொன்னார். `நீங்க கேட்டா கொடுக்க ஆசைதான். ஆனால் பெரிய பணம் இப்ப இல்லையே' ன்னு சொன்னேன். `நீ எவ்வளவு வேணும்னாலும் கொடு' என்றார். அப்ப எனக்கு சம்பளமே 25 ஆயிரம்தான். பத்தாயிரம் ரூபாய் கொடுத்தேன்.அப்ப எங்கூட இருந்த பகுத்தறிவு நண்பர்கள் கூட எங்கிட்ட ` நீ யாருன்னு சொல்லு'ன்னு சண்டை போட்டாங்க.`நீங்க என்ன வேணும்னாலும் நினைச்சுக்குங்க' அவர் கிட்ட நான் தமிழ் கத்துக்கிட்டேன்'ன்னு சொன்னேன். இப்படி எனக்கு தமிழ கத்துக்குடுத்தவங்க நிறைய பேர் இருக்காங்க. அதனாலதான் இந்த படத்தில் என்னால அசினுக்கு மங்களா சாசனம் சொல்லிக்கொடுக்க முடிஞ்சது. அவங்க மலையாளம் அவங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது.'

இப்படி பல விஷயங்களை சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் தெரியாத பல தொழில் நுட்ப கலைஞர்களுக்காக அவர் ஆங்கிலத்தில் எழதி வைத்திருந்த `தசாவதாரம்' திரைக்கதையை காட்டினார். அதை பார்க்கும்போது இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருக்கு அதிக வேலையே இருந்திருக்காது என்பது புரிந்தது. ஒவ்வோரு அசைவையும் அவரே குறித்து வைத்திருந்தார். அடுத்த படமான `மர்மயோகி' முழ திரைக்கதையும் ஆங்கிலத்தில் தயாராக இருந்தார்.

என்னுடைய வாழ்க்கை லட்சியமே `THE DECLINE AND FALL OF ROMAN EMPIRE' எட்வர்ட் கிப்பன் எழதிய ஏழ வால்யூம்கள் என்னிடம் இருக்கிறது. அதை தமிழாக்கம் செய்ய வேண்டும். அதே போல் `THE RISE AND FALL OF THE THIRD REICH' BY WILLIAM SHEIRER. இதையும் தமிழில் கொண்டு வரவேண்டும். என்னுடைய இந்த ஆசை கமலுக்கும் தெரியும். இப்போது அதற்கு துணையாக பிஷருடைய புத்தகத்தையும் படிக்க சொன்னார். தான் தவில் கற்றுக்கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

தலைநிறைய் பல விஷயங்களை அவரிடமிருந்து வாங்கி நிரப்பிக்கொண்டு திரும்பினோம்.

Jun 23, 2008

கார்க்கிக்கு கல்யாணம்


ஜூன் 22 ந்தேதி சென்னையில் கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கிக்கும், நந்தினிக்கும் சென்னை கத்திப்பாரா சந்திப்பில் உள்ள லே மெரிடியன் ஹோட்டலில். திருமணம் நடந்தது.நான் `தினமணி' ஆசிரியனாக இருந்த போது `வள்ளுவர் முதல் வைரமுத்துவரை' என்று ஒரு தொடரை தினமணி சுடரில் கொண்டு வந்தேன்.அந்த நாளை மறக்காமல் எனக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். போயிருந்தேன்.

அருமையான திருமணம், நெகிழ்ந்து போய் பேசினார் கவிஞர். நெஞ்சிருக்கும் வரை படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழதிய `பூ முடிப்பாள் இந்த பூங்கழலி' பாடலின் சரணத்தைச் சொல்லி தன் பேச்சை துவக்கினார். நிறைய உணர்ச்சி வயப்பட்டார்.வளம் தந்த வலிமைதான் அந்த மேடை என்றாலும், வடுகபட்டியிலிருந்து நடந்து இந்த உயரத்திற்கு வந்த வலியை பிள்ளையின் திருமணம் நினைவு படுத்தாமலா போகும்!அந்த உணர்ச்சியில் உண்மை இருந்தது.

கவிஞர்கள் குழந்தை மாதிரி. அவர்களின் கால்கள் மண்ணில் இருக்காது. அதனால் பல கவிஞர்களுக்கு ஒரு பிடி மண் கூட சொந்தமாக இருக்காது. `சேர்ந்தே இருப்பது வறுமையும்,புலமையும்' என்பதை உடைத்து காட்டிய பெருமை இரண்டு கவிஞர்களுக்கு உண்டு. ஒன்று கவிஞர் வாலி, இன்னொன்று வைரமுத்து.

வைரமுத்துவின் வரிகளில் சொல்லவேண்டுமானால், அவர் எழதிய கவிதையைத்தான் நினைவு படுத்தவேண்டும்.

வீடு பேறு

அரசாங்கத்திற்கு ஏழைக் கவிஞன் இருமிக்கொண்டே எழதினான் இப்படி:

``வாடகை தர முடியாமல்
வருகிற சண்டையால்
இப்போது நானிருப்பது
இருபத்தேழாவது வீடு
இன்றோ
நாளையோ
நான்
இருமிச் செத்ததும்...
நீங்கள் எனக்கு
`நினைவகம்'அமைக்க
எத்தனை வீட்டைத்தான்
வாங்கித் தொலைப்பீர்கள்.
(நன்றி: 1977 வைரமுத்து கவிதைகள் பக்கம் 141)

இந்த நிலை வைரமுத்துவிற்கு இல்லை.பொன்மணி வைரமுத்து மாளிகையில் 270 வீடுகளை உள்ளடக்கலாம்.கவிஞர்கள் வளமாக இருப்பது ஒரு வகையில் தமிழக்கு நல்லது. பொருளாதார நிர்பந்தங்களினால் பல நல்ல கவிஞர்கள் கருவிலேயே கருகிப் போகிறார்களே!.

