Dec 30, 2012

பாகிஸ்தான்:



பகைக்கு கட்டிய பரிவட்டம்






இந்தியாவிற்குள் படுவேகமாக நுழைந்து கொண்டிருக்கும் பயங்கரத்தை ஊடகங்களும், படித்த அறிவுஜீவிகளும் உணர்ந்து கொண்டிருக்கிறார்களா? என்கிற கேள்வியே இந்த தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பீதியை எழுப்புகிறது. 
ஒரு பக்கம் அமெரிக்க வர்த்தகத்திற்கு இந்தியாவை திறந்துவிட்டாகிவிட்டது. வர்த்தகத்தகர்கள் ‘நாடு பிடிக்க’ வர்த்தக வேடத்தில்தான் வருவார்கள் என்பதை நாம் 1600 ஆண்டிலேயே உணரத் துவங்கிவிட்டோம்.
வர்த்தகர்கள் எப்போதுமே நேசக்கரத்தோடுதான் வருவார்கள். ஆனால், அவர்களது அடிவருடிகள், அடிமைகள் மூலமாகத்தான், தாங்கள் வர்த்தகம் செய்யப்போகும் தேசத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பார்கள். 
முதலில் வந்தது சில்லறை வர்த்தக அனுமதி. அடுத்து இந்தியாவிற்கு வந்தார் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக். 26/11 மும்பையில் நடந்த தாக்குதலை தடுக்க இந்திய உளவு அமைப்புகள் தவறிவிட்டன என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிவிட்டு, அரசு விருந்தினராக எல்லா உபசாரங்களையும் பெற்றுக்கொண்டு தன் நாடு திரும்பிவிட்டார். 
எத்தனை துணிச்சல்? இதை அந்த நாட்டு அமைச்சர் 9/11 சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்காவிற்குப் போய், அங்குள்ள உளவுத்துறை ஸ்தாபனங்களான எஃப்.பி.ஐ.யும், சி.ஐ.ஏ.வும்தான் காரணம் என்று சொல்லிவிட முடியுமா?
சரி! அவர்கள் அப்படியே சொல்லியிருந்தாலும் கூட, பின்லேடன் கொல்லப்பட்டது எங்கே? எந்த நாட்டில்? பாகிஸ்தானிலுள்ள அபோட்டாபாத்தில்தான், பின்லேடனை நிலத்தில் சுற்றி வளைத்து அமெரிக்க கப்பற் படையினர் கொன்றார்கள்.
எங்கள் உளவுத்துறையை குற்றம் சுமத்திவிட்டும், நாங்கள் தேடிக் கொண்டிருக்கும் ஒரு சர்வதேச தீவிரவாதியை உங்கள் நாட்டிலேயே வைத்திருந்தீர்களா? என்ன செய்கிறோம் பாருங்கள் என்று அமெரிக்கா, பாகிஸ்தானை குர்மா செய்திருக்காதா? அல்லது ரஷ்யாவை ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து அழிக்க நீங்கள் உருவாக்கிய அவதாரம்தானே பின்லேடன். நீங்கள் வளர்க்கலாம், நாங்கள் புகலிடம் கொடுக்கக்கூடாதா என்று கேட்கிற தைரியம்தான் பாகிஸ்தானுக்கு இருந்திருக்குமா?
‘பாகிஸ்தான் அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, அல்&கொய்தா பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரியுடனும் இணைந்து அபுஜிண்டால், ஜபியுல்லா, பாஹிம் அன்சாரி மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டினார்கள். அவர்கள் இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித் திரிந்துள்ளார்கள். ஆகவே மும்பை தாக்குதல் என்பது ஒரு அரசு ஆதரவு பெற்ற நாச வேலை அல்ல. இவையனத்தும், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்திருக்க வேண்டும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. கூடவே இரு நாடுகளுக்கிடையே தகவல் பரிமாற்றமும் இருந்திருந்தால் மும்பை தாக்குதலை தடுத்திருக்க முடியும்’ இதுதான் அவர் பேச்சின் சாராம்சம்.
கூடவே மும்பை தாக்குதலில் ஈடுபட்டு, சவுதி அரேபியாவிற்கு ஓடிய அபு ஜிண்டால். இந்திய உளவு அமைப்புக்காக வேலை செய்தார் என்று சொல்லியிருக்கிறார். இதை  மத்திய உள்துறை செயலர் ஆர்.கே. சிங், ‘அபத்தம்’ என்று சொல்லிவிட்டார்.
இந்திய தலைமையும், இங்கே ஆளுகிற வர்க்கமும் இந்த தேசத்தை கூறு போடத் துணிந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்த துணிச்சலோடு பேசியிருக்கிறார் மாலிக் என்றே தெரிகிறது.
