Dec 26, 2008

அந்த `அலாதி’யான நட்பு!



குமுதம் ஆசிரியரான மறைந்த எஸ்.ஏ.பியின் புதல்வரும், தற்போது குமுதம் இதழின் கெளரவ ஆசிரியருமான திரு ஜவஹர் பழனியப்பன் சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பு 31.12.2008 இதழ் குமுதத்தில் `கலைஞருடன் ஒரு காஃபி’ என்கிற தலைப்பில் அட்டைப்படக்கட்டுரையாக வெளிவந்தது. இந்த சந்திப்பைப் பற்றி சொல்லும்போது, `கலைஞரை நம்பி தமிழ்நாடு மட்டுமல்ல, தமிழனமே இருக்கிறது’ என்றார். அப்போது முதல்வர்,` எனக்கும் எடிட்டர் எஸ்.ஏ.பிக்கும் உள்ள நட்பு அலாதியானது’ என்றார்.

இந்த `அலாதியான’ நட்பு எப்படி என்று பார்ப்போம். எடிட்டர் எஸ்.ஏ.பி என்கிற தலைப்பில் அவருடன் சுமார் நாற்பதாண்டுகள் ஆசிரியர் இலாக்காவில் பணியாற்றிய ரா.கி.ரங்கராஜன், ஜா.ரா. சுந்தரேசன்(பாக்கியம் ராமசாமி), புனிதன் ஆகியோர் ஒரு புத்தகம் எழதியிருக்கிறார்கள். அதில் ரா.கி.ரங்கராஜன்,(இவர் குமுதம் வார இதழின் முன்னாள் இணையாசிரியர்)``ஒரு சமயம் கலைஞர் கருணாநிதியின் கதையைத் தொடராக குமுதத்தில் பிரசுரித்து வந்தோம்.(இத்தனைக்கும் அவருடைய பத்திரிகையில் ஏற்கெனவே வெளியான கதைதான்). அவருடைய எழத்தை வெளியிடுவதால் திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் பத்திரிகை அடிமைப் பட்டுவிட்டது என்று வாசகர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதாலும், உள்ளபடியே எடிட்டருக்கு அந்த கட்சியின் போக்கு பிடிக்காததாலும், அதை விமரிசித்துத் தலையங்கமும் கார்ட்டூன்களும் வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

இதனால கோபங்கொண்ட கலைஞர் தன் கதையை இனி வெளியிட வேண்டாம் என்று அறிக்கை விடுத்து எழதுவதை நிறுத்திக்கொண்டுவிட்டார்.

அதன்பிறகு அவரைத் தாக்குவது மிகவும் சுலபமாகிவிட்டது எடிட்டருக்கு. முன்னைக்காட்டிலும் காரசாரமான தலையங்கங்களும் கார்ட்டூன்களும் வெளியிடத் தொடங்கினார்.திமுக ஆட்சியை விட்டு இறங்கியதில் ஒரு பெரும்பங்கு எடிட்டருக்கு உண்டு என்று கூடச் சொல்லலாம்.

அவருடைய கட்சித் தொண்டர்கள், அலுவலகத்தின் முன் நின்று பத்திரிகைகளைக் கொளுத்தினார்கள். பெரிய கல்லை எடுத்து வீசினார்கள். எடிட்டரின் அறை முன்பக்கம் இருந்ததால் ஒரு பெரிய கல், ஜன்னல் கண்ணாடியைப் உடைத்துக்கொண்டு எடிட்டரின் காலின் கீழே வந்து விழந்தது.

`நீங்கள் வேறு பக்கமாய் இருங்கள்’ என்று நாங்கள் சொல்லியும் `பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டு இடத்தைவிட்டு எழந்திராமலே இருந்தார்.

