Jun 26, 2008

கமலுடன் ஒரு மாலை


எனக்கும் கமல்ஹாசனுக்கும் சுமார் முப்பதாண்டு நட்பு உண்டு. அடிக்கடி சந்திக்கிற
வாய்ப்பு இல்லையென்றாலும்,ஒவ்வொரு சந்திப்பின்போதும்.அவர் தன்னை ஏதாவது ஒரு விதத்தில புதுப்பித்து கொண்டிருப்பது தெரியும்.

இத்தனை படங்கள் நடித்து ஒரு இமாலய இடத்திற்கு போயிருந்தாலும், ஒவ்வொரு படத்தையும் தன் முதல் படமான இன்றும் நினைக்கிற அவருடைய தொழில் வெறி பிரமிக்க வைக்கும்.

வைரமுத்து வீட்டு திருமணத்தின்போது இந்த வாரம் சந்திப்போம் என்று சொல்லியிருந்தார். புதன்கிழமை (25.6.2008) மாலையின், நானும், நூற்றாண்டை கடந்து விட்ட அல்லயன்ஸ் தமிழ் பதிப்பகத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனும் போயிருந்தோம். வழக்கம் போல ஸ்ரீனிவாசன் கமலுக்கு கொடுக்க ஏராளமான புத்தகங்கள் கொண்டு வந்திருந்தார். இம்முறை ஏராளமான ஆன்மிக புத்தகங்கள்.

தன்னுடைய அலுவலக அறையில் லாப் டாப் போன்ற ந்வீன கருவிகள் சூழ அமர்ந்திருந்தார். அவரை சுற்றிலும் ஏராளமான புத்தகங்கள்.புன்முறுவலோடு வரவேற்றார்.`தசாவதாரம்' பற்றிய பேச்சுடன் ஆரம்பித்தது எங்களது அன்றைய மாலை சந்திப்பு. `படத்தைப் பத்தி பல விதமான விவாதங்கள் நடந்துக்கிட்டிருக்கு. ஆனால் இப்படி ஒரு முயற்சி வெற்றி அடைஞ்சுதில அடுத்து இன்னும் ஏதாவது புதுசு பண்ணலாம்ங்கிற நம்பிக்கை இருக்கு ' என்றார்.

`வியாபார ரீதியில் படம் எப்படி ?'

`இதைத்தான் எழத்தாளர் ஜெயகாந்தனும் என்னிடம் கேட்டார்.`ஏம்பா, எனக்கு படம் பிடிச்சிருக்கு. அதனாலதான் பயமா இருக்கு. எனக்கு பிடிக்கிற படங்கள் வெற்றி பெர்றுவதில்லை. இந்த சினிமா எப்படி?' என்றார்.

`அது சித்தாள் வரைக்கும் படத்துக்கு வராங்க.( ஜெயகாந்தனின் மிகப்பிரபலமான நாவல் ` சினிமாவுக்கு போன சித்தாளு') என்று சொன்னேன். இந்த படம் கீழ இறங்காதுன்னு சொன்னாங்க. எனக்கு வர்ற தகவல் எல்லாம் எம்ஜிஆர் படம் பாக்க வர்ற மாதிரி வராங்கன்னு தகவல்'.

`முதல்ல இப்படி ஒரு படம் பண்ணனும்னு எங்க ஆரம்பிச்சது ?' இது நான்.

`வேட்டையாடு விளையாடு' முடிஞ்சதும், அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்ச போது கெளதம் மேனன் ` பச்சைக்கிளி முத்துச்சரம்' கதையத்தான் எனக்கு சொன்னார்.எனக்கு
ஒத்துவராதுன்னு தோணிச்சு.உடனே ஏதாவது வித்யாசமா பண்ணலாமேன்னு, ` நவராத்திரி'யில சிவாஜி சார் பண்ணின மாதிரி, ஒன்பது வேடங்கள்னு பேச்சு ஆரம்பிச்சு, அப்புறம்தான் ஒரு படி மேலே போய பத்து வேடங்கள்ன்னு யோசிச்சப்பதான், ` இந்த `தசாவதாரம்' விஷயம் வந்தது'

`இந்த ரங்கராஜ நம்பி விஷயம்?'

`இந்த மோதல்கள் வரலாற்றில இருக்கு. அந்த காலத்தை களப்பிரர்கள் காலம்னு சொல்வாங்க. சரித்திரலேயே நடந்த மிகப்பெரிய இன ஒழிப்புன்னா அது சமண மதத்துக்கு நடந்த மாதிரி எப்போதுமே நடந்ததில்ல. அதற்கு பிறகுதான் பல விவகாரங்கள் முளைத்தது. அதற்கு முன்பு பிறாமணர்கள் புலால் சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருந்தாங்க. இந்த சுத்த சைவமெல்லாம், சமணர்களிடமிருந்ந்துதான் பிறாமணர்களுக்கு வந்தது.வரலாற்றை நல்ல படிச்சு பார்த்தா, ஆர்ய சத்ரியர்கள், ஆர்ய் சூத்திரர்கள் என்றெல்லாம் கூட பிரிவுகள் கூட இருந்தது. அப்போது வைணவர்கள், குறிப்பாக ராமாஜரின் சீடர்கள் வீரமாக இருந்திருக்காங்க. தங்களுடைய கொள்கையில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார்கள். அதற்கு பிறகு மனித குலத்தில் சில மனிதர்கள் அவதாரம் எடுத்தாங்கன்னு சொல்ற மாதிரியான கதைதான். நாம் இன்றைக்கு பண்ற தவறுகள்தான் நாளைக்கு நம்மை வழி நடத்தும்.

அந்த ஆரம்ப காட்சியில் நீங்க `விஷ்ணு ஸகஸ்ரநாமம்' சொல்லும்போது, அது ஏதோ மனப்பாடம் பண்ணி சொன்ன மாதிரி இல்லையே ? தினமும் கோயிலுக்கு போகிற ஒரு தீவிர வைணவர் சொல்ற மாதிரி தானே இருந்தது.?

`ஆமாம், எனக்கு விஷணு ஸ்கஸ்ரநாமம் முழசா தெரியுமே' கொஞ்சம் சொல்லிக்காட்டுகிறார்.`சுப்ரபாதம் முழசா தெரியும். திருப்பல்லாண்டு கூட தெரியும். எனக்கு அபிராமி அந்தாதி தெரிஞ்சதினாலதான் என்னால் `குணா' படத்தில் அதை சொல்ல முடிஞ்சுது. இதுக்கு காரணம் டி.கே. சண்முகம் அண்ணாச்சி.குழந்தையாக இருந்தபோது அவருடைய நாடக குழுவில இருந்தேன். ஊர் ஊரா போவோம். அப்ப கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போவார். எந்த கோவிலுக்கு போறோமோ அந்த பாடல் சொல்லணும். அப்படித்தான் தேவாரம், திருவாசகம் படிச்சேன். பிரபந்தத்தில எனக்கு பல பாடல்கள் தெரியும்'அபிராமி அந்தாதியிலும், திவ்யபிரபந்தத்திலும் சில பாடல்கள் சொல்லிக்காட்டினார்.
உண்மையிலேயே ஆதி சங்கரரும், ராமானுஜரும்தான் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகள்.அவங்க தப்பா எடுத்துக்கலைன்னு ஒரு விஷயம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கி.வீரமணியும், தொல்திருமாவளவனும் தங்களை ராமானுஜதாஸன்னு சொல்லிக்கிட்டா கூட தப்பில்ல. ஏன் தெரியுமா ? பண்டை காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவுக்காரங்கதான் மூட்டைத் தூக்கிக்கிட்டு போவாங்க. வழியில அவங்களுக்கு முதுகு வலிச்சா, யாரும் உதவிக்கு வரமாட்டாங்க. மூட்டையை கீழே தரையில் வெச்சா, மறுபடியும் சுமக்கிறது கஷ்டம். இப்ப கூட கிராமப்பகுதிகள்ள, நீங்க மூணு கல் நட்ட சுமைதாங்கி கல் இருக்கும். இதை நிறுவனம்னு முதல்ல சொன்னவர் யார் தெரியுமா? ராமானுஜர்தான்.இது ராமானுஜர் படம் எடுத்த ஜீ.வி, ஐயர் சொல்லித்தான் எனக்கே தெரியும். ஒரு நாள் ஒரு கிராமத்து பக்கம் இருந்தோம். அப்ப அங்கிருந்த சுமைதாங்கி கல்லை பார்த்து அதை தொட்டு கும்பிட்டார். என்னன்னு கேட்டேன். இது ராமானுஜருடைய ஏற்பாடு என்றார். இதை யாராவது அந்த காலத்தில யோசிச்சிருப்பாங்களா.இப்படி ராமானுஜரைப் பற்றி கேள்விப்பட்ட பல விஷயங்களில் பாதிப்புதான் அந்த பாத்திரம்.

`இந்த படத்தின் மூலமாக கடவுள் அவதாரம் இருக்குன்னு ஒத்துக்கிறீங்களா ?

`அது உங்க perception. அதுதான் படத்திலேயே சொல்லியிருக்கேனே. கடவுள் இருந்தா நல்லாயிருக்கும்னு. எனக்கு பல ஆன்மிகப் பெரியவர்கள் நல்ல தமிழ் கத்துக் கொடுத்திருக்காங்க. ஒரு விஷயம் சொல்லணும். நான் சினிமாவில வளர்ந்துக்கிட்டுருக்கிற நேரம். வாரியார் சுவாமிகள் எங்கப்பாவுக்கு நல்ல நண்பர். பல சமயங்கள்ள எங்கப்பாவோடு அவருடைய காலட்சேபங்களுக்கு போயிருக்கேன். ஒரு நாள் தீடிர்ன்னு வாரியார் சுவாமிகள் என் வீட்டுக்கு வந்தார். `உனக்கு நம்பிக்கை இல்லேன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முருகனுக்கு கோவில் கட்டறேன். நீ எனக்காக பணம் கொடுக்கணும்'னு சொன்னார். `நீங்க கேட்டா கொடுக்க ஆசைதான். ஆனால் பெரிய பணம் இப்ப இல்லையே' ன்னு சொன்னேன். `நீ எவ்வளவு வேணும்னாலும் கொடு' என்றார். அப்ப எனக்கு சம்பளமே 25 ஆயிரம்தான். பத்தாயிரம் ரூபாய் கொடுத்தேன்.அப்ப எங்கூட இருந்த பகுத்தறிவு நண்பர்கள் கூட எங்கிட்ட ` நீ யாருன்னு சொல்லு'ன்னு சண்டை போட்டாங்க.`நீங்க என்ன வேணும்னாலும் நினைச்சுக்குங்க' அவர் கிட்ட நான் தமிழ் கத்துக்கிட்டேன்'ன்னு சொன்னேன். இப்படி எனக்கு தமிழ கத்துக்குடுத்தவங்க நிறைய பேர் இருக்காங்க. அதனாலதான் இந்த படத்தில் என்னால அசினுக்கு மங்களா சாசனம் சொல்லிக்கொடுக்க முடிஞ்சது. அவங்க மலையாளம் அவங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது.'