திருமண விழா ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஒரு சர்வ கட்சி மாநாடு. மைனஸ் அதிமுகவாக இருந்தது.நாளைக்கு யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், அன்றே எங்கள் அரசியல் நட்பு தொடர்ந்தது என்று கலைஞர் சொல்லிக்கொள்ளலாம். `மத'சார்புள்ள பா.ஜ,கவின் சார்பில் திருநாவுக்கரசரும் மேடையில் இருந்து பேசினார்.எல்லா கட்சி தலைவர்களையும் கொண்ட ஒரு மேடை. அதிமுகவும் சேர்ந்திருந்தால், தமிழக அரசியலிலேயே ஒரு திருப்பு முனை ஏற்படுத்திய மேடையாக இருந்திருக்கும்.
வியாபார காங்கிரஸ்காரர்களான தங்கபாலுவும், ஜே.எம். ஆருணும்தான் பிள்ளை வீட்டுக்காரர்கள் மாதிரி வலம் வந்து கொண்டிருந்தார்கள்.வைரமுத்து பேசும்போது கடைசி வரிசையில் வந்து அமர்ந்தார் ஏ.ஆர். ரஹ்மான். அவரை உபசரிக்க ஆரூணும், கவிக்கோ அப்துல் ரஹ்மானும் போட்டி போட்டார்கள்.

1979ம் வருடம் `விசிட்டர்' பத்திரிகையில் வைரமுத்து எழதிய கவிதை இது.
தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம்

நம்மூர் ஜனங்கள்
வாழ்க்கையை வெளியே தொலைத்துவிட்டு
சினிமாக் கொட்டகையின்
செயற்கை இருட்டில் தேடுகிறார்கள்
நம்மூர் ஜனங்கள்
வேறேங்கினும் வடித்த
வேர்வையை விடவும்
சினிமா டிக்கெட்டுக்குச்
சிந்தியதே அதிகம்
சினிமா என்னும் இந்த
ராட்சச இருட்டின்
கைகளைப் பிடித்துக்கொண்டு
இன்னும் நாம் நடப்பது
எத்தனை தூரம்?
இன்று
படத்துக்கு பாட்டெழதக்
கம்பனே வந்தாலும் கதை வேறு.
சீதையைப் பற்றிச்
சிலேடையில் சொன்னால்தான்
கம்பனுக்குச் சினிமாக்
கம்பெனியில் இடமுண்டு
இங்கே வசனம் எழத
சிறுகதை சூரியன் செகாவ் வந்தாலும்
அவன் பேனாவை
`மஞ்சள்' மையால்தான் நிரப்பிக்
கொடுப்பார்கள்.
இளைஞர்கள் கைகளிலேனும்
இந்த அழக்குத் திரை
ச்லவை செய்யப்படுமா?
சற்றுப் பொருத்திருப்போம்
இல்லையெனில்
மக்களை சுருள வைக்கும்
திரைப்பட சுருளையெல்லாம்
ஒரு தீக்குச்சிக்கு தின்னக்கொடுப்போம்.

(வைரமுத்து கவிதைகள் பக்கம் 235)

இப்படி சினிமா வாய்ப்பு கிடைக்காத காலத்தில் வைரமுத்து எழதிய கவிதைகளையெல்லாம் படித்த பாரதிராஜா அவரை அழைத்து `நிழல்கள்' படத்திற்கு பாட்டெழத சென்னை எக்மோரிலுள்ள அட்லாண்டிக் ஹோட்டலில் வைரமுத்துவை இளையராஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் சில நிமிடங்களிலேயே எழதிய பாடல்தான் `இது ஒரு பொன்மாலைப் பொழது' அதில் சரணத்தில் வரும் `வானம் எனக்கு ஒரு போதி மரம்,நாளும் அது நாளும் எனக்கொரு சேதி தரும்' வரிகள் அன்றைய இளைஞர்களை அவர் பக்கம் திரும்ப வைத்தது .ஆனால் அன்றைய நாட்களை வைரமுத்து திரும்பி பார்க்கவில்லையா என்பது தெரியவில்லை. காரணம் இசைஞானி இளையராஜாவை காணவில்லை. ஒரு வேளை வைரமுத்து காணாமல் போகட்டும் என்று ஒரு காலத்தில் நினைத்த இளையராஜா மீதான் காழ்ப்புணர்ச்சி இன்னும் கவிஞருக்கு போகவில்லையா என்பது தெரியவில்லை.விஷயம் அறிந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்தி. இளையராஜாவின் `திருவாசக' பாடல் வெளியிட்டின்போதே இருவரையும் இணைக்க பாரதிராஜா முயன்றார். ஆனால் ராஜாதான் மனம் இறங்கவில்லை என்றும் ஒரு தகவல் உண்டு.

கனிமொழி தன் தாயாருடன் வந்திருந்தார். 1987 ஆகஸ்ட மாதத்தில் அவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் எம்.ஏ. பொருளாதாரம் படித்துக்கொண்டிருந்தபோது முதலில் நான் பேட்டி எடுத்தேன். அப்போதிருந்த அப்பழக்கற்ற கவிஞர் கனிமொழியிடமிருந்த வெகுளித்தனத்தை காலமும், அரசியலும் கடத்தியிருந்ததை பார்க்க முடிந்த்து.

எழத்துலக சிங்கம் ஜெயகாந்தன் பூப்போட்ட சட்டையில் முயலாகியிருந்தார்.