கட்டடத்தின் கேட்டில் ஒரு பக்கம் ` தேவி பிரஸ்’ என்ற பெரிய பித்தளைப் பலகையும் இன்னொரு பக்கம் `குமுதம்’ என்ற பெரிய பித்தளைப் பலகையும் பொருத்தப்பட்டிருந்தன. ஆர்பாட்டக்காரர்கள் சுவரை இடித்து அந்தப் பலகையைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
`வேறு போர்டு வைத்துவிடலாம்’ என்று நாங்கள் சொன்னோம்.`` வேண்டாம்.. அப்படியே இருக்கட்டும். நம் பத்திரிகைக்குப் போர்டு வைத்துத்தான் பெயர் வரவேண்டும் என்ற தேவை இல்லை’’ என சொல்லி விட்டார். பெயர்த்த இடத்தை சிமெண்ட் பூசி அடைத்தோம். இதை எழதும்வரையில் `குமுதம்’ என்ற போர்டு வாசலில் இல்லாமலே இருக்கிறது. ‘

எஸ்.ஏ.பி ஆசிரியராக இருக்கும்வரையில் அவருடைய `அரசு’ கேள்வி பதில்கள் மிகவும் பிரபலம். அண்ணாமலை, ரங்கராஜன், சுந்தரேசன் இந்த மூன்று பெயர்களின் சுருக்கம்தான் `அரசு’ என்று பேசிக்கொள்வார்கள். ஆனால் கேள்வி- பதிலை’ எஸ்.ஏ.பி மட்டும்தான் எழதி வந்தார்.அந்த கேள்வி பதில்களின் ஒரு சிறிய அளவு தொகுப்ப்பாக தமிழ் புத்தகாலயம் வெளியிட்டது. இந்த பதிப்பகத்தை நடத்தும் அகிலம் கண்ணன், மறைந்த எழத்தாளர் அகிலனின் புதல்வர். அந்த கேள்வி பதில்களிலிருந்து எடிட்டர் எஸ்.ஏ.பி. கலைஞர் கருணாநிதியின் ` அலாதி’ யான நட்பை புரிந்து கொள்ளலாம்.

வி.ராமகிருஷ்ணன், செங்கோட்டை.

கருணாநிதியை இக்கால சாணக்கியர் என்று கூறுவது பொருத்தமாகுமா ?

பாக்கியையும் சொல்லிவிடுங்கள். நெடுஞ்செழியன் தான் இக்கால கெளதம புத்தர்,மாதவன் தான் மகா அலெக்சாந்தர், சத்தியவாணிமுத்துதான் ஒளவையார்.

ஆர். சங்கர். செங்கோட்டை

வருகின்ற தேர்தலில் மறுபடியும் திமுக வெற்றி பெற்றுவிட்டால் என்ன செய்வீர்கள் ?

ஒற்றைக் காதோடு நடமாட வேண்டியதுதான்.

பி.கே. பாண்டியன்,பழவேற்காடு

`நாங்கள் கருணாநிதியின் வீட்டில் புகுந்தாலும், பின்பு என்ன நிகழ்ந்தாலும் சாட்சி சொல்ல யார் இருக்கிறார்கள் ?’ என்று புரட்சித் தலைவர் கூறியுள்ளாரே?

பொறுப்பற்ற, அசிங்கமான பேச்சு. ஆனால் எதிரிகளை வன்முறையாகத்தாக்கும் விஷயத்தில் ஒன்றை கவனீத்தீர்களா? எம்.ஜி.ஆர் மிரட்டுவார், செய்வதில்லை. கலைஞர், மிரட்டுவதில்லை, செய்துவிடுகிறார்.

செ. வேதமூர்த்தி, அத்தாணி

முரசொலியில் தொடர்ந்து வரும் `குமுதா & கோ’ கார்ட்டூன் பற்றித் தங்கள் கருத்து என்ன ?