இப்படி பல விஷயங்களை சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் தெரியாத பல தொழில் நுட்ப கலைஞர்களுக்காக அவர் ஆங்கிலத்தில் எழதி வைத்திருந்த `தசாவதாரம்' திரைக்கதையை காட்டினார். அதை பார்க்கும்போது இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருக்கு அதிக வேலையே இருந்திருக்காது என்பது புரிந்தது. ஒவ்வோரு அசைவையும் அவரே குறித்து வைத்திருந்தார். அடுத்த படமான `மர்மயோகி' முழ திரைக்கதையும் ஆங்கிலத்தில் தயாராக இருந்தார்.

என்னுடைய வாழ்க்கை லட்சியமே `THE DECLINE AND FALL OF ROMAN EMPIRE' எட்வர்ட் கிப்பன் எழதிய ஏழ வால்யூம்கள் என்னிடம் இருக்கிறது. அதை தமிழாக்கம் செய்ய வேண்டும். அதே போல் `THE RISE AND FALL OF THE THIRD REICH' BY WILLIAM SHEIRER. இதையும் தமிழில் கொண்டு வரவேண்டும். என்னுடைய இந்த ஆசை கமலுக்கும் தெரியும். இப்போது அதற்கு துணையாக பிஷருடைய புத்தகத்தையும் படிக்க சொன்னார். தான் தவில் கற்றுக்கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

தலைநிறைய் பல விஷயங்களை அவரிடமிருந்து வாங்கி நிரப்பிக்கொண்டு திரும்பினோம்.

Jun 23, 2008

கார்க்கிக்கு கல்யாணம்


ஜூன் 22 ந்தேதி சென்னையில் கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கிக்கும், நந்தினிக்கும் சென்னை கத்திப்பாரா சந்திப்பில் உள்ள லே மெரிடியன் ஹோட்டலில். திருமணம் நடந்தது.நான் `தினமணி' ஆசிரியனாக இருந்த போது `வள்ளுவர் முதல் வைரமுத்துவரை' என்று ஒரு தொடரை தினமணி சுடரில் கொண்டு வந்தேன்.அந்த நாளை மறக்காமல் எனக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். போயிருந்தேன்.

அருமையான திருமணம், நெகிழ்ந்து போய் பேசினார் கவிஞர். நெஞ்சிருக்கும் வரை படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழதிய `பூ முடிப்பாள் இந்த பூங்கழலி' பாடலின் சரணத்தைச் சொல்லி தன் பேச்சை துவக்கினார். நிறைய உணர்ச்சி வயப்பட்டார்.வளம் தந்த வலிமைதான் அந்த மேடை என்றாலும், வடுகபட்டியிலிருந்து நடந்து இந்த உயரத்திற்கு வந்த வலியை பிள்ளையின் திருமணம் நினைவு படுத்தாமலா போகும்!அந்த உணர்ச்சியில் உண்மை இருந்தது.

கவிஞர்கள் குழந்தை மாதிரி. அவர்களின் கால்கள் மண்ணில் இருக்காது. அதனால் பல கவிஞர்களுக்கு ஒரு பிடி மண் கூட சொந்தமாக இருக்காது. `சேர்ந்தே இருப்பது வறுமையும்,புலமையும்' என்பதை உடைத்து காட்டிய பெருமை இரண்டு கவிஞர்களுக்கு உண்டு. ஒன்று கவிஞர் வாலி, இன்னொன்று வைரமுத்து.

வைரமுத்துவின் வரிகளில் சொல்லவேண்டுமானால், அவர் எழதிய கவிதையைத்தான் நினைவு படுத்தவேண்டும்.

வீடு பேறு

அரசாங்கத்திற்கு ஏழைக் கவிஞன் இருமிக்கொண்டே எழதினான் இப்படி:

``வாடகை தர முடியாமல்
வருகிற சண்டையால்
இப்போது நானிருப்பது
இருபத்தேழாவது வீடு
இன்றோ
நாளையோ
நான்
இருமிச் செத்ததும்...
நீங்கள் எனக்கு
`நினைவகம்'அமைக்க
எத்தனை வீட்டைத்தான்
வாங்கித் தொலைப்பீர்கள்.
(நன்றி: 1977 வைரமுத்து கவிதைகள் பக்கம் 141)

இந்த நிலை வைரமுத்துவிற்கு இல்லை.பொன்மணி வைரமுத்து மாளிகையில் 270 வீடுகளை உள்ளடக்கலாம்.கவிஞர்கள் வளமாக இருப்பது ஒரு வகையில் தமிழக்கு நல்லது. பொருளாதார நிர்பந்தங்களினால் பல நல்ல கவிஞர்கள் கருவிலேயே கருகிப் போகிறார்களே!.

திருமண விழா ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஒரு சர்வ கட்சி மாநாடு. மைனஸ் அதிமுகவாக இருந்தது.நாளைக்கு யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், அன்றே எங்கள் அரசியல் நட்பு தொடர்ந்தது என்று கலைஞர் சொல்லிக்கொள்ளலாம். `மத'சார்புள்ள பா.ஜ,கவின் சார்பில் திருநாவுக்கரசரும் மேடையில் இருந்து பேசினார்.எல்லா கட்சி தலைவர்களையும் கொண்ட ஒரு மேடை. அதிமுகவும் சேர்ந்திருந்தால், தமிழக அரசியலிலேயே ஒரு திருப்பு முனை ஏற்படுத்திய மேடையாக இருந்திருக்கும்.
வியாபார காங்கிரஸ்காரர்களான தங்கபாலுவும், ஜே.எம். ஆருணும்தான் பிள்ளை வீட்டுக்காரர்கள் மாதிரி வலம் வந்து கொண்டிருந்தார்கள்.வைரமுத்து பேசும்போது கடைசி வரிசையில் வந்து அமர்ந்தார் ஏ.ஆர். ரஹ்மான். அவரை உபசரிக்க ஆரூணும், கவிக்கோ அப்துல் ரஹ்மானும் போட்டி போட்டார்கள்.

1979ம் வருடம் `விசிட்டர்' பத்திரிகையில் வைரமுத்து எழதிய கவிதை இது.
தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம்

நம்மூர் ஜனங்கள்
வாழ்க்கையை வெளியே தொலைத்துவிட்டு
சினிமாக் கொட்டகையின்
செயற்கை இருட்டில் தேடுகிறார்கள்
நம்மூர் ஜனங்கள்
வேறேங்கினும் வடித்த
வேர்வையை விடவும்
சினிமா டிக்கெட்டுக்குச்
சிந்தியதே அதிகம்
சினிமா என்னும் இந்த
ராட்சச இருட்டின்
கைகளைப் பிடித்துக்கொண்டு
இன்னும் நாம் நடப்பது
எத்தனை தூரம்?
இன்று
படத்துக்கு பாட்டெழதக்
கம்பனே வந்தாலும் கதை வேறு.
சீதையைப் பற்றிச்
சிலேடையில் சொன்னால்தான்
கம்பனுக்குச் சினிமாக்
கம்பெனியில் இடமுண்டு
இங்கே வசனம் எழத
சிறுகதை சூரியன் செகாவ் வந்தாலும்
அவன் பேனாவை
`மஞ்சள்' மையால்தான் நிரப்பிக்
கொடுப்பார்கள்.
இளைஞர்கள் கைகளிலேனும்
இந்த அழக்குத் திரை
ச்லவை செய்யப்படுமா?
சற்றுப் பொருத்திருப்போம்
இல்லையெனில்
மக்களை சுருள வைக்கும்
திரைப்பட சுருளையெல்லாம்
ஒரு தீக்குச்சிக்கு தின்னக்கொடுப்போம்.

(வைரமுத்து கவிதைகள் பக்கம் 235)

இப்படி சினிமா வாய்ப்பு கிடைக்காத காலத்தில் வைரமுத்து எழதிய கவிதைகளையெல்லாம் படித்த பாரதிராஜா அவரை அழைத்து `நிழல்கள்' படத்திற்கு பாட்டெழத சென்னை எக்மோரிலுள்ள அட்லாண்டிக் ஹோட்டலில் வைரமுத்துவை இளையராஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் சில நிமிடங்களிலேயே எழதிய பாடல்தான் `இது ஒரு பொன்மாலைப் பொழது' அதில் சரணத்தில் வரும் `வானம் எனக்கு ஒரு போதி மரம்,நாளும் அது நாளும் எனக்கொரு சேதி தரும்' வரிகள் அன்றைய இளைஞர்களை அவர் பக்கம் திரும்ப வைத்தது .ஆனால் அன்றைய நாட்களை வைரமுத்து திரும்பி பார்க்கவில்லையா என்பது தெரியவில்லை. காரணம் இசைஞானி இளையராஜாவை காணவில்லை. ஒரு வேளை வைரமுத்து காணாமல் போகட்டும் என்று ஒரு காலத்தில் நினைத்த இளையராஜா மீதான் காழ்ப்புணர்ச்சி இன்னும் கவிஞருக்கு போகவில்லையா என்பது தெரியவில்லை.விஷயம் அறிந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்தி. இளையராஜாவின் `திருவாசக' பாடல் வெளியிட்டின்போதே இருவரையும் இணைக்க பாரதிராஜா முயன்றார். ஆனால் ராஜாதான் மனம் இறங்கவில்லை என்றும் ஒரு தகவல் உண்டு.

கனிமொழி தன் தாயாருடன் வந்திருந்தார். 1987 ஆகஸ்ட மாதத்தில் அவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் எம்.ஏ. பொருளாதாரம் படித்துக்கொண்டிருந்தபோது முதலில் நான் பேட்டி எடுத்தேன். அப்போதிருந்த அப்பழக்கற்ற கவிஞர் கனிமொழியிடமிருந்த வெகுளித்தனத்தை காலமும், அரசியலும் கடத்தியிருந்ததை பார்க்க முடிந்த்து.

எழத்துலக சிங்கம் ஜெயகாந்தன் பூப்போட்ட சட்டையில் முயலாகியிருந்தார்.


அரைகுறை தமிழை தெரிந்து கொண்டு சில்லறை சல்லாபங்களில் ஈடுபட்டு. தமிழ் சினிமாவையும். அரசியலையும் கெடுத்துக்கொண்டிருக்கும் பொறுக்கிகள் நிறைந்த கூட்டம் திராவிட முன்னேற்றக்கழகம்'(1972ல் `ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்' துக்ளக் பத்திரிகையில் எழதிய தொடர். பின்ன்ர் அது புத்தகமாக வந்தது)


இந்த ஜெயகாந்தனுக்கு திமுக சார்பில் முரசொலி விருது வழங்கப்பட்டது. அவரது மகனுக்கு அரசாங்க வேலை. அவருக்கு சரியான மருத்துவ கவனிப்பு. ஒரு அரசு அந்த மாபெரும் எழத்தாளனுக்கு செய்ய வேண்டிய மரியாதைதான். ஆனால் சுயமரியாதைக்காரர்களின் ஆட்சி காலத்தில், பலரின் சுயமரியாதை பறிக்கப்படும்போதுதான் வருத்தமாக இருக்கிறது. `சிங்க' ஜெயகாந்தனை நினைவில் கொண்டு அவரிடம் ஆசி பெற்றேன்.