அரைகுறை தமிழை தெரிந்து கொண்டு சில்லறை சல்லாபங்களில் ஈடுபட்டு. தமிழ் சினிமாவையும். அரசியலையும் கெடுத்துக்கொண்டிருக்கும் பொறுக்கிகள் நிறைந்த கூட்டம் திராவிட முன்னேற்றக்கழகம்'(1972ல் `ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்' துக்ளக் பத்திரிகையில் எழதிய தொடர். பின்ன்ர் அது புத்தகமாக வந்தது)


இந்த ஜெயகாந்தனுக்கு திமுக சார்பில் முரசொலி விருது வழங்கப்பட்டது. அவரது மகனுக்கு அரசாங்க வேலை. அவருக்கு சரியான மருத்துவ கவனிப்பு. ஒரு அரசு அந்த மாபெரும் எழத்தாளனுக்கு செய்ய வேண்டிய மரியாதைதான். ஆனால் சுயமரியாதைக்காரர்களின் ஆட்சி காலத்தில், பலரின் சுயமரியாதை பறிக்கப்படும்போதுதான் வருத்தமாக இருக்கிறது. `சிங்க' ஜெயகாந்தனை நினைவில் கொண்டு அவரிடம் ஆசி பெற்றேன்.

ஆச்சி மனோரமா மணமேடையை விட்டு இறங்கும்போதே `மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு' என்ற கந்தன் கருணை பாடலை பாடிக்கொண்டே இறங்கினார். நான் அவரை நெருங்கி ` வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு' என்று முணுமுணுத்தபடி நெருங்கினேன். தாயன்போடு அணைத்துக்கொண்டார்.உடலை மதிமுகவிற்கு அர்பணித்தாலும், மனதை கலைஞரிடம் பறிகொடுத்து மயங்கி போயிருக்கும் மதிமகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் `கலைப்புலி' தாணு, கலைஞர் கண்களில் படாமல் மூன்றாவது வரிசைக்கு போய் அமர்ந்து கொண்டார்.அனேகமாக மதிமுகவின் ஒரே பிரதிநிதி இவர்தான்.வைகோ திமுகவை விட்டு வெளியேற-யேற்ற இருந்த சமயம், அவரை சமாதானப்படுத்தும் தூதுவர்களில் ஒருவர் வைரமுத்து.

வைரமுத்துவின் நெருங்கிய நண்பர், சென்னை வடபழனியில் பழைய திரைப்படப்பாடல்கள் ஆராய்ச்சி மையம் வைத்திருக்கும் அலிகான் உணர்ச்சி பொங்க வீற்றிருந்தார் (இவரைப் பற்றி பின்ன்ர் விவரமாக எழதவேண்டும். தமிழ் சினிமாவின் அனைத்து பாடல்களும் இவரிடம் ஒலி, ஒளி நாடாக்களாக உள்ளது.)

மூன்று பெண்களுக்கு வைரமுத்து நன்றி சொன்னார். ஒன்று " கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் - அது காலத்தின் கட்டாய நிர்பந்தம். அடுத்தவர் மணப்பெண்ணை பெற்ற - ஜெயம்மாள் ஈஸ்வரமூர்த்தி - இது சம்மந்தி மரியாதை. மூன்றாவதாக முக்கியமானவர் - பொன்மணி வைரமுத்து - இது பாவ மன்னிப்பு.குடும்பத்தை மறந்து தொழிலிலேயே கவனமாக இருக்கும் ஒவ்வொரு கணவன்மார்களும் ஒரு கட்டத்தில் செய்ய வேண்டிய கட்டாய மண்டியிடுதல்.அவசியம்தான். கவிப்பேராயினி' பொன்மணி அவர்கள் துரும்பாய் இளைத்திருந்தார். பிள்ளைகளை செப்பினிட ஒடாய்த் தேய்திருந்த தேகம்.கைகூப்பி வணங்க வேண்டிய ஒரு தாய், ஒரு ஆசிரியை.

அதிமுகவின் பிரதிநிதியா அல்லது தேவர் இன தூதுவரா என்று புரிந்து கொள்ள முடியாத வருகை எம். நடராஜன்(சசிகலாவின் கணவர்) கருணாநிதி அரங்கை விட்டு வெளியேறியவுடன் உள்ளே வந்தார்.

பின்னர் பாரதீய ஜனதாவின் இல. கணேசன் வந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் திருமணங்கள் பல அரசியல் திருப்பங்களை நடத்தியிருக்கிறது.கருணாநிதி ஒன்றை கூடாது என்று சொன்னால் அது கூடும் என்று பொருள். உதாரணமாக `எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்' என்றால் வேண்டும் என்று அர்த்தம். ` மத சார்புள்ள கட்சிகள் கூடாது' என்றால் அது கூடுகிற வாய்ப்பு உண்டு என்று அர்த்தம்.

நாடெங்கும் காங்கிரஸ் எதிர்ப்பு அலை. இப்போது நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வந்தால், திமுகவிற்கு காங்கிரஸ் ஒரு பாரம். அதனால் அரசியலில் எதுவும் நடக்கலாம். வைரமுத்து பேசும்போது, ` கலைஞர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று வரலாறு பதிவு செய்துகொள்ளும்'என்றார். அரசியலில் இந்த திருமணத்தின் மூலம் ஏதாவது திருப்பம் நேர்ந்தால் அதையும் வரலாறு பதிவு செய்து கொள்ளும்.

இந்த திருமணத்தின் எனக்கொரு ஆத்ம திருபதி. 2001- 2003 ஜீன் வரை நான் ஜெயா டிவியில் இருந்தேன். நான் தொலைகாட்சியில்தான் சேர்ந்தேன். ஆனாலும் எனக்கு விமர்சகர்களால், இரட்டை இலை முத்திரை குத்தப்பட்டது. ஆனால் இந்த விழாவில் கனிமொழி,விஜயா தாயன்பன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பரிதி இளம்வழதி, ஆயிரம் விளக்கு உசேன். தமிழச்சி, அவரது கணவரும் ஐபிஸ் அதிகாரியாக முதல்வரின் பாதுகாப்பு பிரிவிலிருக்கும் சந்திரசேகர்,வாகை சந்திரசேகர், இராம நாராயணன் போன்றவர்கள் என்னை `கரை'படாத பத்திரிகையாளனாக வரவேற்றதில் ஒரு ஆத்ம திருபதி.