புகழிலும்,புத்திக்கூர்மையிலும், நாவன்மையிலும், நிர்வாகத் திறமையிலும், அந்தஸ்திலும், செல்வத்திலும் குமுதம் ஆசிரியரையும், வெளியீட்டாளரையும் விட கலைஞர் பன்மடங்கு உயர்ந்தவர். அவரைக் கள்வராகவும், ஜேப்படிக்காரராகவும் கார்ட்டூன் போடக் குமுதத்துக்குத் துணிவிருந்தால், அவர்களைப் பன்றிகளாகச் சித்திரித்து முரசொலி ஏன் மகிழக்கூடாது என்பது என் சொந்த அபிப்ராயம்.

இ.வியாகுலராஜ், திருச்சி.

நீரும், நானும் `சாமானியர்’களாவது எப்போது ?

கோடிஸ்வரர்கள் ஆகும்போது.

கி. கோதை, சேலம்.

``கேள்வி-பதில் பகுதி ரெடியாயிடுத்தா?’’
``கேள்விங்கள்ளாம் எழதிட்டேன். பதில்கள்தான் பாக்கி’’ - இந்த ஆனந்த விகடன் கிண்டலை பார்த்தீர்களா ?
இலக்கு: கோபாலபுரம், கீழ்ப் பாக்கம் அல்ல

`குமுதம்’ அலுவலகம் இருக்கும் பகுதி கீழ்ப்பாக்கம் என்பது வாசகர்கள் கவனத்திற்கு !

Dec 25, 2008

இப்படியும் இருந்தார்கள்!


என்னவோ இந்த வாரம் சிலரை நினைப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இன்றைக்கு கிறிஸ்துமஸ் தினம் கூடவே மூதறிஞர்,இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், சென்னை ராஜதானியின் முதல் அமைச்சராக இருந்த ராஜாஜியின் நினைவுநாள். 1972 டிசம்பரில் இதே நாளில் அவர் மறைந்தார்.

இந்திய சுதந்திர சரித்திரத்தில் மறைக்கப்பட்ட,மறக்கப்பட்ட பல தென்னிந்தியர்களில் அவர் முக்கியமானவர். இங்கே பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் பூர்ண மதுவிலக்கு வேண்டுமென்று தன் கூட்டணி சகாவான ஆளும் திமுக அரசை மிரட்டிக்கொண்டிருக்கிறார்.ஆனால் தமிழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்த சாதனையாளர் தமிழக முதல்வர் கருணாநிதிதான் என்பது டாக்டருக்கு தெரியாததல்ல.

மதுவிலக்கை ரத்து செய்யப்போகிறார் கருணாநிதி என்றவுடன் அவருடைய கோபாலபுரம் வீட்டிற்கே சென்றார் ராஜாஜி.தலைமுறைகளையே அழிக்கப்போகும் இந்த காரியம் வேண்டாம் என்று கருணாநிதியிடம் கெஞ்சினார் ராஜாஜி.ஆனால் அடுத்த நாளே`முனிபங்கவரின் கால்களெல்லாம் இப்போது கோபாலபுரத்திற்கு யாத்திரை வருகின்றன’ என்று அன்று கருணாநிதி கேலி பேசினார். இம்முறை இவர் முதல்வரானபின் புட்டபர்த்தி சாய்பாபா இவருடைய கோபாலபுர வீட்டிற்கு வந்தபோது கருணாநிதி இப்படி பேசவில்லை. ஒரு தலைமுறை சீரழிவை தடுக்க வந்த ராஜாஜி குறித்து அன்று அப்படி பேசினார் கருணாநிதி.