ஆச்சி மனோரமா மணமேடையை விட்டு இறங்கும்போதே `மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு' என்ற கந்தன் கருணை பாடலை பாடிக்கொண்டே இறங்கினார். நான் அவரை நெருங்கி ` வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு' என்று முணுமுணுத்தபடி நெருங்கினேன். தாயன்போடு அணைத்துக்கொண்டார்.உடலை மதிமுகவிற்கு அர்பணித்தாலும், மனதை கலைஞரிடம் பறிகொடுத்து மயங்கி போயிருக்கும் மதிமகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் `கலைப்புலி' தாணு, கலைஞர் கண்களில் படாமல் மூன்றாவது வரிசைக்கு போய் அமர்ந்து கொண்டார்.அனேகமாக மதிமுகவின் ஒரே பிரதிநிதி இவர்தான்.வைகோ திமுகவை விட்டு வெளியேற-யேற்ற இருந்த சமயம், அவரை சமாதானப்படுத்தும் தூதுவர்களில் ஒருவர் வைரமுத்து.

வைரமுத்துவின் நெருங்கிய நண்பர், சென்னை வடபழனியில் பழைய திரைப்படப்பாடல்கள் ஆராய்ச்சி மையம் வைத்திருக்கும் அலிகான் உணர்ச்சி பொங்க வீற்றிருந்தார் (இவரைப் பற்றி பின்ன்ர் விவரமாக எழதவேண்டும். தமிழ் சினிமாவின் அனைத்து பாடல்களும் இவரிடம் ஒலி, ஒளி நாடாக்களாக உள்ளது.)

மூன்று பெண்களுக்கு வைரமுத்து நன்றி சொன்னார். ஒன்று " கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் - அது காலத்தின் கட்டாய நிர்பந்தம். அடுத்தவர் மணப்பெண்ணை பெற்ற - ஜெயம்மாள் ஈஸ்வரமூர்த்தி - இது சம்மந்தி மரியாதை. மூன்றாவதாக முக்கியமானவர் - பொன்மணி வைரமுத்து - இது பாவ மன்னிப்பு.குடும்பத்தை மறந்து தொழிலிலேயே கவனமாக இருக்கும் ஒவ்வொரு கணவன்மார்களும் ஒரு கட்டத்தில் செய்ய வேண்டிய கட்டாய மண்டியிடுதல்.அவசியம்தான். கவிப்பேராயினி' பொன்மணி அவர்கள் துரும்பாய் இளைத்திருந்தார். பிள்ளைகளை செப்பினிட ஒடாய்த் தேய்திருந்த தேகம்.கைகூப்பி வணங்க வேண்டிய ஒரு தாய், ஒரு ஆசிரியை.

அதிமுகவின் பிரதிநிதியா அல்லது தேவர் இன தூதுவரா என்று புரிந்து கொள்ள முடியாத வருகை எம். நடராஜன்(சசிகலாவின் கணவர்) கருணாநிதி அரங்கை விட்டு வெளியேறியவுடன் உள்ளே வந்தார்.

பின்னர் பாரதீய ஜனதாவின் இல. கணேசன் வந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் திருமணங்கள் பல அரசியல் திருப்பங்களை நடத்தியிருக்கிறது.கருணாநிதி ஒன்றை கூடாது என்று சொன்னால் அது கூடும் என்று பொருள். உதாரணமாக `எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்' என்றால் வேண்டும் என்று அர்த்தம். ` மத சார்புள்ள கட்சிகள் கூடாது' என்றால் அது கூடுகிற வாய்ப்பு உண்டு என்று அர்த்தம்.

நாடெங்கும் காங்கிரஸ் எதிர்ப்பு அலை. இப்போது நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வந்தால், திமுகவிற்கு காங்கிரஸ் ஒரு பாரம். அதனால் அரசியலில் எதுவும் நடக்கலாம். வைரமுத்து பேசும்போது, ` கலைஞர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று வரலாறு பதிவு செய்துகொள்ளும்'என்றார். அரசியலில் இந்த திருமணத்தின் மூலம் ஏதாவது திருப்பம் நேர்ந்தால் அதையும் வரலாறு பதிவு செய்து கொள்ளும்.

இந்த திருமணத்தின் எனக்கொரு ஆத்ம திருபதி. 2001- 2003 ஜீன் வரை நான் ஜெயா டிவியில் இருந்தேன். நான் தொலைகாட்சியில்தான் சேர்ந்தேன். ஆனாலும் எனக்கு விமர்சகர்களால், இரட்டை இலை முத்திரை குத்தப்பட்டது. ஆனால் இந்த விழாவில் கனிமொழி,விஜயா தாயன்பன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பரிதி இளம்வழதி, ஆயிரம் விளக்கு உசேன். தமிழச்சி, அவரது கணவரும் ஐபிஸ் அதிகாரியாக முதல்வரின் பாதுகாப்பு பிரிவிலிருக்கும் சந்திரசேகர்,வாகை சந்திரசேகர், இராம நாராயணன் போன்றவர்கள் என்னை `கரை'படாத பத்திரிகையாளனாக வரவேற்றதில் ஒரு ஆத்ம திருபதி.

`தசாவதாரம்' படம் எப்படி? என்று ஆர்வத்தோடு என்னிடம் கேட்டார் கமல்ஹாசன்.எளிமையின் சின்னங்களான கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான நல்லகண்ணுவும், வரதராஜனும் வந்திருந்தார்கள். கூட்ட நெரிசலில் உள்ளே வரமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான டி. ராஜா. அதிமுகவிலிருந்து வந்த ஒரே பிரதிநிதி மலைச்சாமிதான்.நான் பிறந்த சமூகயியத்தின் மீது கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், என்னை அன்போடு அணுகுவார். திக வீரமணி. மிகவும் அன்போடு குசலம் விசாரித்துவிட்டு போனார்.

விழாவிற்கு மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் வந்திருந்தார். தினமும் காலையில் வைரமுத்துவுடன் தொலைபேசியில் பேசுவதாக முதல்வர் சொன்னார். வைரமுத்துவிற்கு ஒரு வேண்டுகோள். விஸ்வநாதனுக்கு முதல்வரிடம் சொல்லி ஒரு தேசீய விருது வாங்கிக்கொடுக்கக்கூடாதா ? இப்போது விருதுகள் சிபாரிசினால் வாங்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியாததல்ல. நீங்கள் அதைச் செய்தால், திரைஇசை சரித்திரத்தில் நிச்சயம் நீங்கள் இடம் பெறுவீர்கள்.
ஒன்று மட்டும் மணமக்களுக்கு சொல்லுவேன். அதுவும் மருமகளுக்கு மாமனாக இருக்க மாட்டேன். தந்தையாகவே இருப்பேன் என்று மணமேடையில் வாக்குறுதி கொடுத்த வைரமுத்து வரிகளில் சொல்வேன்.

தெயவத்தை தேடாத ஞானம் வேண்டும்
தெய்வங்கள் நாமென்று தெளிய வேண்டும்
பொய்சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும்
போராடி வெல்கின்ற புலமை வேண்டும்
கையிரண்டும் உழைக்கத்தான் கவனம் வேண்டும்
காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும்
மெய்யிந்த வாழ்வென்று நம்பவேண்டும்

பலரோடு ஒன்றாக பழக வேண்டும்
பனித்துளிக்குள் உலகத்தை பார்க்க வேண்டும்.
வாழ்க மணமக்கள்.

Jun 19, 2008

மாண்மிகு மனிதர்கள்





ஆர்.நட்ராஜ் IPS





பத்திரிகையாளனாக வாய்ப்பு கிடைப்பது, ஆன்மிக மொழியில் சொல்ல வேண்டுமானால் ஒரு பூர்வ ஜென்ம புண்ணியம். எப்போதுமே செய்தி தேடலில் அலையும் நிருபனுக்குத்தான் மானுடத்தின் பல பரிமாணங்களைப் பார்க்கிற ஒரு வாய்ப்பு கிடைக்கும். என்னுடைய பத்திரிகை அனுபவத்தின் வயது இருபத்தியெட்டு. இந்த ஆண்டுகளில் பல மனிதர்களை கண்டு வியந்திருக்கிறேன். அவர்களிடமிருந்து பல நல்ல விஷயங்களை அவர்களுக்கு தெரியாமல் `திருடி'க் கொண்டு அதன் மூலமாக என்னை நானே திருத்திக்கொண்டிருக்கிறேன்.என் படிக்கும் பாணியைக் கூட செப்பனிட்டிக்கொண்டிருக்கிறேன். நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகளுக்கு மாண்புமிகு என்கிற அடைமொழி பொருந்தாது. ஆனால் தன் வாழ்க்கை தரத்தால் நம்மிடையே உண்மையான மாண்புமிகு மனிதர்கள் இருக்கிறார்கள். என்னை பாதித்த அந்த மாண்புமிகு மனிதர்களைப் பற்றி இந்த பகுதியில் தொடர்ந்து எழதுவேன். அதன் முதல் பகுதி இது.

அப்போது 2001ம் வருட இறுதி என்று ஞாபகம். நான் ஜெயா தொலைக்காட்சியில் நாட்டு நடப்பு (current affairs) நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த நேரம். அப்போதுதான் ஆர். நட்ராஜ் புதிதாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக பொறுப்பேற்றிருந்த நேரம். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்க அவருடன் தொலைப்பேசியில் பேசி, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
அப்போதுதான் அவர் வீரப்பனைப் பிடிக்கும் விசேஷ அதிரடப் படைக்கு தலைவராக சத்தியமங்கலத்தில் இருந்து விட்டு சென்னை நகர கமிஷனராக வந்திருந்தார். என்னைப் பற்றிய சுய அறிமுகத்தை ஒரிரு நிமிடங்கள் கேட்டார். `என்ன, மிஸ்டர் சுதாங்கன்,சத்தியமங்கலம் காட்டுக்கு இப்பதான் போனேன். அதுக்கு முன்னாடி சென்னையில தான் இருந்தேன், உங்களை எனக்குத் தெரியாதா? ஜீனியர் விகடன் காலத்திலிருந்து நான் உங்கள் வாசகன்' என்றார். அப்படித்தான் நான் அவருக்கு அறிமுகமானேன்.அவர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் அவரைப் பற்றிய தகவலை திரட்ட துவங்கினேன்.

குணசித்திர நடிகர் பூர்ணம் விஸ்வநாதனின் அண்ணன் பூர்ணம் ராமசந்திரனின் புதல்வர்.இவர் தந்தை அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். உமா சந்திரன் என்கிற பெயரில் பல நாவல்களை எழதியவர். ரஜினிகாந்துக்கு திருப்பு முனையாக இருந்த படம் `முள்ளும் மலரும்' அந்த படத்தின் கதை இவர் தந்தையுடையது.