`தசாவதாரம்' படம் எப்படி? என்று ஆர்வத்தோடு என்னிடம் கேட்டார் கமல்ஹாசன்.எளிமையின் சின்னங்களான கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான நல்லகண்ணுவும், வரதராஜனும் வந்திருந்தார்கள். கூட்ட நெரிசலில் உள்ளே வரமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான டி. ராஜா. அதிமுகவிலிருந்து வந்த ஒரே பிரதிநிதி மலைச்சாமிதான்.நான் பிறந்த சமூகயியத்தின் மீது கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், என்னை அன்போடு அணுகுவார். திக வீரமணி. மிகவும் அன்போடு குசலம் விசாரித்துவிட்டு போனார்.

விழாவிற்கு மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் வந்திருந்தார். தினமும் காலையில் வைரமுத்துவுடன் தொலைபேசியில் பேசுவதாக முதல்வர் சொன்னார். வைரமுத்துவிற்கு ஒரு வேண்டுகோள். விஸ்வநாதனுக்கு முதல்வரிடம் சொல்லி ஒரு தேசீய விருது வாங்கிக்கொடுக்கக்கூடாதா ? இப்போது விருதுகள் சிபாரிசினால் வாங்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியாததல்ல. நீங்கள் அதைச் செய்தால், திரைஇசை சரித்திரத்தில் நிச்சயம் நீங்கள் இடம் பெறுவீர்கள்.
ஒன்று மட்டும் மணமக்களுக்கு சொல்லுவேன். அதுவும் மருமகளுக்கு மாமனாக இருக்க மாட்டேன். தந்தையாகவே இருப்பேன் என்று மணமேடையில் வாக்குறுதி கொடுத்த வைரமுத்து வரிகளில் சொல்வேன்.

தெயவத்தை தேடாத ஞானம் வேண்டும்
தெய்வங்கள் நாமென்று தெளிய வேண்டும்
பொய்சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும்
போராடி வெல்கின்ற புலமை வேண்டும்
கையிரண்டும் உழைக்கத்தான் கவனம் வேண்டும்
காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும்
மெய்யிந்த வாழ்வென்று நம்பவேண்டும்

பலரோடு ஒன்றாக பழக வேண்டும்
பனித்துளிக்குள் உலகத்தை பார்க்க வேண்டும்.
வாழ்க மணமக்கள்.

Jun 19, 2008

மாண்மிகு மனிதர்கள்





ஆர்.நட்ராஜ் IPS





பத்திரிகையாளனாக வாய்ப்பு கிடைப்பது, ஆன்மிக மொழியில் சொல்ல வேண்டுமானால் ஒரு பூர்வ ஜென்ம புண்ணியம். எப்போதுமே செய்தி தேடலில் அலையும் நிருபனுக்குத்தான் மானுடத்தின் பல பரிமாணங்களைப் பார்க்கிற ஒரு வாய்ப்பு கிடைக்கும். என்னுடைய பத்திரிகை அனுபவத்தின் வயது இருபத்தியெட்டு. இந்த ஆண்டுகளில் பல மனிதர்களை கண்டு வியந்திருக்கிறேன். அவர்களிடமிருந்து பல நல்ல விஷயங்களை அவர்களுக்கு தெரியாமல் `திருடி'க் கொண்டு அதன் மூலமாக என்னை நானே திருத்திக்கொண்டிருக்கிறேன்.என் படிக்கும் பாணியைக் கூட செப்பனிட்டிக்கொண்டிருக்கிறேன். நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகளுக்கு மாண்புமிகு என்கிற அடைமொழி பொருந்தாது. ஆனால் தன் வாழ்க்கை தரத்தால் நம்மிடையே உண்மையான மாண்புமிகு மனிதர்கள் இருக்கிறார்கள். என்னை பாதித்த அந்த மாண்புமிகு மனிதர்களைப் பற்றி இந்த பகுதியில் தொடர்ந்து எழதுவேன். அதன் முதல் பகுதி இது.

அப்போது 2001ம் வருட இறுதி என்று ஞாபகம். நான் ஜெயா தொலைக்காட்சியில் நாட்டு நடப்பு (current affairs) நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த நேரம். அப்போதுதான் ஆர். நட்ராஜ் புதிதாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக பொறுப்பேற்றிருந்த நேரம். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்க அவருடன் தொலைப்பேசியில் பேசி, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
அப்போதுதான் அவர் வீரப்பனைப் பிடிக்கும் விசேஷ அதிரடப் படைக்கு தலைவராக சத்தியமங்கலத்தில் இருந்து விட்டு சென்னை நகர கமிஷனராக வந்திருந்தார். என்னைப் பற்றிய சுய அறிமுகத்தை ஒரிரு நிமிடங்கள் கேட்டார். `என்ன, மிஸ்டர் சுதாங்கன்,சத்தியமங்கலம் காட்டுக்கு இப்பதான் போனேன். அதுக்கு முன்னாடி சென்னையில தான் இருந்தேன், உங்களை எனக்குத் தெரியாதா? ஜீனியர் விகடன் காலத்திலிருந்து நான் உங்கள் வாசகன்' என்றார். அப்படித்தான் நான் அவருக்கு அறிமுகமானேன்.அவர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் அவரைப் பற்றிய தகவலை திரட்ட துவங்கினேன்.

குணசித்திர நடிகர் பூர்ணம் விஸ்வநாதனின் அண்ணன் பூர்ணம் ராமசந்திரனின் புதல்வர்.இவர் தந்தை அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். உமா சந்திரன் என்கிற பெயரில் பல நாவல்களை எழதியவர். ரஜினிகாந்துக்கு திருப்பு முனையாக இருந்த படம் `முள்ளும் மலரும்' அந்த படத்தின் கதை இவர் தந்தையுடையது.