இதைவிட வேடிக்கை, இன்று டாக்டர் ராமதாஸ் நடத்தவேண்டிய இந்த போராட்டத்தை உண்மையில் செய்ய வேண்டியவர்கள் காங்கிரஸ்காரர்கள்தான்.உண்மையான காங்கிரஸ்காரர்கள் என்ன செய்தார்கள் என்பதற்கு ராஜாஜியின் வாழ்க்கையை கொஞ்சம் திரும்பித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

1929ல் அவர் தீவிர மதுவிலக்கு பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக தனக்கு இரு தளங்களை அமைத்துக்கொண்டார் ராஜாஜி.முதலில் இந்திய மதுவிலக்குச் சங்கத்தின் கெளரவப் பொது செயலாளரானார். அடுத்து காங்கிரஸ் கட்சியின் மதுவிலக்கு பிரச்சார பொறுப்பும் அவரிடம் வந்தது. அதனால் அவருக்கு இரண்டு தளங்கள் கிடைத்தது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த சட்டசபையிலும், வெளியேயும் எல்லாவித முயற்சிகளும் செய்யப்படவேண்டுமென்று அப்போது கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில் மதுக்கடை மறியலும் ஒரு திட்டமாக இருந்தது. மதுவிலக்கிற்காக ராஜாஜி தயாரித்த ஒரு தேசியத் திட்டம் காங்க்ரஸ் நிர்வாகக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த திட்ட் செயல்பாட்டில் டாக்டர் அன்ஸாரி, வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி ஆகியோர் ஒரு குழவாக செயல்பட்டார்கள்.

இந்த திட்டபடி ஒவ்வொரு ராஜதானியிலும் காங்கிரஸில் ஒரு மதுவிலக்குக் குழ இருக்கும். ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு மதுவிலக்கு நிர்வாகி இருப்பர் இந்த சபைகள் கள்ளுக்கடை மறியல் செய்யலாம், மதுவிலக்கு லைசன்ஸ் வழங்கும்போது ஏலத்தில் பங்கு கொள்ள வேண்டாமென்று கடைக்காரர்களை தடுக்கலாம். இப்படியெல்லாம் காங்கிரஸ் அன்று செயல்பட்டது. மதுவுக்கு எதிரான சத்தியபிரமாணங்களை தயாரித்தார். பாடல்கள் இயற்றினார்; கொடி ஒன்றை உருவாக்கினார்; ஆர்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார்.

இதையெல்லாம் அவர் காங்கிரஸில் இருந்தபோது ராஜாஜி செய்தார். அப்போது காங்கிரஸ் ஒரே கட்சியாக இருந்தது. இப்போது போல், டெல்லிக்கு ஒரு பத்து இருபது எம்பிக்களை அனுப்புகிற கிளை அலுவலகமாக தமிழக காங்கிரஸ் இருக்கவில்லை.

Dec 24, 2008

விந்தை மனிதர்



இன்று அதாவது டிசம்பர் 24 பல முக்கியங்களை கொண்ட நாள்.முதல் முதலாக அமெரிக்க விண்வெளி வீரர்கள் 1968 டிசம்பர் 24ந் தேதிதான் சந்திரனில் கால பதிக்க முடியும் என்பதை உறுதி படுத்திவிட்டுத் திரும்பினார்கள்.பிராங்க் போர்மென்,ஜெம்ஸ் லோவல்,வில்லியம் ஆண்டர்ஸ் இந்த மூவரும்தான் முதலில் சந்திரனின் இருண்ட பகுதியைப் பார்த்துவிட்டு திரும்பினார்கள்.அதற்குப் பிறகு தான் 1969 ஜீலை 20ந் தேதிதான் நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் கால் பதித்தார்.

1994ம் ஆண்டு இதே நாளில் நான்கு தீவிரவாதிகள் ஏர் பிரான்ஸ் விமானத்தை கடத்தினார்கள். கடத்திய நான்கு இளைஞர்களும் இஸ்லாமியர்கள்.1979ல்தான் சோவியத் ரஷ்யாவிற்கு `சனி திசை' ஆரம்பமானது. ரஷ்ய துருப்புகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்தது. அந்த படையை விரட்ட அமெரிக்க எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், இன்றும் அமெரிக்கர்கள் அந்த புதை மணலிலிருந்து தங்கள் கால்களை எடுக்க முடியவில்லை. தீவிரவாதத்தின் தலைநகராக இந்த பகுதி இப்போது மாறிவிட்டது.