ஆனால் என்னுடைய கவனத்தை அவர் 1984ம் ஆண்டே கவர்ந்தவர். அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 2ந் தேதி, வியாழக்கிழமை இரவு 10.52க்கு சென்னை விமான நிலையத்தில் ஒரு குண்டு வெடிப்பு. இதில் சுமார் 92 பேர் உயிரிழந்தார்கள். இந்தியாவே பீதிக்குள்ளானது. அப்போது மாநில காவல் துறையின் உளவுத்துறை டிஜிபியாக இருந்தவர் மோகன்தாஸ். மாநில முதல்வர் எம்.ஜி.ஆர். குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்கும் பொறுப்பை மோகன்தாஸ் ஏற்றுக்கொண்டார். அப்போது க்ரைம் பிராஞ்ச் சிஐடி பிரிவின் எஸ்பியாக இருந்தவர் ஆர்.நட்ராஜ். இவரிடம் அந்த வழக்கை ஒப்படைக்க விரும்பினார்.`எனக்கென்று ஒரு படையை நானே தேர்ந்தெடுத்துக்கொள்வேன். எனக்கு சுதந்திரம் கொடுத்தால் நான் பத்து நாட்களில் குற்றவாளிகளை பிடிப்பேன்' என்றார்.

`உங்களுக்கு 11 நாட்கள் தான் தருவேன் அதற்குள் நீங்கள் குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும்'என்றார். மோகன்தாஸ்.சவாலை ஏற்றுக்கொண்டார் நட்ராஜ். இந்த சம்பவம் நடந்த ஐந்தாவது நாள் செய்தியாளர்களுக்கு மோகன்தாஸிடமிருந்து அழைப்பு. அவரை சுற்றி பல அதிகாரிகள் இருந்தார். நட்ராஜீம் ஒருவர்.க்ரைம் பிராஞ்ச் சிஐடி பிரிவிலுள்ள அதிகாரிகளெல்லாம் எங்கள் பார்வையில் விழ மாட்டார்கள். மக்களோடு தொடர்புடைய பதவிக்காரர்கள் பக்கம்தான் நிருபர்கள் சுற்றி வருவார்கள். செய்திகளுக்காக. அதனால் நட்ராஜ் செய்தியாளர்களிடம் அப்போது அத்தனை பிரபலமில்லை.

அந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை காவல் துறை கண்டுபிடித்துவிட்ட செய்தி எங்களுக்கு சொல்லப்பட்டது. அதற்கு காரணம் நட்ராஜ் தலைமையில் இயங்கிய படைதான் காரணம் என்று பெருமையோடு சொன்னார். `அவரது படைக்கு மத்திய அரசிடமிருந்து நற்சான்றிதழ் வாங்கித் தருவேன்' என்றார். அது இன்றுவரை நடக்கவில்லை என்பது வேறு விஷயம்.

அப்போது இந்த செய்தி ஜீனியர் விகடனிலும் வெளியானது. பிறகு 2001ல்தான் எனக்கு நேரடி அறிமுகம்.நேரில் பேசும்போது அளந்து பேசுவார். மேடையில் பேசும்போது பிளந்து கட்டுவார்.நிறைய படிப்பார். மெல்லிசை, கர்நாடக இசை, பாப் இசைப் பிரியர்.அவரை என்னுடன் சகஜமாக பேச வைக்க எனக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தது. பண்டிகை காலங்களில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள், அதுவும் சென்னை கமிஷனர் பதவியில் இருப்பவர்களுக்கு பரிசுகள் குவியும். இவர் எந்தப் பதவியில் இருந்தாலும், இனிப்பு பெட்டிக்கு கூட அவரது அறையில் அனுமதி இல்லை.நன்றாக வயலின் வாசிப்பார். ஒரு பரம ரசிகர்.பல மொழிகள் தெரியும். குறிப்பாக நேபாள மொழி நன்றாக பேசுவார்.களத்தில் இறங்கி வேலை செய்ய மிகவும் பிடிக்கும். காவல் துறையில் சில பதவிகளை `தண்டனை' பதவிகள் என்று கருதப்படுவது உண்டு. அதை அவரிடம் சொன்னால் ஒப்புக்கொள்ளவே மாட்டார். `அரசாங்கத்தில் எல்லா பதவியுமே முக்கியமான பதவிதான். நாம் அரசாங்கத்துக்குத்தானே வேலை செய்ய வந்திருக்கோம். கமிஷனர் பதவியிலதான் இருப்பேன்னா வந்தோம்' என்பார்.

விஜயகுமார் வீரப்பனின் படைக்கு தலைமையேற்குமுன் அதன் தலைவராக இருந்த்வர் நட்ராஜ்.அந்த படையின் மீது பல குற்றச்சாட்டுகள். அதிரடிப் படை என்பது ஆட்சியாளர்களுக்கு பிடிக்காதவர்களை தூக்கி அடிக்கும் பகுதியாக அது கருதப்பட்ட காலம். பகுதி மக்களிடம் கூட கேலிக்கும், பழிக்கும் ஆளாகியிருந்தது படை. இவர் தலைமை பொறுப்பேற்றதும் தன் படைக்கு கொடுத்த முதல் உத்தரவு. `இனி கொஞ்ச காலத்திற்கு நாம் வீரப்பனை மறப்போம். நாம் இந்த பகுதி மக்களுக்கு உதவி செய்யத்தான் வந்திருக்கிறோம். கிராமங்களுக்கு போய் அந்த பகுதி மக்களுக்கு என்ன தேவையோ அதை கொடுப்பதுதான் நம் வேலை' என்றார். அதற்குப்பிறகு அதிரடிப் படையின் போக்கே மாறியது. ரேஷன் பொருட்களை வண்டியில் வைத்து கிராமங்களுக்கு கொண்டு சென்றார்கள். மருத்துவ வசதி இல்லாத கிராமங்களுக்கு மருத்துவமனைகள், ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு இந்த படையில் படித்த இளைஞர்களே போய் வகுப்புகள் எடுப்பார்கள். பல மருத்துவ முகாம்கள் என்று மக்களோடு ஒன்றிப் போனது படை. மக்கள் உதவி இல்லாமல் வீரப்பனை பிடிக்க முடியாது என்பதை தெரிந்தே வைத்திருந்தார். அதை செய்ய வேண்டுமானால் அந்தப் பகுதி மக்கள் அதிரடிப் படையை நேசிக்க செய்ய வேண்டும் என்பதுதான் இவர் நோக்கம்.

இவர் தளம் அமைத்தார். விஜயகுமார் காரியத்தை முடித்தார். இதை வீரப்பனை வீழ்த்திய பிறகு சத்தியமங்கலத்தில் நடந்த ஒரு விழாவில் நட்ராஜ் முன்பாகவே இதை ஒப்புக்கொண்டார் விஜயகுமார். இவர் அளித்த பேட்டி ஒன்றை பத்திரிகையாளர்கள் திரித்து எழத, அதனால் கமிஷனர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.மனித உரிமை கழகத்தின் இயக்குனரானார். அதுவரையில் அப்படி ஒரு கழகம் இருப்பதே மக்களுக்கு, ஏன் பத்திரிகையாளர்கள் பலருக்கே தெரியாது. அது ராயப்பேட்டையில் ஒரு கட்டடத்தில் நாற்றமடித்த கொண்டிருந்த ஒரு கூடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. இவர் பதவியேற்றதும்தான் மனித உரிமை கழகத்திற்கு அமைச்சர்கள் வசிக்கும் க்ரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதற்கு முன்பு இருந்தவர்கள் யாரும் அதைப் பற்றி கவலைப்படவேயில்லை. காரணம் அந்த பதவி அவர்களைப் பொருத்தவரையில் `தண்டனை' பதவி.உடனே களத்தில் இறங்கினார். ஒரு வாரத்திற்குள் அவரது அலுவலகம் க்ரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள் வீடுகளுக்கு நடுவே ஒரு பிரும்மாண்ட நீல நிற பலகையோடு மாறியது. இன்றைய ஆட்சியாளர்களுக்கு இவரை பிடிக்கவில்லையென்றாலும், திமுகவின் வருங்கால தலைவர் மு.க.ஸ்டாலின் பங்களாவிற்கு பக்கத்து வீடு இவருடைய அலுவலகமாக மாறியது.

நட்ராஜ் ஒரு ஆன்மிகவாதி. தினமும் பூஜை செய்யாமல் வீட்டை விட்டு கிளம்ப மாட்டார். அந்த பகுதியிலிருந்த மற்ற வீடுகளின் பெயர்கள், குறிஞ்சி, முல்லை,மல்லிகை, பொதிகை என்றெல்லாம் இருக்கும். பக்தரான இவரது அலுவலகத்தின் பெயர் மட்டும் திருவரங்கம்.ஒவ்வொரு நாளும் மனித உரிமைகள் மீறப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதை பற்றி எந்த ஆட்சியாளர்களும் கவலைப் படுவதில்லை. அவர்கள் பகவானைத்தான் நம்ப வேண்டும்.` எங்கும் சுற்றி ரங்கனைத்தான் சேவிக்க வேண்டும்' என்பதைப் போல,பாதிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கு அடைக்கலமானது இந்த `திருவரங்கம்'.

மூன்று மாதங்களுக்கு முன்னால் இவர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். சேர்ந்த நாளிலிருந்து இங்கும் களத்தில் சுறுசுறுப்பு. சில ஆண்டுகளுக்கு முன் பல நிதி நிறுவனங்கள் நடுத்தர மக்களுக்கு அதிக வட்டி ஆசை காட்டி பல கோடிகளை கொள்ளையடித்தது. முதல் கட்ட நடவடிக்கையாக இரண்டு பெரிய நிதி நிறுவன அதிபர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவை பெற்றார்.இழந்த பலருக்கு பணத்தை திருப்பி பெற்றுக்கொடுத்தார். இது யாருக்கோ பொறுக்கவில்லை. சென்ற வாரம் அங்கிருந்தும் இவர் மாற்றப்பட்டு சிறைத்துறை ஏடிஜிபியானார்.

இந்த காலகட்டத்தில் நாங்கள் வேறு மாதிரி நெருக்கமானோம். நானும், அவரும் படித்தது திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர் நிலைப் பள்ளி. அவர் அந்தப் பள்ளியில் எனக்கு சீனியர். அங்குள்ள பழைய மாணவர் சங்கத்திற்கு இந்த ஆண்டு நூற்றாண்டு. அந்த அமைப்பில் அவர் கெளரவ தலைவர். நான் செயலாளர்.

சிறைத்துறை பதவியேற்பதற்கு முன் அன்று காலையில் கூட பணம் இழந்த பலருக்கு சுமார் இரண்டு கோடி மீட்டு கொடுத்துவிட்டுத்தான் போனார். அப்போது அவருக்கு போன் செய்தேன்.ஒரு பத்திரிகையாளன் கைது செய்யப்பட்டால் அது போன்ற விளம்பரம் அந்த பத்திரிகையாளனுக்கு ஆயுளில் கிடைக்காது. பல புலனாய்வு செய்திகளையும், ஆட்சிக்கு எதிரான கட்டுரைகள் எழதியும் கூட எனக்கு அந்த `பாக்கியம்' கிடைக்கவில்லை.` எனக்கு அப்ப்டி ஒரு வாய்ப்பை நீங்களாவது கொடுக்க கூடாதா?' என்றேன் வேடிக்கையாக. `அப்படித்தான் வரணுமா என்ன? வாருங்கள், நீங்கள் நிறைய படிப்பவர், நன்றக பேசக்கூடியவர். அங்கு வந்து கைதிகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லலாமே' நெகிழ்ந்து போனேன். சில பதவியால் பலருக்கு பெருமை. வெகு சிலரால்தான் அந்த பதவிகளுக்கு பெருமை. சிறைத்துறை ஏடிஜிபி பதவி இனியும் கூழாங்கல்லாக இருக்காது. மன்னர்களின் மகுடத்திலிருக்கும் வைரக்கல்லாக மாறும் என்பது மட்டும் நிச்சயம்.

`கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை, அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை. சிறைச்சாலை ஒரு கல்லூரி' இந்தக் கட்டுரையை முடிக்கும் போது எங்கிருந்தோ காற்றலையில் இந்த பாடல் வந்து காதில் விழகிறது.

Jun 12, 2008

`இந்தியன்' படம் ஒரு ஃபாசிஸம்




(கமல்ஹாசன் எனக்கு 1996ல் அளித்த பேட்டி தொடரிது. ஆனால் இந்த பேட்டி எல்லா காலத்துக்கும் பொருந்தும்)


இந்த சந்தோஷம் போதுமா ? அதிக பட்சமா நீங்க செய்யக்கூடியது `இந்தியன்'படத்துல நூறும்,இருநூறும் லஞ்சம் வாங்குகிற குமாஸ்தாக்களைக் கொன்று, திருபதியடைஞ்சுக்கீறீங்க இல்லையா ?


ஒரு படத்தினால தீர்வுங்கறது நம்மை நாமே ஏமாத்திக்கிற விஷயம். படத்தையும், நிஜத்தையும் குழப்பிக்கக்கூடாது.` இந்தியன்' படம் மிகப்பெரிய வெற்றிப்படம்தான். ஆனா, படத்தில சொல்றதையெல்லாம் மக்கள் சீரியஸா எடுத்துக்கிறது இல்ல. அரசியல்வாதிகளும் கூட.




`இந்தியன்' படத்தில சொல்லப்பட்ட கருத்துக்கள் கூட ஃபாஸிஸம். நான் டைரக்டர் சங்கர் கிட்ட ` இது என்ன ஃபாஸிஸக் குரலா இருக்கே. எனக்கு பயமா இருக்குன்னு சொன்னேன்.இது ஹிட்லர் பேசின சாராம்சம்தான்.வேறு பட்டியல் போட்டு,மக்கள் குறைகளை லிஸ்ட் எடுத்து, வேற வாதங்களுடன். ஆனால், இதே கருத்தைச் சொன்னவர்தான் மிஸ்டர் அடால்ப் ஹிட்லர்.




சரித்திரத்தை பார்த்தா அவரும் கூட ஜெர்மன்காரர் கிடையாது. ஆஸ்திரியாவிலிருந்து ஜெர்மனிக்கு குடியேறியவர். இங்க எம்,ஜி,ஆர். மாதிரி.அதனால்தான் `ஃபாஸிஸ' வெறி இருக்கேன்னு சங்கர் கிட்ட கேட்டேன்.


`அதெல்லாம் மக்களுக்குத் தெரியாது. நீங்க ஏன் அப்பன் குதிருக்குள்ள இல்லேங்கிற மாதிரி அதையெல்லாம் தோண்டறீங்க?எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். யாராலயும் அதைச் செய்ய முடியலை.


எப்படி ஒரு `ரிக்ஸாகாரன்' எப்படி ஒரு ` அரசிளங்குமரி' யை காதலிக்கிறது ஒரு fantaasyயோ அதமாதிரி படம்தான் ஸார் இது இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க'ன்னு சொன்னார். அது எனக்கும் பிடிச்சிருந்தது. அதனால தான் எந்தக் கேள்வியுமே கேட்கல. இந்த விவாதம் எனக்கு நியாயமா பட்டுது'


இதப்பத்தி நான் கோவிந்த் நிஹாலனிகிட்ட கூட பேசிக்கிட்டிருந்தேன்.` என்னய்யா இது பயங்கரமான ஃபாஸிஸ ஃபிலிம்' அப்படின்னார். ஆனால், படம் யாருக்குமே இது பயங்கரமா தென்படலை. ஆடியன்ஸீக்கும் சரி, சென்ஸாருக்கும் சரி, ஒரு சில பத்திரிகைகளைத்தவிர, இதுக்கு பாராட்டுதான் கிடைச்சது.




ஒரு வேளை ஷங்கர் சொன்னது மாதிரி அந்த ஃபேண்டஸிதான் ஜெயிச்சதா?


ஆமாம், இந்தப் படம் பாதசாரிகளோட கனவு. கார்ல போறவனுக்கும் கனவு உண்டு.அவனுக்கு ஸ்விஸ் பாங்க்ல நமக்கு ஒரு கணக்கு இருக்கக்கூடாதங்கிற கனவு இருக்கும். இந்த பாதசாரிதான் சுவிஸ் வங்கியைப் பத்தி ந்னைக்காம, சுட்டுக் கொல்லணும்னு சொல்லுவான்.



இவுங்களையெல்லாம் சுட்டுக் கொன்னுட்டா எல்லாம் சரியாயிடுமா ? ஆகாது. இவுங்களையெல்லாம் கத்தியக் காட்டியெல்லாம் மிரட்ட முடியுமா? எத்தனை பேர் தலைக்கு மேல டெமாக்களிஸ் கத்தி தொங்கிக்கிட்டிருக்கு? அவுங்க எல்லாம் திருந்திட்டாங்களா? யாருமே திருந்தினதா தெரியலை.


எல்லாருமே ஒருத்தரையொருத்தர் சுட்டிகாடிக்கிட்டு... ஒரு கை சுட்காட்டிக்கிட்டு இருக்கு; இன்னொரு கை கிம்பளம் வாங்கிக்கிட்டு இர்ருக்கு. அதுதான் இன்றைய நிலை.


குழந்தைக்கு பொய் சொல்லக்கூடாதுன்னு கத்து கொடுக்கிறவர் அப்பா. அதே அப்பா டெலிபோன்ல கடன்காரன் கூப்பிட்டா இல்லேன்னு சொல்லச் சொல்வாரு. அந்தக் குழந்தையோட குழப்பம்தான் இன்னைக்கு மக்களோட குழப்பம்.


ஒரு பக்கம் இதையுன்ம் சொல்றேன்;ஒரு பக்கம் அதையும் சொல்றேன். இதுல வந்து ரஜினிகாந்த பேசினது சரியா, நீங்களும் ஏன் போகலேங்கிறதெல்லாம் தேவையில்லாத கேள்விகள்.




கம்பராமாயணத்தி வரும் இந்த மரம் விழந்தது, அந்த மரம் விழந்தது, சரயு நதி வெள்ளம் இதையெல்லாம் அடிச்சுக்கிட்டு வந்தது'ன்னு வரும். அதுமாதிர்ரி இந்தமுறை வந்தது மக்கள் வெள்ளம். அதுல இந்த மரமும் விழந்தது, அந்த மரமும் விழந்தது. குங்கிலிய மரமும் விழந்தது, ரஜினி மரமும் விழந்தது.


நான் கரையிலிருந்து வெள்ளத்தை பாத்துக்கிட்டுருந்தேன். அவ்வளவுதான். நான் நின்றிருந்தது சரியான செளகரியமான மேடு. உள்ள இறங்கி நின்னு.` என்ன பெரிய வெள்ளம்'னு பாத்தா அது அடிச்சுக்கிட்டு போயிடும்.




ஆனா தேர்தல் நேரத்தில் நீங்க நின்றிருந்த மேட்டுல தனியா நின்னமாதிரி தெரிஞ்சுது. ஏன்னா உங்க சக கலைஞர்களெல்லாம் ஏதோ ஒரு விதத்தில அந்த வெள்ளத்துல் மிதந்து வந்தாங்களே. அப்ப உங்களுக்கு மட்டும் ஏன் ஒரு எச்சரிக்கை உணர்வு?




எச்சரிக்கை உணர்வெல்லாம் கிடையாது, நான் வெள்ளத்துல மூழ்கல, மிதக்கலங்கிறதனால் எனக்கு கலர் பூச முடியாது. இன்றைக்கு சிறையிலிருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆதரவு என்றோ, இன்றைக்கு முதல்வராக இருக்கும் கருணாநிதி அவர்களுக்கு ஆதரவு இல்லை என்றோ சொல்ல முடியாது.


இன்றைய முதல்வருக்கே அது தெரியும். முதல்ல என்னைப் பார்த்ததும் அவர் சொன்னது` உன்னைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். இதிலிருந்த்தெல்லாம் தள்ளி இருப்பவன்னு தெரியும். அதுக்காக எனக்கு படம்கூடப் போட்டுக் காட்டக்கூடாதா?' அப்படின்னாரு.. அதை அவர் தெளிவா புரிஞ்சுக்கிட்டு இர்ருகாரு.. எல்லாரும் சொன்னாங்க. ` வேணும்னே அவாய்ட் பண்றார்ன்னு'




எனக்கு ஜாதி வர்ணம் பூசிப் பார்க்கிறதுல எல்ல ஜாதிக்காரங்களுக்கும் ஆசை, எனக்கு ஜாதி இல்லை. இல்லன்னு சொல்றது ஒரு நல்ல நாஸ்திகன் மாதிரி இருக்கிற தர்ம சங்கடம் நல்ல நாஸ்திகன் கடவுள் இல்லை, இல்லைன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்கமாட்டாம். நல்ல ஆஸ்திகன் ` கண்டிப்பா கடவுள் இருக்கார்'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். ஏன்னா அவனுக்கே எங்கேயோ சந்தேகம் இருக்கும்




தன் மேலே சந்தேகம் இருக்கிறவங்கதான் எனக்கு ஜாதி வர்ணம் பூசிப்பார்க்கிறாங்க. எனக்கு ஜாதியே கிடையாதுங்கறத என்னைத் தவிர வேறு யாருக்குமே நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. இனிமே இவங்க வர்ணம் பூசறதனால என்னாயிடும்> இனிமே இவன் நடிக்கக்கூடாது அப்படின்னு ஒதுக்கலாம்.


இதைவிட எப்படியும் என்னை பயமுறுத்த முடியாது. உயிரி பயம் எல்லாருக்கும் உண்டு. பெருந்தலைவர்லேருந்து பிச்சைக்காரன் வரைக்கும் துப்பாக்கிய எடுத்தா பயப்படுவான். ஸோ, அந்த மாதிரியான பயத்தை தவிர எனக்கு வேறு எந்த பயமும் கிடையாது.


மத்தவங்க யாரையும் புண்படுத்திவிடக்கூடாது, ஒரு குறிப்பிட்ட இனத்தை,ஒரு குறிப்பிட்ட இனத்தை,இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவரை, இந்து மதத்தை சேர்ந்தவரை தேவையில்லாமல், அர்த்தமில்லாமல் சாடிட்டேன் என்கிற ஒரு மன உறுத்தல் மட்டும் எனக்கே பயமான ஒரு விஷயம். அதனாலதான் நான் ஜாஸ்தி பேசறது இல்லை.'




இப்படி பேசாம ஒதுங்கறதும் ஒருவித கோழைத்தனம் தானே, மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும், நாளை இந்த வணிக வியாபார உலகத்திலதானே உங்க குழந்தைகளும் வளரப்போறாங்க?