ஆனால் என்னுடைய கவனத்தை அவர் 1984ம் ஆண்டே கவர்ந்தவர். அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 2ந் தேதி, வியாழக்கிழமை இரவு 10.52க்கு சென்னை விமான நிலையத்தில் ஒரு குண்டு வெடிப்பு. இதில் சுமார் 92 பேர் உயிரிழந்தார்கள். இந்தியாவே பீதிக்குள்ளானது. அப்போது மாநில காவல் துறையின் உளவுத்துறை டிஜிபியாக இருந்தவர் மோகன்தாஸ். மாநில முதல்வர் எம்.ஜி.ஆர். குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்கும் பொறுப்பை மோகன்தாஸ் ஏற்றுக்கொண்டார். அப்போது க்ரைம் பிராஞ்ச் சிஐடி பிரிவின் எஸ்பியாக இருந்தவர் ஆர்.நட்ராஜ். இவரிடம் அந்த வழக்கை ஒப்படைக்க விரும்பினார்.`எனக்கென்று ஒரு படையை நானே தேர்ந்தெடுத்துக்கொள்வேன். எனக்கு சுதந்திரம் கொடுத்தால் நான் பத்து நாட்களில் குற்றவாளிகளை பிடிப்பேன்' என்றார்.

`உங்களுக்கு 11 நாட்கள் தான் தருவேன் அதற்குள் நீங்கள் குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும்'என்றார். மோகன்தாஸ்.சவாலை ஏற்றுக்கொண்டார் நட்ராஜ். இந்த சம்பவம் நடந்த ஐந்தாவது நாள் செய்தியாளர்களுக்கு மோகன்தாஸிடமிருந்து அழைப்பு. அவரை சுற்றி பல அதிகாரிகள் இருந்தார். நட்ராஜீம் ஒருவர்.க்ரைம் பிராஞ்ச் சிஐடி பிரிவிலுள்ள அதிகாரிகளெல்லாம் எங்கள் பார்வையில் விழ மாட்டார்கள். மக்களோடு தொடர்புடைய பதவிக்காரர்கள் பக்கம்தான் நிருபர்கள் சுற்றி வருவார்கள். செய்திகளுக்காக. அதனால் நட்ராஜ் செய்தியாளர்களிடம் அப்போது அத்தனை பிரபலமில்லை.

அந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை காவல் துறை கண்டுபிடித்துவிட்ட செய்தி எங்களுக்கு சொல்லப்பட்டது. அதற்கு காரணம் நட்ராஜ் தலைமையில் இயங்கிய படைதான் காரணம் என்று பெருமையோடு சொன்னார். `அவரது படைக்கு மத்திய அரசிடமிருந்து நற்சான்றிதழ் வாங்கித் தருவேன்' என்றார். அது இன்றுவரை நடக்கவில்லை என்பது வேறு விஷயம்.

அப்போது இந்த செய்தி ஜீனியர் விகடனிலும் வெளியானது. பிறகு 2001ல்தான் எனக்கு நேரடி அறிமுகம்.நேரில் பேசும்போது அளந்து பேசுவார். மேடையில் பேசும்போது பிளந்து கட்டுவார்.நிறைய படிப்பார். மெல்லிசை, கர்நாடக இசை, பாப் இசைப் பிரியர்.அவரை என்னுடன் சகஜமாக பேச வைக்க எனக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தது. பண்டிகை காலங்களில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள், அதுவும் சென்னை கமிஷனர் பதவியில் இருப்பவர்களுக்கு பரிசுகள் குவியும். இவர் எந்தப் பதவியில் இருந்தாலும், இனிப்பு பெட்டிக்கு கூட அவரது அறையில் அனுமதி இல்லை.நன்றாக வயலின் வாசிப்பார். ஒரு பரம ரசிகர்.பல மொழிகள் தெரியும். குறிப்பாக நேபாள மொழி நன்றாக பேசுவார்.களத்தில் இறங்கி வேலை செய்ய மிகவும் பிடிக்கும். காவல் துறையில் சில பதவிகளை `தண்டனை' பதவிகள் என்று கருதப்படுவது உண்டு. அதை அவரிடம் சொன்னால் ஒப்புக்கொள்ளவே மாட்டார். `அரசாங்கத்தில் எல்லா பதவியுமே முக்கியமான பதவிதான். நாம் அரசாங்கத்துக்குத்தானே வேலை செய்ய வந்திருக்கோம். கமிஷனர் பதவியிலதான் இருப்பேன்னா வந்தோம்' என்பார்.

விஜயகுமார் வீரப்பனின் படைக்கு தலைமையேற்குமுன் அதன் தலைவராக இருந்த்வர் நட்ராஜ்.அந்த படையின் மீது பல குற்றச்சாட்டுகள். அதிரடிப் படை என்பது ஆட்சியாளர்களுக்கு பிடிக்காதவர்களை தூக்கி அடிக்கும் பகுதியாக அது கருதப்பட்ட காலம். பகுதி மக்களிடம் கூட கேலிக்கும், பழிக்கும் ஆளாகியிருந்தது படை. இவர் தலைமை பொறுப்பேற்றதும் தன் படைக்கு கொடுத்த முதல் உத்தரவு. `இனி கொஞ்ச காலத்திற்கு நாம் வீரப்பனை மறப்போம். நாம் இந்த பகுதி மக்களுக்கு உதவி செய்யத்தான் வந்திருக்கிறோம். கிராமங்களுக்கு போய் அந்த பகுதி மக்களுக்கு என்ன தேவையோ அதை கொடுப்பதுதான் நம் வேலை' என்றார். அதற்குப்பிறகு அதிரடிப் படையின் போக்கே மாறியது. ரேஷன் பொருட்களை வண்டியில் வைத்து கிராமங்களுக்கு கொண்டு சென்றார்கள். மருத்துவ வசதி இல்லாத கிராமங்களுக்கு மருத்துவமனைகள், ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு இந்த படையில் படித்த இளைஞர்களே போய் வகுப்புகள் எடுப்பார்கள். பல மருத்துவ முகாம்கள் என்று மக்களோடு ஒன்றிப் போனது படை. மக்கள் உதவி இல்லாமல் வீரப்பனை பிடிக்க முடியாது என்பதை தெரிந்தே வைத்திருந்தார். அதை செய்ய வேண்டுமானால் அந்தப் பகுதி மக்கள் அதிரடிப் படையை நேசிக்க செய்ய வேண்டும் என்பதுதான் இவர் நோக்கம்.