இந்த நாளில் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி இப்போது நாம் ஏன் கவலைப்படவேண்டும்.நம் ஊர் விஷயத்திற்கு வருவோம்.இன்றைக்கு விந்தை மனிதர் மக்கள் திலகம்,புரட்சித்தலைவரென்றெல்லாம் அழைக்கப்பட்ட எம்.ஜீ.ஆரின் நினைவு நாள். இன்றைக்கு நினைவில் இருக்கிறது. முதல் நாள் டிசம்பர் 23ந் தேதி, இரவு 10 மணியிருக்கும். நண்பரும், திரைப்படத்தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு என்னைத் தொலைபேசியில் அழைத்தார். ` உனக்கு ஒரு விஷயம் தெரியும. மக்கள் திலகம், கொடை வள்ளல் எம்.ஜீ.ஆரை நாம் இழந்துவிட்டோம். இன்னும் அதிகாரபூரமான செய்தி வரவில்லை. விசாரித்துத் தெரிந்து கொள்' என்றார். அப்போது நான் ஜீனியர் விகடனின் தலைமை நிருபர். உடனே களத்தில் இறங்கினேன். அப்போது ஐஏஎஸ் அதிகார் கற்பூரசுந்தர பாண்டியன், தமிழக அரசின் செய்தித் துறை செயலர். அவர் புதிதாக திநகர் கிருஷ்ணா தெருவில், இயக்குனர் பாரதிராஜா வீட்டிற்கு எதிரே குடிவந்திருந்தார். அவருக்கு தொலைபேசி இணைப்பு வராத நேரம். பாரதிராஜா வீட்டு தொலைபேசியைத்தான் பயன்படுத்தி வந்தார். அப்போது இயக்குனர் பாரதிராஜா, எம்.ஜீ.ஆரின அதிகாரபூர்வமற்ற திரையுலக கொள்கை பிரசார பீரங்கியாகவே இருந்துவந்தார்.

உடனே நான் பாரதிராஜாவை தொலைபேசியில் அழைத்தேன். அவரது போன் தொடர்ந்து பிஸியாகவே இருந்தது. அந்த நேரத்தில் பாரதிராஜா தொலைபேசியில் அத்தனை நேரம் பேசமாட்டார் என்பது எனக்குத் தெரியும்.வெகுநேரம் கழித்து இணைப்பு கிடைத்தது. `ராமாவரம் தோட்டத்தில் என்ன நடக்கிறது ?' என்றேன். சொல்லத் தயங்கினார், நானே தொடர்ந்தேன்,` இந்த நேரத்தில் உங்கள் தொலைபேசி பிஸியாக இருக்காது. உங்கள் எதிர்வீட்டுக்காரர் செய்தித்துறை செயலர் உங்கள் போனை பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என்றால் என்ன நடக்கிறது ?' என்றேன். அதற்கு மேல் பாரதிராஜாவால் விஷயத்தை மறைக்க முடியவில்லை. ஒப்புக்கொண்டார். அப்போது மணி இரவு பதினொன்று. உடனே நான் அப்போதைய அமைச்சர்கள் அரங்கநாயகம், திருநாவுக்கரசு,,நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த ஆலடி அருணாவிற்கு இந்த தகவலை சொன்னேன். அவர்க்ள் பறந்தடித்துக்கொண்டு தோட்டத்திற்கு ஒடினார்கள். இரவு ஒரு மணிக்கு எம்.ஜீ.ஆர் மறைந்த செய்தியை அமைச்சர் திருநாவுக்கரசர் உறுதி செய்தார்.