(தொடரும்)

Jun 10, 2008

அரசியல்வாதிகளை நம்புவது மூட நம்பிக்கை - கம்ல்ஹாசன்







சில பேட்டிகள் எந்த காலத்திற்கும் பொருந்தும். இந்த பேட்டி கமல்ஹாசன் 1996ல் நான் தமிழன் எக்ஸ்பிரஸ் ஆசிரியனாக இருந்த போது அளித்த பேட்டி.சினிமா, கலை இலக்கியம் என சகலகலவல்லவனாக மூன்று மணி நேரங்கள் பொங்கினார். அந்த பொங்கலின் சில துளிகள்.











1996ம் வருடம் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இதில் திரைப்பட கலைஞர்கள், மற்றும் கலையுலகின் பங்கு முக்கியமானது. ஆனால், நீங்க பங்கு கொள்ளாமல் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தீர்கள். சற்று விலகியே நின்றீர்கள் ஏன் ?











நான் பார்வையாளனாக இருந்தேன். உண்மை. முதலில் நான் பார்த்ததை சொல்கிறேன். அதற்கு முன்.. என் பார்வைகளைச் சொல்வதற்கு எனக்கென்ன அருகதை என்பதை நான் உணரவேண்டும். அதுவும் நான் சாராத அரசியல் பற்றி சொல்ல எனக்கு எந்தளவுக்கு அருகதை உண்டு?


எந்த அளவுன்னா வெற்றிலைப் பாக்குக் கடை வாசல்ல நின்னுக்கிட்டு ` இந்தியன் எக்ஸ்பிரஸ்' தலையங்கத்தை விமர்சனம் பண்ற சாதாரண குடிமகனுக்குள்ள அருகதை தான் எனக்கும். விமர்சனம் பண்றவனுக்கு பத்திரிகை நடத்த தெரியாது.






இப்படித் தெருமுனையில் இருந்து விமர்சனம் பண்றவந்தான் ஒரு சென்சஸ் மூலமாக ஒரு பொது ஜனக் கருத்தை உருவாக்குகிறான். இவன் அமீபா (amoeba) மாதிரி - ஒரு கிருமி.






இந்தக் கிருமி அதிகமாயிடுச்சுன்னா வயித்து வலி வரும். இத்தகைய எதிர் விமர்சினங்கள் அதிகரித்தால் அது பத்திரிகையைப் பாதிக்கும்.ஒரு நடிகனைப் பற்றி இப்படி கருத்துக்கள் புறப்பட்டால், அது அவன் மார்க்கெட்டை பாதிக்கும்.






இந்த விமர்சகன் நிலையில் இருந்துதான் நன் அரசியலை விமர்சனம் பண்ணணும். அந்த உரிமை கூட என் விரலில் விழகிற வாக்குச்சாவடி புள்ளி கொடுத்ததுதான்.அதுதான் என் முகவரி அங்கிருந்துகொண்டு நான் யாரையும் திட்டலாம்: யாரையும் நிராகரிக்கலாம்.






நான் நிராகரித்தது யாருக்கும் தெரியவும் தெரியாது. இதை வெளிப்படையா சொல்றதுனால சில அசெளகரியங்கள் வரலாம். கலைஞர் - நான் ஒரு சாதாரணன்னு சொல்றாரு. அவர் ராஜ கீரிடத்தை தலையில் வைத்துக்கொண்டு நான் சாதாரணமானவன்னு சொல்றாரு. நானோ உண்மையிலேயே மிகச் சாதாரணமானவன். சாதாரண மக்களின் சரியான பிரதிநிதி,representative நான் தான்.






எந்தச் சார்பும் இல்லாம, கிட்டப்பாவுடைய கச்சேரி, ராப் ம்யூசிக் ரெண்டையும் கேட்டுக்கிட்டு இருக்கிற ஒரு சாதாரணன் நான். என்னுடைய பார்வையில் ஒண்ணே ஒண்ணேதான் தெரியுது. மக்கள்தான்எல்லாவித ஊழலுக்கும் காரணம்.









அப்ப அரசியல்வாதிகளெல்லாம் யோக்யமானவங்கன்னு சொல்றீங்களா ?









நோ, நான் அரசியல்வாதிகளுக்கு சப்பைக் கட்டு கட்டலை. அவங்க எல்லாருமே crooks தான். அதுவும் சமீபகாலமாக பத்திரிகைகளைப் பாத்துக்கிட்டித்தானே இருக்கோம்.எத்தனை அரசியல்வாதிகள் மீது ஊழல் வழக்கு, வக்கீல் நோட்டிஸ்னு வந்துகிட்டு இருக்கு.


இப்ப ஊழல்ல சிக்காத அரசியல்வாதி, ஜாதியில்லாத மனிதர் மாதிரி. அவுங்களுக்கு என்னவெல்லாம் சிக்கல் வருமோ, அதெல்லாம் வழக்கில்லாத, குற்றங்களில்லாத அரசியல்வாதிகளுக்கும் வரும். என் அப்பாவுடைய நண்பரா இருந்தவர் முன்னாள் அமைச்சர் கக்கன். அவரு கடைசி வரைக்கும் ரிக் ஷாவிலதான் போயிக்கிட்டிருந்ந்தாரு. அந்த மாதிரி அரசியல்வாதிகள் இன்னிக்கு இல்லே. இருந்தால்கூட அவங்க அரசியலை விட்டு விலகிப் போயிருப்பாங்க. அதனால நம் ஜனநாயக நாட்டை அரசியல்வாதிகள் நடத்திக்கிட்டிருக்காங்கற நம்பிக்கை பொய் என்று எனக்குப் புரிய பல வருஷங்களாச்சு.









அப்ப யார் நடத்தறாங்க ?









இப்போது உலகத்தையே இயக்கிக்கிட்டிருபது வியாபாரம். வியாபாரிகள்,traders தான் நடைமுறையில் நடத்திக்கிட்டிருக்காங்க. அந்த வியாபரத்தில ஒரு நேர்மை வேணும்னு எதிர்பார்க்கலாம். இதுதான் இன்றைய அர்த்த சாஸ்திரம்.



அதுக்காக இவர் இவ்வளவுதான் லஞ்சம் வாங்கலாமென்று பட்டியல் போட முடியாது. இது ஒரு (moral domain) தனி உலக - தனி பரிமாணம். இந்த பரிமாணம் காலத்துக்கு காலம் மாறிக்கிட்டிருக்கு.






நேற்றைய விதவை கலயாணத்தைப் பற்றி யோசித்தால் அவள் விலைமகளுக்கு நிகரானவள். அதற்கு முந்தைய காலத்தில் அதே பெண் தேவருக்கு அடியாள். அப்போ அது தப்பில்லை! இப்படிக் காலத்துக்கு ஏற்ற மாதிரி சட்ட திட்டங்கள் மாறிகிட்டு வருது.






இதில நான் ஒரு வழிப்போக்கனாக, பாதசாரியாக குழம்பிப் போய் உட்கார்ந்திருக்கேங்கிறதுதான் உண்மை.எது moral எது moral இல்லேங்கிறதுதான் என்னுடைய `மகாநதி' படம்.இது தவறு, இது நேர்மைன்னு சொல்லி என்னை வளர்த்திட்டாங்க. அதெல்லாம் உண்மையில்லைன்னு அப்பட்டமாகத் தெரிகிறது. அப்ப நான் அசடுதானே?



என்னுடைய முப்பது நாப்பது வருஷத்தை இப்படி நம்பியே வீணாக்கியிருக்கேன்.



இப்படிச் சொல்றவங்க என்னைப் போல நிறைய பேர் இருக்காங்க. அந்த செளகரியத்துலதான் நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்.இது வணிக உலகம் என்பதுதான் நிஜம்.



இதுல அரசியல்வாதிகள் வந்திருக்காங்க,அவ்வளவுதான். இவங்க நடத்தல. வணிகத்துனால உலகம் நடந்துகிட்டு இருக்கு.



வணிகத்தினாலதான் ராஜராஜனுடைய சோழ சாம்ராஜ்யமே இருந்தது..போர், பிரகதீஸ்வரர் கோயில் இதெல்லாம் மேல்பூச்சுதான். வணிகம்தான் அவர்களையும் நடத்திக்கிட்டிருந்தது. இதை நான் இப்ப தெளிவா சொல்றேன். ஏன்னா, இப்ப என் அடுத்த படத்திற்காக சோழர் காலத்தைப் பத்தி ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கேன். அதனாலதான் நான் ரொம்ப தெளிவா இருக்கேன் வணிகம்தான் நிஜம்.



இதுல இப்பா நாம் நம்பிக்கிட்டு இருக்கிற அரசியவாதிங்க நமக்கு ஏதாவது செய்வாங்கங்கிறது கூட வெறும்- மூட நம்பிக்கைதான்.சமூகப் பொறுப்பு `சிவிக் சென்ஸ்'தான் நம்மை பரிபாலனம் செய்யும்.



இன்றைய அரசியல்வாதிங்கள் குற்றம் சொல்றது எனக்கு இப்ப வந்த சிந்தனை இல்லை. அரசியல்வாதிய குற்ற்ம் சொல்றதுக்கு நமக்கு எந்த அருகதையும் கிடையாது. ஏன்னா உனக்குத் தலைவன் ஒரு திருடனாகத்தான் இருக்க முடியும் ஏன்னா ` நீயே ஒரு திருடன்'


நம்மில் எத்தனை பேர் நேர்மையானவங்க?நேர்மைக்காக எத்தனை முறை தூக்கம் இழந்திருக்கோம்? எத்தனை முறை சினிமா பாக்காம திரும்பியிருக்கோம்?






நேர்மையா இருக்கணுங்கிறதுக்காக எத்தனை முறை சினிமா தியேட்டர்ல பிளாக்ல டிக்கெட் வாங்காம திரும்பியிருக்கோம்?ரொம்ப குறைவு. நான் வந்திருக்கேன். ஆனா என்னுடைய நேர்மை சினிமா டிக்கெட் வாங்கறதுல மட்டும்தான்.



சுயமா பரீட்சித்துப் பார்க்கும்போது, எனக்குள்ள ஒரு திருடன் உட்கார்ந்திருக்கான். சிறுதுளிதானே பெருவெள்ளம் அந்த பெருவெள்ளத்தைத்தான் நாம பாக்கறோம்.


சுவீஸ் பாங்குக்கு அடிச்சிகிட்டு போகுதில்லையா. அந்தப் பெருவெள்ளம் இங்கிருந்து வந்து சிறுதுளிதான். நான் ஒரு பைசா லஞ்சம் வாங்கறேன். திருட்டுத்தனம்ங்கிறது பரவலா இருக்கிற விஷயம். வணிக உலகத்தில் கூட அது நேர்மையற்ற செயல்தான். அதனால அது தண்டிக்கப்படும்போது எல்லோருக்கும் சந்தோஷமா இருக்கு.







(பேட்டி தொடரும்)










Jun 4, 2008

மக்களை சுரண்டுகிறது அரசு.


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடது சாரிக்கட்சிகள் தமிழகத்திலும் அவர்கள் ஆட்சி செய்யும், கேரளா, திரிபுரா, மேற்கு வங்கத்தில் இம்மாதம் 7 ந்தேதி பந்த அறிவித்திருக்கிறது.விலை உயர்வு அறிவிக்கப்பட்டவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிகத்தில் தங்கள் செய்றகுழவைக் கூட்டி அடுத்த கட்டம் என்ன? என்பதை விவாதித்துக்கொண்டிருந்தபோது, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டி. கே ரங்கராஜனை தொடர்பு கொண்டோம்.