இவர் தளம் அமைத்தார். விஜயகுமார் காரியத்தை முடித்தார். இதை வீரப்பனை வீழ்த்திய பிறகு சத்தியமங்கலத்தில் நடந்த ஒரு விழாவில் நட்ராஜ் முன்பாகவே இதை ஒப்புக்கொண்டார் விஜயகுமார். இவர் அளித்த பேட்டி ஒன்றை பத்திரிகையாளர்கள் திரித்து எழத, அதனால் கமிஷனர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.மனித உரிமை கழகத்தின் இயக்குனரானார். அதுவரையில் அப்படி ஒரு கழகம் இருப்பதே மக்களுக்கு, ஏன் பத்திரிகையாளர்கள் பலருக்கே தெரியாது. அது ராயப்பேட்டையில் ஒரு கட்டடத்தில் நாற்றமடித்த கொண்டிருந்த ஒரு கூடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. இவர் பதவியேற்றதும்தான் மனித உரிமை கழகத்திற்கு அமைச்சர்கள் வசிக்கும் க்ரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதற்கு முன்பு இருந்தவர்கள் யாரும் அதைப் பற்றி கவலைப்படவேயில்லை. காரணம் அந்த பதவி அவர்களைப் பொருத்தவரையில் `தண்டனை' பதவி.உடனே களத்தில் இறங்கினார். ஒரு வாரத்திற்குள் அவரது அலுவலகம் க்ரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள் வீடுகளுக்கு நடுவே ஒரு பிரும்மாண்ட நீல நிற பலகையோடு மாறியது. இன்றைய ஆட்சியாளர்களுக்கு இவரை பிடிக்கவில்லையென்றாலும், திமுகவின் வருங்கால தலைவர் மு.க.ஸ்டாலின் பங்களாவிற்கு பக்கத்து வீடு இவருடைய அலுவலகமாக மாறியது.

நட்ராஜ் ஒரு ஆன்மிகவாதி. தினமும் பூஜை செய்யாமல் வீட்டை விட்டு கிளம்ப மாட்டார். அந்த பகுதியிலிருந்த மற்ற வீடுகளின் பெயர்கள், குறிஞ்சி, முல்லை,மல்லிகை, பொதிகை என்றெல்லாம் இருக்கும். பக்தரான இவரது அலுவலகத்தின் பெயர் மட்டும் திருவரங்கம்.ஒவ்வொரு நாளும் மனித உரிமைகள் மீறப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதை பற்றி எந்த ஆட்சியாளர்களும் கவலைப் படுவதில்லை. அவர்கள் பகவானைத்தான் நம்ப வேண்டும்.` எங்கும் சுற்றி ரங்கனைத்தான் சேவிக்க வேண்டும்' என்பதைப் போல,பாதிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கு அடைக்கலமானது இந்த `திருவரங்கம்'.

மூன்று மாதங்களுக்கு முன்னால் இவர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். சேர்ந்த நாளிலிருந்து இங்கும் களத்தில் சுறுசுறுப்பு. சில ஆண்டுகளுக்கு முன் பல நிதி நிறுவனங்கள் நடுத்தர மக்களுக்கு அதிக வட்டி ஆசை காட்டி பல கோடிகளை கொள்ளையடித்தது. முதல் கட்ட நடவடிக்கையாக இரண்டு பெரிய நிதி நிறுவன அதிபர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவை பெற்றார்.இழந்த பலருக்கு பணத்தை திருப்பி பெற்றுக்கொடுத்தார். இது யாருக்கோ பொறுக்கவில்லை. சென்ற வாரம் அங்கிருந்தும் இவர் மாற்றப்பட்டு சிறைத்துறை ஏடிஜிபியானார்.

இந்த காலகட்டத்தில் நாங்கள் வேறு மாதிரி நெருக்கமானோம். நானும், அவரும் படித்தது திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர் நிலைப் பள்ளி. அவர் அந்தப் பள்ளியில் எனக்கு சீனியர். அங்குள்ள பழைய மாணவர் சங்கத்திற்கு இந்த ஆண்டு நூற்றாண்டு. அந்த அமைப்பில் அவர் கெளரவ தலைவர். நான் செயலாளர்.

சிறைத்துறை பதவியேற்பதற்கு முன் அன்று காலையில் கூட பணம் இழந்த பலருக்கு சுமார் இரண்டு கோடி மீட்டு கொடுத்துவிட்டுத்தான் போனார். அப்போது அவருக்கு போன் செய்தேன்.ஒரு பத்திரிகையாளன் கைது செய்யப்பட்டால் அது போன்ற விளம்பரம் அந்த பத்திரிகையாளனுக்கு ஆயுளில் கிடைக்காது. பல புலனாய்வு செய்திகளையும், ஆட்சிக்கு எதிரான கட்டுரைகள் எழதியும் கூட எனக்கு அந்த `பாக்கியம்' கிடைக்கவில்லை.` எனக்கு அப்ப்டி ஒரு வாய்ப்பை நீங்களாவது கொடுக்க கூடாதா?' என்றேன் வேடிக்கையாக. `அப்படித்தான் வரணுமா என்ன? வாருங்கள், நீங்கள் நிறைய படிப்பவர், நன்றக பேசக்கூடியவர். அங்கு வந்து கைதிகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லலாமே' நெகிழ்ந்து போனேன். சில பதவியால் பலருக்கு பெருமை. வெகு சிலரால்தான் அந்த பதவிகளுக்கு பெருமை. சிறைத்துறை ஏடிஜிபி பதவி இனியும் கூழாங்கல்லாக இருக்காது. மன்னர்களின் மகுடத்திலிருக்கும் வைரக்கல்லாக மாறும் என்பது மட்டும் நிச்சயம்.

`கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை, அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை. சிறைச்சாலை ஒரு கல்லூரி' இந்தக் கட்டுரையை முடிக்கும் போது எங்கிருந்தோ காற்றலையில் இந்த பாடல் வந்து காதில் விழகிறது.

Jun 12, 2008

`இந்தியன்' படம் ஒரு ஃபாசிஸம்




(கமல்ஹாசன் எனக்கு 1996ல் அளித்த பேட்டி தொடரிது. ஆனால் இந்த பேட்டி எல்லா காலத்துக்கும் பொருந்தும்)


இந்த சந்தோஷம் போதுமா ? அதிக பட்சமா நீங்க செய்யக்கூடியது `இந்தியன்'படத்துல நூறும்,இருநூறும் லஞ்சம் வாங்குகிற குமாஸ்தாக்களைக் கொன்று, திருபதியடைஞ்சுக்கீறீங்க இல்லையா ?


ஒரு படத்தினால தீர்வுங்கறது நம்மை நாமே ஏமாத்திக்கிற விஷயம். படத்தையும், நிஜத்தையும் குழப்பிக்கக்கூடாது.` இந்தியன்' படம் மிகப்பெரிய வெற்றிப்படம்தான். ஆனா, படத்தில சொல்றதையெல்லாம் மக்கள் சீரியஸா எடுத்துக்கிறது இல்ல. அரசியல்வாதிகளும் கூட.




`இந்தியன்' படத்தில சொல்லப்பட்ட கருத்துக்கள் கூட ஃபாஸிஸம். நான் டைரக்டர் சங்கர் கிட்ட ` இது என்ன ஃபாஸிஸக் குரலா இருக்கே. எனக்கு பயமா இருக்குன்னு சொன்னேன்.இது ஹிட்லர் பேசின சாராம்சம்தான்.வேறு பட்டியல் போட்டு,மக்கள் குறைகளை லிஸ்ட் எடுத்து, வேற வாதங்களுடன். ஆனால், இதே கருத்தைச் சொன்னவர்தான் மிஸ்டர் அடால்ப் ஹிட்லர்.




சரித்திரத்தை பார்த்தா அவரும் கூட ஜெர்மன்காரர் கிடையாது. ஆஸ்திரியாவிலிருந்து ஜெர்மனிக்கு குடியேறியவர். இங்க எம்,ஜி,ஆர். மாதிரி.அதனால்தான் `ஃபாஸிஸ' வெறி இருக்கேன்னு சங்கர் கிட்ட கேட்டேன்.


`அதெல்லாம் மக்களுக்குத் தெரியாது. நீங்க ஏன் அப்பன் குதிருக்குள்ள இல்லேங்கிற மாதிரி அதையெல்லாம் தோண்டறீங்க?எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். யாராலயும் அதைச் செய்ய முடியலை.


எப்படி ஒரு `ரிக்ஸாகாரன்' எப்படி ஒரு ` அரசிளங்குமரி' யை காதலிக்கிறது ஒரு fantaasyயோ அதமாதிரி படம்தான் ஸார் இது இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க'ன்னு சொன்னார். அது எனக்கும் பிடிச்சிருந்தது. அதனால தான் எந்தக் கேள்வியுமே கேட்கல. இந்த விவாதம் எனக்கு நியாயமா பட்டுது'


இதப்பத்தி நான் கோவிந்த் நிஹாலனிகிட்ட கூட பேசிக்கிட்டிருந்தேன்.` என்னய்யா இது பயங்கரமான ஃபாஸிஸ ஃபிலிம்' அப்படின்னார். ஆனால், படம் யாருக்குமே இது பயங்கரமா தென்படலை. ஆடியன்ஸீக்கும் சரி, சென்ஸாருக்கும் சரி, ஒரு சில பத்திரிகைகளைத்தவிர, இதுக்கு பாராட்டுதான் கிடைச்சது.




ஒரு வேளை ஷங்கர் சொன்னது மாதிரி அந்த ஃபேண்டஸிதான் ஜெயிச்சதா?


ஆமாம், இந்தப் படம் பாதசாரிகளோட கனவு. கார்ல போறவனுக்கும் கனவு உண்டு.அவனுக்கு ஸ்விஸ் பாங்க்ல நமக்கு ஒரு கணக்கு இருக்கக்கூடாதங்கிற கனவு இருக்கும். இந்த பாதசாரிதான் சுவிஸ் வங்கியைப் பத்தி ந்னைக்காம, சுட்டுக் கொல்லணும்னு சொல்லுவான்.



இவுங்களையெல்லாம் சுட்டுக் கொன்னுட்டா எல்லாம் சரியாயிடுமா ? ஆகாது. இவுங்களையெல்லாம் கத்தியக் காட்டியெல்லாம் மிரட்ட முடியுமா? எத்தனை பேர் தலைக்கு மேல டெமாக்களிஸ் கத்தி தொங்கிக்கிட்டிருக்கு? அவுங்க எல்லாம் திருந்திட்டாங்களா? யாருமே திருந்தினதா தெரியலை.