ஆனால் அதிகாரபூர்வமாக எம்.ஜீ.ஆர் மறைந்த நேரம் விடியற்காலை 3.30 மணி என்றுதான் இன்றும் இருக்கிறது. அந்த இரவில் அந்த தோட்டத்தில் நடந்ததெல்லாமே `ரகசியம் பரம ரகசியம்' எம்.ஜீ.ஆர் உடலை முதல் மாடியிலிருந்து கீழே கொண்டுவரும்போது லிப்ட் பழதாகி நின்றது. அவரது உடலை வெளியே கொண்டுவருவதற்கு முன் அந்த முகத்துக்கு கறுப்பு கண்ணாடியும், தொப்பியும் அணிவித்தவர் இயக்குனர் பாரதி ராஜா.இந்த செய்திகள் எல்லாமே ஜீனியர் விகடனில் மட்டுமே வெளிவந்தது. பின்னார் அரசியல் சூழல்கள் மாறியபோது, அன்றைய இரவு முழவதும் அந்த வீட்டு லிப்ட் தொடர்ந்து எதற்காக பயன்படுத்தப்பட்டது என்று சிபிஐ அதிகாரிகள் பின்னாளில் என்னிடம் விசாரணை நடத்தியது வேறு விஷயம்.

அன்று அந்த வள்ளலால் வாழ்வு பெற்று, அரசியல் முகவரி பெற்றவர்கள் பலர் இப்போது திமுக தலைவர் கருணாநிதியுடன் இருக்கிறார்கள். உள்ளூர விரும்பாவிட்டாலும் கூட இன்றும் அவரை புறக்கணித்துவிட்டு அரசியல் நடத்த முடியாது என்கிற நிலைதான அதிமுகவிற்கும் உள்ளது. எம்.ஜீ.ஆர். இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்பும் பல கிராமத்து விசுவாசிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர் இறந்து ஐந்து ஆண்டுகள் கழித்து அவரை எம்.ஆர். ராதா சுட்ட வழக்கை நான் தினமணி கதிரில் நான் தொடராக எழதினேன். அது கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, நேற்று கூட இலங்கையிலிருந்து ரமேஷ் என்கிற ஒரு வாசகர் அந்த புத்தகத்தை இலங்கை புத்தகக் கண்காட்சியில் வாங்கி படித்துக்கொண்டிருப்பதாக தொலைபேசியில் சொன்னார்.

அடிப்படையில் நான் சிவாஜி ரசிகன். எம்.ஜீ.ஆர் இருக்கும்போது தொடர்ந்து அவரது அரசுக்கு எதிராக எழதி வந்தவன்.இதனாலேயே அந்த கால கட்டத்தில் கருணாநிதியின் `குறுகிய கால' அன்பைப் பெற்றவன். ஆனாலும் அவரைப் பற்றிய புத்தகம் இன்றைக்கும் எனக்கு மரியாதையை தேடிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதுதான் எம்.ஜீ.ஆர் என்கிற மூன்றெழத்தின் மந்திரம்.

மனித உள்ளங்கள்தான் பெருங்கோவில் என்றார் வள்ளலார். அப்படியானால் எம்.ஜீ.ஆருக்குத்தான் எத்தனை லட்சம் கோவில்கள்!

Dec 20, 2008

`தர்ம’ தாய்


என்றக்கும் போல்தான் அன்றைக்கும் காலையிலேயே அலுவலகம் போயிருந்தேன். `SURE SUCCESS'அலுவலகத்தில் எனக்கும் ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கல்வியாளர்கள். நானோ படிக்காத தற்குறி. அந்த நிறுவனம் வருடந்தோறும்,சென்னை மேற்கு மாம்பலம் அகோபில மடம் பள்ளியின் தலைமையாசிரியர் திரு டி.எம்.எஸ்.(அவரைப் பற்றி ஏற்கெனவே மாண்புமிகு மனிதர்கள் பகுதியில் எழதியிருக்கிறேன்) அவர்களை கொண்டு ஆங்கில மீடியம் +2 மாணவர்களுக்கு ஒரு கணித கையேடு தயாரித்து, ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கொடுத்து வருகிறது. சென்ற வருடம் மட்டுமே 5,500 மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.பெரிய முதலாளிகளோ, அரசின் உதவியோ இல்லாமல் இந்த காரியத்தை செய்வது மிகவும் கடினம். சாதாரண நடுத்தர மக்களிடம் வாங்கியே இந்த காரியத்தை சாதித்தார்கள்.இதைத்தான் இந்த நிறுவனம் செய்து வருகிறது.