`எண்ணேய் நிறுவனங்களின் நிதி நிலையைப் பற்றியே கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. அவர்களின் சென்ற வருட லாப சேமிப்பு என்னவாயிற்று?


நாம் கொள்முதல் செய்கிற இடத்தில் மற்ற நாடுகளும் கொள்முதல் செய்கிறது. பல நாடுகளில் நம்மை விட பெட்ரோல், டிசல் விலை மலிவாக இருக்க காரணம் என்ன ?


இந்திய அரசு சுங்க, கலால் வரியை போட்டு மக்களை சுரண்டிக்கொண்டிருக்கிறது. இந்த விலையேற்றத்தை வெறும் பெட்ரோல், டீசல் உயர்வாக மட்டும் பார்க்க கூடாது. இதனால் சோப்பு, சீப்பு, கண்ணாடியிலிருந்து சகல பொருட்களின் விலைகளும் கூடு. அதனால்தான் இம்மாதம் 7ந் தேதி நாடு தழவில் பந்த் அறிவித்திருக்கிறோம்.

கிளம்பிய எண்ணெய் பூதம்


எதிர்பார்த்துக்கொண்டிருந்த பெட்ரோல் விலை உயர்வு என்கிற பூதம் கிளம்பிவிட்டது.பெட்ரோல் 5 ரூபாய், டீசல் 2 ரூபாய். சமையல் கேஸ் ரூ 50 உயர்வு அறிவிக்கப்பட்டுவிட்டது.நகரத்து மக்களையே மையமாக வைத்து இயங்கும் இந்திய ஊடகங்கள் வழக்கமான அரசியல் தலைவர்களின் அவர்களின் சந்தர்ப்ப வாத கொள்கை முழக்கங்களை வெளிட்டு கொண்டிருக்கின்றன.


கூடவே தொலைகாட்ட்சி ஊடகங்கள் பொதுத்துறை எண்ணெய நிறுவனங்களின் நிதி நிலை மோசத்தை பற்றி நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றன.உண்மையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நிலைமை அவலமாகத்தான் இருக்கிறதா?


உதாரணமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை எடுத்துக்கொள்வோம்.இது அவர்களே அவர்களின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கை.


உலகத்திலேயே சிறந்து விளங்கும் 500 பணக்கார நிறுவனங்களின் இந்தியாவிலேயே முதல் நிறுவனமாக திகழ்வது இந்தியன் ஆயில் கார்ப்பேரஷன்


வியாபாரத்தில் பல சவால்களும், மோசமான சூழலும் இருந்தும் கூட இந்த நிறுவனம் நல்ல வளர்ச்சியை கண்டிருகிறது.


இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனரின் கூற்றுப்படி ` 2007-2008ம் வருடம் சுங்க வரி செலுத்தியது போக ஈட்டிய வருமானம் ரூ 2,47,479 அதற்கு முந்தைய ஆண்டின் வருமானம் ரூ 2,20,779.


. சென்ற ஆண்டு லாபம் ரூ 5,997 கோடி, இந்த ஆண்டு லாபம் 7,377 கோடி. பெட்ரோல், டிசல் விற்பனையில் மட்டும்தான் தினமும் ரூ 320 கோடி நஷ்டம் என்று சொல்லுகிற நிறுவனம் தங்களின் விற்பனை மையங்கள் அதிகரித்திருப்பதையும் அதனால் வருகிற லாபத்தையும் வெளிப்படையாக சொல்ல மறுக்கிறது.


சரி, நஷ்டத்தில் இருக்கிற இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த ஆண்டு பங்குதாரர்களுக்கு டிவிடண்டாக எப்படி 55% மாக அறிவித்திருக்கிறது. சென்று லாபத்திலிருந்து வைத்துள்ள அதிகமான ரிசர்வ் பணம் என்னவாகிறது. இந்த கேள்விகளை பற்றியெல்லாம் நகர்ப்புற மக்களான நமக்கு என்ன கவலை? கவலையை மறக்க எத்தனையோ ஊடகங்களின் வரும் மெகா சீரியலின் கதாபாத்திரங்களோடு நாமும் அழது தொலைத்து, நாளைக்கு அந்த கதாபாத்திரத்திற்கு என்ன ஆகும் என்கிற கவலையில் முழ்குவோம்,.

Jun 1, 2008

புயல் ஒன்று புறப்பட்டது










சர்வதேச அளவில் புகழ் பெற்றிருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் வதத்தை முடித்தவர் தமிழக காவல்துறையின் ஏடிஜிபி விஜயகுமார்.விசேஷ அதிரடி படை (special task force-STF) பலராலும் விமர்சிக்கப்பட்ட காலத்தில் அந்த படையின் தலைமை பொறுப்பை ஏற்றார். பல மாதங்கள் வீரப்பன் உலவிய காடுகளில் உலவித் திரிந்தார். நட்ட நடுசியில், செங்குத்தான மலைகளில் தனியே போய்விட்டு வருவார் என்று இவரைப் பற்றி அவரது படையினர் சொல்வார்கள்.









அதிரடிப் படைக்கு பலவிதமான பயிற்சிகள் கொடுத்ததில் இவருக்கும் பங்குண்டு. சமீபத்தில் நாளிதழ்களில் செய்தி வந்தது. பல மாநிலங்களில் ஊடுருவி இருக்கிற தீவிரவாத படைகளை ஒடுக்க மத்திய அரசு ஒரு போலீஸ் படையை உருவாக்கப்போகிறது. அதற்கு விஜயகுமார் தலைமையேற்கப்போகிறார். அவருக்கு டெல்லிதான் தலைமையிடமாக இருக்கும். ஆனால் அவரது பணிகள் சடிஸ்கார் மாநிலத்தில் இருக்கும் என்றது செய்தி.

















ஜீன் ஒன்றாம்தேதி ஞாயிற்றுக்கிழமை டிஜிபி அலுவலகத்தில் விஜயகுமாரை சந்தித்தேன். இப்போது அவர் காவல்துறையின் சட்டம் ஒழங்கு பிரிவின் ஏடிஜிபி.அவர் ஒய்வு பெற இன்னும் சுமார் நான்கரை வருடங்கள் இருக்கிறது. அவருக்கு பின்னால் வங்கக்கடல் காலை சூரியனில் ஜொலித்துக்கொண்டிருந்ந்தது.பரந்த அந்த அறையின் ஏராளமான புத்தக குவியல்கள். நிறைய படிப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஜெஃப்ரி ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகமான A PRISONER OF BIRTH வரை படித்து முடித்திருந்தார். இயல்பாக, அதே நேரத்தில் தன் தொழிலில் அவர் வைத்திருக்கும் ஒரு வெறியோடு சாந்தமாக பேசினார்.
















நீங்கள் பல பதவிகளில் இருந்திருக்கீறீர்கள். குறிப்பாக வீரப்பனை பிடிக்கிற முயற்சி என்பதில் ஒரு சரித்திர சாதனையை படைத்திருக்கீறீர்கள். வீரப்பன் வேட்டை துவங்குவதற்கு முன்னும், அதை சாதித்த பின்னும், இப்போதும் உங்கள் மனநிலை என்ன?






வீரப்பன் வேட்டை என்பது ஒரு கடினமான வேலை. ஆனால் நம் காவல்துறையின் திறமையில் எனக்கு நம்பிக்கை இருந்தது. தங்கள் பணியில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும் நம்பிக்கையும் காரணமாகத்தான் அந்த சவாலை நான் எதிர்கொண்டன். அதில் கிடைத்த அந்த முடிவு, எங்களுக்குள் ஒரு உற்சாகத்தையும், தமிழக காவல்துறைக்கு ஒரு மரியாதையும் தேடிக்கொடுத்தது என்பதில் ஒரு மகிழ்ச்சி.









அதிரடிப்படைக்கு நீங்கள் பொறுப்பேற்பதற்கு முன்பு, அதாவது வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திக்கொண்டு போய் காட்டில் வைத்திருந்த கால கட்டத்தில், தில்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர் சேகர் குப்தா தமிழக காவல்துறையை மிகவும் கேவலமான முறையில் விமர்சித்திருந்தார். அப்போது டெல்லியிலிருந்த நீங்கள் அவருக்கு ஒரு கடிதம் எழதினீர்கள். அதில் ` எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் சாதித்து காட்டுவேன்' என்றீர்கள். அதை அந்த நாளிதழம் வெளியிட்டது. உங்களுக்கு முன்னால் இருந்த அதிகாரிகள் தோற்றுப்போன ஒரு விவகாரத்தில் எப்படி அத்தனை உறுதியாக சொன்னீர்கள்.?











நான் சொன்னதைப் போல எனக்கு தமிழ்க காவல்துறையின் மீது எனக்கு அசாத்திய நம்பிக்கை உண்டு. அந்த கட்டுரையில் அவர் தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சித்து எழதியிருந்தார். மற்ற மாநில உயர் போலீஸ் அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்பி வீரப்பன் விவகாரத்தை முடிக்க வேண்டும் என்று எழதியிருந்தார். எனக்கு அதில் உடன்பாடில்லை. நம்முடைய திறமை யாருக்கும் குறைந்ததல்ல. அதனால்தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் சாதிப்பேன் என்று உறுதியாக சொன்னேன்.









1991 வருடம் நீங்கள் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் புதிய பாதுகாப்பு படையான SSG படையை உருவாக்கினார்கள். அதில் பல அதிரடி வீரர்கள் உருவானார்கள். அந்த படை உருவாக்கிய பயிற்சிதான் வீரப்பன் விவகாரத்தை எடுக்க வேண்டுமென்கிற துணிச்சலை கொடுத்ததா?










அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம.அப்போது நமது அண்டை நாடுகளிலிருந்து அதுவும் பாக் ஜலசந்தி பகுதிகளிலிருந்து நமக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் இருந்தது. நான் இந்த படையை உருவாக்க பொறுப்பு எடுத்துக்கொண்ட போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நேரம். அது என்னை மிகவும் பாதித்தது. நான் 1988-1991 வரை பிரதமரின் பாதுகாப்பு படையான spgயின் இருந்தேன். அதில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தது.குறிப்பாக spg,nsg ஜெர்மானிய அதிரடிப் படையின் அனுபவங்கள் எங்களுக்கு கிடைத்தது. நல்ல யோசனைகள் எங்கிருந்து கிடைத்தாலும் அதில் எடுத்துக்கொள்வதில் தவறில்லை என்று நினைப்பவன் நான். அவையெல்லாம் எனக்கு அந்த படையை உருவாக்க ஒரு உந்துதலாக இருந்தது. அந்த அனுபவமே பின்னால் வீரப்பன் வேட்டைக்கும் ஒரு உந்துசக்தியாக இருந்தது என்று சொல்லலாம்.









வீரப்பன் வேட்டை என்பது ` இல்லாத கறுப்புப் பூனையை இருட்டறையில் ஒரு குருடன் தேடிய கதை' யாகவே இருந்தது. அந்த பொறுப்பை ஏற்றபோது உங்களுக்கு நம்பிக்கை இருந்ததா?