எல்லாருமே ஒருத்தரையொருத்தர் சுட்டிகாடிக்கிட்டு... ஒரு கை சுட்காட்டிக்கிட்டு இருக்கு; இன்னொரு கை கிம்பளம் வாங்கிக்கிட்டு இர்ருக்கு. அதுதான் இன்றைய நிலை.


குழந்தைக்கு பொய் சொல்லக்கூடாதுன்னு கத்து கொடுக்கிறவர் அப்பா. அதே அப்பா டெலிபோன்ல கடன்காரன் கூப்பிட்டா இல்லேன்னு சொல்லச் சொல்வாரு. அந்தக் குழந்தையோட குழப்பம்தான் இன்னைக்கு மக்களோட குழப்பம்.


ஒரு பக்கம் இதையுன்ம் சொல்றேன்;ஒரு பக்கம் அதையும் சொல்றேன். இதுல வந்து ரஜினிகாந்த பேசினது சரியா, நீங்களும் ஏன் போகலேங்கிறதெல்லாம் தேவையில்லாத கேள்விகள்.




கம்பராமாயணத்தி வரும் இந்த மரம் விழந்தது, அந்த மரம் விழந்தது, சரயு நதி வெள்ளம் இதையெல்லாம் அடிச்சுக்கிட்டு வந்தது'ன்னு வரும். அதுமாதிர்ரி இந்தமுறை வந்தது மக்கள் வெள்ளம். அதுல இந்த மரமும் விழந்தது, அந்த மரமும் விழந்தது. குங்கிலிய மரமும் விழந்தது, ரஜினி மரமும் விழந்தது.


நான் கரையிலிருந்து வெள்ளத்தை பாத்துக்கிட்டுருந்தேன். அவ்வளவுதான். நான் நின்றிருந்தது சரியான செளகரியமான மேடு. உள்ள இறங்கி நின்னு.` என்ன பெரிய வெள்ளம்'னு பாத்தா அது அடிச்சுக்கிட்டு போயிடும்.




ஆனா தேர்தல் நேரத்தில் நீங்க நின்றிருந்த மேட்டுல தனியா நின்னமாதிரி தெரிஞ்சுது. ஏன்னா உங்க சக கலைஞர்களெல்லாம் ஏதோ ஒரு விதத்தில அந்த வெள்ளத்துல் மிதந்து வந்தாங்களே. அப்ப உங்களுக்கு மட்டும் ஏன் ஒரு எச்சரிக்கை உணர்வு?




எச்சரிக்கை உணர்வெல்லாம் கிடையாது, நான் வெள்ளத்துல மூழ்கல, மிதக்கலங்கிறதனால் எனக்கு கலர் பூச முடியாது. இன்றைக்கு சிறையிலிருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆதரவு என்றோ, இன்றைக்கு முதல்வராக இருக்கும் கருணாநிதி அவர்களுக்கு ஆதரவு இல்லை என்றோ சொல்ல முடியாது.


இன்றைய முதல்வருக்கே அது தெரியும். முதல்ல என்னைப் பார்த்ததும் அவர் சொன்னது` உன்னைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். இதிலிருந்த்தெல்லாம் தள்ளி இருப்பவன்னு தெரியும். அதுக்காக எனக்கு படம்கூடப் போட்டுக் காட்டக்கூடாதா?' அப்படின்னாரு.. அதை அவர் தெளிவா புரிஞ்சுக்கிட்டு இர்ருகாரு.. எல்லாரும் சொன்னாங்க. ` வேணும்னே அவாய்ட் பண்றார்ன்னு'




எனக்கு ஜாதி வர்ணம் பூசிப் பார்க்கிறதுல எல்ல ஜாதிக்காரங்களுக்கும் ஆசை, எனக்கு ஜாதி இல்லை. இல்லன்னு சொல்றது ஒரு நல்ல நாஸ்திகன் மாதிரி இருக்கிற தர்ம சங்கடம் நல்ல நாஸ்திகன் கடவுள் இல்லை, இல்லைன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்கமாட்டாம். நல்ல ஆஸ்திகன் ` கண்டிப்பா கடவுள் இருக்கார்'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். ஏன்னா அவனுக்கே எங்கேயோ சந்தேகம் இருக்கும்




தன் மேலே சந்தேகம் இருக்கிறவங்கதான் எனக்கு ஜாதி வர்ணம் பூசிப்பார்க்கிறாங்க. எனக்கு ஜாதியே கிடையாதுங்கறத என்னைத் தவிர வேறு யாருக்குமே நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. இனிமே இவங்க வர்ணம் பூசறதனால என்னாயிடும்> இனிமே இவன் நடிக்கக்கூடாது அப்படின்னு ஒதுக்கலாம்.


இதைவிட எப்படியும் என்னை பயமுறுத்த முடியாது. உயிரி பயம் எல்லாருக்கும் உண்டு. பெருந்தலைவர்லேருந்து பிச்சைக்காரன் வரைக்கும் துப்பாக்கிய எடுத்தா பயப்படுவான். ஸோ, அந்த மாதிரியான பயத்தை தவிர எனக்கு வேறு எந்த பயமும் கிடையாது.


மத்தவங்க யாரையும் புண்படுத்திவிடக்கூடாது, ஒரு குறிப்பிட்ட இனத்தை,ஒரு குறிப்பிட்ட இனத்தை,இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவரை, இந்து மதத்தை சேர்ந்தவரை தேவையில்லாமல், அர்த்தமில்லாமல் சாடிட்டேன் என்கிற ஒரு மன உறுத்தல் மட்டும் எனக்கே பயமான ஒரு விஷயம். அதனாலதான் நான் ஜாஸ்தி பேசறது இல்லை.'




இப்படி பேசாம ஒதுங்கறதும் ஒருவித கோழைத்தனம் தானே, மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும், நாளை இந்த வணிக வியாபார உலகத்திலதானே உங்க குழந்தைகளும் வளரப்போறாங்க?




(தொடரும்)