இந்த அலுவலகத்தில் நுழைந்த போது, வாசலிலிருந்த காவலாளி ` சார், ஒரு அம்மா, காலையிலிருந்தே உங்க அலுவலகத்தில யாரையாவது பாக்கணும்னு காத்திருக்காங்க’ அந்த பெண்மணி இருந்த இடத்தை காட்டினார்.வறுமையை பறைசாற்றும் உடை, தோற்றம். அந்த பெண்மணிக்கு நடுத்தர வயது. மற்றவர்கள் வராததால் அவரை வரவேற்பறையில் உட்காரச் சொன்னேன்.அவர் மற்றவர்களுக்காக காத்திருக்கவில்லை. தன் இடுப்பிலிருந்து ஒரு சுருக்கு பையை எடுத்து என் முன்னிருந்த மேஜை மீது வைத்தார். பிரித்தார். அதில் சில்லறையாகவும், நோட்டாகவும் இருந்த காசுகளை கொட்டினார். அவரது இடது கையில் சென்ற வருடம் இந்த நிறுவனம் கொடுத்த கணிதக் கையேடு.`ஐயா, எனக்கு இரட்டை பிள்ளைங்க. ஒண்ணு பொண்ணு, ஒண்ணு பையன். இரண்டும் போன வருஷம் +2 பரீட்சை எழதினாங்க. அவங்க படிக்கிற பள்ளிக்கு வந்து நீங்க புஸ்தகம் கொடுத்தீங்க. இரண்டு பேரும் நல்ல மார்க் வாங்கி அவங்க தகுதியிலேயே அண்ணா பல்கலைக்கழகத்தில இடம் கிடைச்சிருச்சு. நான் வேலை பாக்கற வீட்டுல அவங்க எங்க பிள்ளைங்க மார்க்கை பாத்துட்டு மேலே படிக்க வைக்கிறதா சொல்லிட்டாங்க.எங்க பிள்ளைங்களுக்கு கணக்குல நல்ல மார்க். அதுக்கு இந்த புஸ்தகம்தான் காரணம்னு சொல்றாங்க.இந்த தர்ம காரியத்தை நிறுத்திடாதீங்க. வருஷா வருஷம் கொடுங்க. என் பிள்ளைங்க மாதிரி எத்தனை குழந்தைங்க இருக்கும். இதில ஐயாயிரம் ரூபாய் இருக்குங்க. இப்போதைக்கு என்னால இவ்வளவுதான் இருக்கு. என் பிள்ளைங்க நல்ல வேலைக்கு போனா நிறைய கொடுப்பேன். இது சத்தியமுங்க’ சொல்லும்போதே நெகிழ்ந்தார்.

அவருடைய வருமானத்திற்கு அந்த பணம் லட்சங்களுக்கு சமம்.அந்த பணத்தை கூட தன் நகைகளை அடகு வைத்து கொடுத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன்.தனக்கு விளம்பரமோ, பெயரோ தேவையில்லை என்று சொல்லிவிட்டு போனார்.

மனிதர்களின் மேன்மை பணத்தினாலும், புகழினாலும் வருவதில்லை என்பதை புரிய வைத்தார். என் அலுவலக நண்பர்களிடம் சொன்னேன். `புத்தக தானத்தை நிறுத்தாதீர்கள். அடுத்த வேளைக்கு சோறில்லாத பெண்ணே செய்யும்போது, பல நல்ல உள்ளங்கள் செய்ய மாட்டார்களா ?’ என்றேன். தயக்கத்தோடு ஏற்றுக்கொண்டார்கள்.