நான் பொறுப்பேற்றபோது முதலில் தட்டக்கரை என்கிற முகாமிற்கு போயிருந்தேன். அங்குதான் வீரப்பனால் கொல்லப்பட்ட 44 காவல்துறை அதிகாரிகளின் கல்லறை இருந்தது. எனக்கு முன்னால் அந்த பொறுப்பிலிருந்த என் நண்பர் ஏடிஜிபி ஆர். நட்ராஜ் அந்த கல்லறைகளை நன்கு பராமரித்து வந்தார். அங்கு போய் என் வண்டியை விட்டு கீழே இறங்கிய போது என் கால் தடுமாறி விழப்போனேன். ஆனாலும் சுதாரித்துக்கொண்டேன். அதை மற்றவர்கள் ஒரு அபசகுனமாக எடுத்திருப்பார்கள். எனக்கு சடங்குளில் நம்பிக்கை இருந்தாலும், மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை கிடையாது. அந்த முதல் தடையையே எங்கள் முயற்சியின் முதல் படிக்கல்லாக எடுத்துக்கொள்ள மனதில் உறுதி எடுத்துக்கொண்டேன். என்னுடன் இருந்த படையினரும் அதே வெறியோடு இருந்தார்கள்.வீரப்பன் விவகாரம் என்பது ஒரு அற்புதமான கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. என் பங்கு என்பது நான் அந்த அருமையான படையின் தலைவனாக இருந்ததுதான்.










வீரப்பனை வீழ்ந்த்தியது என்பது உளவு வேலை அதாவது intelligence க்கு கிடைத்த வெற்றி என்பார்கள். ஆனால் மாநிலத்தை பொருத்தவரையில் பொதுவாக உளவுத்துறை பலவீனமாகிக் கொண்டு வருகிறது என்கிற விமர்சனம் இருக்கிறதே ?










வீரப்பன் விவகாரத்தில் எங்கள் அதிரடிப் படையின் உளவுப் பிரிவுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.ஆனால் உளவுத்துறை பலவீனமாகிவிட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.இன்றைக்கும் நமது உளவுத்துறை அபாரமான பணிகளை செய்து கொண்டிருக்கிறது.அவர்கள் உதவி இல்லையென்றால் சமீபத்தில் கொடைக்கானல் மலைப் பகுதியில் எங்களால் அங்கு ஊடுருவியிருந்த தீவிரவாதிகளை பிடித்திருக்க முடியாது. அதே போல் நமது கைரேகை பிரிவினரின் பணி என்பதி வியக்க வைக்க கூடியது.ஆனால் உளவுத்துறையின் சாதனைகளை அவர்களால் வெளிப்படையாக கொண்டாட முடியாது.அவர்கள் மீது விழகிற கற்களை மட்டுமே பார்க்க முடியும், கிடைக்கிற மலர்கொத்துக்களை அவர்களால பகிரங்கமாக வாங்கிக்கொள்ள முடியாது.மேலும் தீவிரவாதகளை பிடித்தபின், இத்தனை நாள் உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது என்று கேட்கலாம். எந்த தீவிரவாத அமைப்பும் முதலில் பொதுமக்களோடு கலக்கிறார்கள். பிறகு தங்களை ஸ்திரப்படுத்திக்கொண்டுதான் தங்கள் கைவரிசையை காட்டுகிறார்கள். அப்போதுதான் உளவுத்துறை தங்கள் பணியை துவங்க முடியும்.









வீரப்பனை வீழ்த்தி ஒரு சாதனையை செய்த நீங்கள், அதற்கு பிறகு ஒரு முக்கியத்துவம் இல்லாத ஒரு கமாண்டோ படைக்கு தலைமை தாங்கத்தான் அனுப்பப்பட்டீர்கள் இதில் உங்களுக்கு வருத்தமுண்டா ?











இல்லை அப்போது எங்களுக்கு இரு முக்கிய பணி இருந்தது. தேசிய டிபென்ஸ் அகாடமியைப் போல இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்களை நேரடியாக ஒரு விசேஷ பயிற்சி மூலம் தேர்ந்தெடுப்பது. அதே போல் போலீஸ்காரர்களின் வாரிசுகளுக்காக ஒரு பள்ளி துவங்குவது என்று இரண்டு முக்கிய பணிகள் இருந்தது. அதை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தது. என்னைப் பொருத்தவரையில் எல்லாப் பொறுப்புகளுமே முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.









வீரப்பனை பிடிக்கத்தான் விசேஷ அதிரடிப் படை துவங்கப்பட்டது. இன்னமும் அதிரடிப் படை சத்தியமங்கலத்தில் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது.அதற்கு அவசியம் ?










இப்போது அச்சுறுத்தல்கள் பல ரூபங்களில் வரத்துவங்கிவிட்டது. குறிப்பாக வனப் பகுதிகளில். அதன் அடையாளம்தான் சமீபத்தில் நடந்த கொடைக்கானல் மலைப் பகுதி சம்பவங்கள். அதிரடிப் படையில், காட்டில் எப்படி வாழ்வது என்கிற பயிற்சியை நாங்கள் கொடுக்கிறோம். ஒரு ஐந்து பேராக காட்டில் போய் யாருக்கும் தெரியாமல், தங்கள் நடவடிக்கையால் யார் கவனத்தையும் ஈர்க்காமல் இருப்பது என்பது சுலபமான காரியமல்ல.இதை நாங்கள் ஐந்து நாள் பயிற்சி என்று சொல்கிறோம். அந்த பயிற்சியில் அவர்கள் ஐவர் குழவாக சென்று ஐக்கியமாக, அமைதியாக, பிறகு அதிரடியாக மாறுகிற பயிற்சியை கொடுக்கிறோம். அதே சமயம் காடுகளிலுள்ள சுற்றுப்புற சூழலையும் கெடுக்காமல் இருக்க பயிற்சி கொடுக்கிறோம். ஒரு பிளாஸ்டிக பொருளையும் உள்ளே விட்டுவிட்டு வரக்கூடாது. ஒரு வீரர் உள்ளே போய்வரும்போது எத்தனை பிளாஸ்டிக பொருட்களை கொண்டு வருகிறார் என்பதற்கு கூட பயிற்சி உண்டு. அவர் அதில் வெற்றிகரமாக இருந்தால் அதற்கு கூடுதல் மதிப்பெண்கள் அவருக்கு உண்டு. இது தவிர காடுகளில் மிருகங்களை, பாம்புகளை எப்படி சமாளிப்பது என்பதற்கு பயிற்சி அந்தந்த துறைகளின் வல்லுனர்களை கொண்டு பயிற்சி கொடுக்கிறோம்.இதற்கெல்லாம் வீரர்களுக்கு அசாத்திய திறன் வேண்டும். வரப்போகிற காலங்களில் இது போன்று பயிற்சிகள் காவல்துறையினருக்கு அவசியம் தேவை.










நீங்கள் எப்போதுமே மத மற்றும் நக்ஸ்லைட் தீவிரவாத அமைப்புகள் மீது கவனமாக இருப்பதாக சொல்லப்படுவதுண்டே?












நான் கமாண்டோ பிரிவில் இருந்த போது அண்டை மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை கவனத்திக்கொண்டே இருப்பேன். அது ஒரு நெருப்பு பொறி மாதிரி. எங்கும் சுலபமாக பரவி விடும். அதனால் அண்டை மாநிலங்களான, குறிப்பாக வடக்கு ஆந்திரா, ஒரிசா, ஜார்கண்ட், சடிஸ்கர் எல்லைகளில் வளர்ந்து வரும் தீவிரவாத அமைப்புகள் குறித்து தெரிந்து வைத்துக்கொள்வது நம்மை நாம் பாதுகாத்து கொள்ள உதவிகரமாக இருக்கும்.








தமிழகத்தில் இந்த தீவிரவாத அமைப்புகளின் ஊடுருவல் எந்த அளவிற்கு உள்ளது ?










நம் ஊரில் இது மிகுந்த கட்டுப்பாட்டில் இருக்கிறது. நக்ஸ்லைட் தீவிரவாதம் தோன்றுவதற்கு சமூக பொருளாதார காரணங்களும் பின்னனியில் இருக்கும். மற்ற மாநிலங்களில் சில ஜாதியினருக்கு சரியான உரிமைகள் மறுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் எந்த ஜாதியினரை எடுத்துக்கொண்டாலும், அவர்களுக்கு ஏதாவது ஒரு கட்சியில் அவர்களுக்கு உரிமையும் ஈடுபாடும் இருக்கும். . அதனால் இங்கு அதற்கு வாய்ப்பில்லை.









நீங்கள் டெல்லி செல்லப்போவதாக செய்திகள் வருகிறதே ?










அதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழக அரசும் அதற்கு அனுமதி கொடுத்துவிட்டது. இனி மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக சடிஸ்கார், ஜார்கண்ட் மாநிலங்கள் பெருகி வரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த நினைக்கிறது மத்திய அரசு. ஆனால் எனக்கு என்ன பொறுப்பு என்பதை இனி மத்திய அரசுதான் முடிவு செய்யும். அதுவரையில் எனக்கு அது பற்றி தெரியாது.









முன்பு நீங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வேண்டியவராக கருதப்பட்டிர்கள், இப்போதும் நல்ல முக்கியமான பதவியில் இருக்கிறீகள். தமிழகத்தில் இது எப்படி சாத்தியமாயிற்று ?











இப்படி பார்ப்பதே ஒரு தவறான கண்ணோட்டம். நாங்கள் அரசு அதிகாரிகள். எந்த அரசு வந்தாலும் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை நேர்மையாக செய்வதுதான் எங்களுக்கு பணி. நாம் வேலை செய்யும் முறையை வைத்து அந்தந்த அரசுகள் தக்க பணியில் அமர்த்துகிறார்கள் அவ்வளவுதான்.









உங்களுக்கு முன்னோடி என்று யாரை சொல்வீர்கள் ?











நான் பல முன்னோடிகளை உதாரணமாக எடுத்துக்கொள்வேன். இந்தியா சுதந்திரமடைந்தபின் தமிழகத்தில் முதல் காவல்துறை அதிகாரி திரு சி.வி நரசிம்ம்ன். அவர் அசாத்திய திறமைசாலி. அதே போல் ஐஜி அருள், வி. ஆர். லட்சுமிநாராயணன், வால்டர் தேவாரம். அதே போல் டெல்லியிலிருந்த போது வேத் மார்வா, ரிபெய்ரோ, கில் போன்றவர்களின் திறமைகளை கண்டு வியந்து அவர்களை கூர்ந்த கவனித்து என்னை செப்பனிட்டுக்கொள்வேன்.









வீரப்பன் வேட்டை முடிவதற்கு முன்பு ஊடகங்கள் அதிரடிப் படையை கடுமையாக விமர்சித்தன. அந்த சாதனையை செய்து முடித்தபின் நீங்களும், அதிரடிப் படையும் வேகமாக மறக்க பட்டுவிட்டதை கண்டு உங்களுக்கு வருத்தமுண்டா ?











நிச்சயமாக இல்லை. எங்களுக்கென்று ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அதை முடித்தோம். அவ்வளவுதான். அந்த பணியை வெற்றிகரமாக முடித்த திருப்தியும், மகிழ்ச்சியும் எப்போதுமே எங்களுக்கு உண்டு.