அவர்களுக்கே திகைப்ப்பு! சென்றவிடமெல்லாம் தங்களால் முடிந்ததை மனிதர்கள் இந்த தானத்திற்கு உதவ முன் வருகிறார்கள்.எனக்கு தெரிந்தவரையில் வெளியே தெரிந்த நபர்கள் அளித்த நன்கொடை என்பது முதலில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா. கங்கா பவுண்டேஷன் செந்தில்.கோவை நண்பர் ராதாகிருஷ்ணன்,ஜெய மாருதி சாரிடபிள் ட்ரஸ்ட், டென்த் பிளானட் குமரன், அரசியல் பிரமுகர் கெளரிசங்கர், அடையாறு அருணாசலம், மதன் மோகன் என்று மனிதர்கள் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

இதில் `திருட்டுப் பயலே’ `சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் சென்ற வருடம் ஆயிரம் புத்தகங்களுக்கு பணம் கொடுத்தார். இந்த வருடம் இரண்டாயிரத்துக்கும் பணம் கொடுத்துவிட்டார். தமிழகம் முழவதும், மாநகராட்சி, முனிசிபில், ஏய்டட் பள்ளிகளில் படிக்கும் ஆங்கில மீடியம் ஏழை குழந்தைகளின் எண்ணிக்கை 18,000 அத்தனை பேருக்கும் இந்த தானம் சாத்தியமா என்பது தெரியவில்லை.

`எங்களுக்கு சாதாரண, படிப்பின் மேன்மை தெரிந்த நடுத்தர மக்கள் அவர்களால் இயன்றதைக் கொடுக்கட்டும். ஒரு புத்தகத்தின் விலை 95.அலுவலகத்துக்கு வந்த ஏழைத் தாயினால் ஐம்பது புத்தகங்களுக்கு கொடுக்க முடிகிறதென்றால், மற்றவர்களால் முடியாமலா போகும்.’ என்கிறார்கள்.

` என்னால் முடிந்ததை செய்கிறேன். கூடவே முடிந்தவர்கள் ஒரு பத்து பேரையாவது அறிமுகம் செய்கிறேன்’ என்று சொன்னேன்.

ஒரு நல்ல காரியம் தொடர இந்த வருடம் தூண்டிய அந்த பெண்மணிதான் என்னைப் பொருத்தவரையில் `தர்ம’தாய்

Dec 19, 2008

இடைவேளைக்கு பிறகு நான்


ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு வலைப்பின்னலுக்குள் வந்திருக்கிறேன். நடுவில் zee தொலைக்காட்சியில் தினமும் காலை 8.30லிருந்து 9 மணிவரை நானும் பத்திரிகையாளர் ஜென்ராம் அவர்களும் சேர்ந்து முதல் குரல் என்கிற அரசியல் நிகழ்ச்சி நடத்தத்துவங்கி இன்றோடு இரண்டு மாதங்கள் ஆறு நாட்கள் ஒடிவிட்டது. காலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அலுவலக அவசரத்தில் காலையில் பார்க்க முடியாமல் போகும் நேயர்களுக்காக அன்றிரவே இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது.

இது தவிர சனி, ஞாயிறு இரு தினங்களும் இரவு 9.30 மணிக்கு தமிழர் பார்வை என்கிற நிகழ்ச்சியின் நான் காணும் நேர்காணல்கள் ஒளிபரப்பாகிறது. அன்றாட நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி அரை மணி நேரம் என்றாலும் அதற்கான ஆயத்தங்கள் நிறையவே தேவைப்படுகிறது.

வலைப்பின்னலில் இந்த இடைவேளை கூட நான் என்னை புதுப்பித்துக் கொள்ள அல்ல இல்லாத புத்தியை இருப்பதாக நினைத்து கொஞ்சம் கூர் தீட்டிக்கொள்ள என்று நிறைய காரணங்கள் சொல்லிக்கொள்ளலாம். எது எப்படியோ மீண்டும் உள்ளே வந்துவிட்டேன். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும், நேரமும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.