அபுஜிண்டாலைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால்தான், பாக். அமைச்சரின் திமிரின் ஆழம் புரியும். 
அபு ஜிண்டால், சவுதி அரேபியாவிற்குள் தஞ்சம் புகுந்தான். அந்த நாடு அங்கிருந்து, அபு ஜிண்டாலை நாடு கடத்தி, இந்தியாவிற்கு அனுப்பியது. அபு ஜிண்டாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதி டெல்லி போலீஸார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரின் தங்கள் பிடிக்குள் வைத்து ஜூலை 5-ம் தேதி வரை விசாரித்தார்கள். அபு ஜிண்டாலுக்கு 26/11 தாக்குதலில் தொடர்புண்டு என்பதை சொன்னது, சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட கசாப்.
அபு ஜிண்டால் ஹம்சா என்கிற அபு ஜிண்டால், 26/11 போலவே இந்தியாவில் மேலும் சில தாக்குதல்களை நடத்த இந்தியாவிலுள்ள முஜாஹிதீன்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தான். 
டெல்லி போலீஸார் அவனிடம் நடத்திய 15 நாள் விசாரணையில், தான் சார்ந்த இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவிற்கும், இந்தியாவிலுள்ள முஜாஹிதீன்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. லஷ்கர்.இ.தொய்பா. ஆதரவுடன் இவர்கள் இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள். 
இந்திய அமைப்புக்கு உதவியாக இருந்து அவர்களுக்கு ஆயுதங்கள், வெடிகுண்டுகள் வாங்கிக் கொடுத்து உதவ நியமிக்கப்பட்டவன்தான் அபு ஜிண்டால். அபு ஜிண்டால் கைதானாலும், அந்தத் திட்டம் இன்னும் சிறைபடவிலை என்று உறுதியாக நம்புகிறார்கள் விசாரணை அதிகாரிகள். 
26/11க்குப் முன்பு, பாகிஸ்தானிலுள்ள முரிட்கே பகுதியில் இந்திய தாக்குதலுக்காக 12 தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்தான் அபு ஜிண்டால். அதேசமயம், மும்பையின் மையப்பகுதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உடனுக்குடன் அவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தான் டேவிட் கோல்மென் ஹெட்லி. இந்த தகவல் லஷ்கர்-இ-தொய்பா தலைவனான ஸகி&உர்&ரஹ்மான் லக்விக்கும் சென்று கொண்டிருந்தது.
அபு ஜிண்டாலின் பயிற்சி 2007லேயே துவங்கிவிட்டது. தாக்குதல் நடந்தது 26.11.2008. இந்தியாவில் கைதான சயத் சகியுதீன் என்கிற அபு ஜிண்டாலிடம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் என்று பல்வேறு பாதுகாப்பு, உளவு அமைப்புகள் விசாரணை நடத்தியது. ல.இ.தொ.ம், பாகிஸ்தான் ராணுவம் அதிகாரிகளும் சேர்ந்தேதான் இந்த தாக்குதலுக்கு திட்டம் திட்டினார்கள் என்று ஒப்புக் கொண்டிருக்கிறான் அபு ஜிண்டால். 
‘அபு ஜிண்டாலுக்கு, பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையையும் வழங்கியது பாகிஸ்தான் அரசு. மும்பை தாக்குதலுக்காக ஜிண்டால் தொடர்பு கொண்ட கராச்சியிலிருந்த கட்டுப்பாட்டு அறை முழுவதும் பாக் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது’ என்று அப்போது இந்திய உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் கொச்சியில் உறுதி செய்தார். 
அபு ஜிண்டால் கைது, அதன் மூலமாக மும்பை தாக்குதலில் பாக்.கிற்கு தொடர்பு வெளியானதும் ஒரு திடுக்கிடும் திருப்பம் பாக். போக்கில் ஏற்பட்டது. 
அமிர்தசரஸைச் சேர்ந்த சரப்ஜித் சிங் 22 வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு அங்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் சரப்ஜித் சிங்கை திருப்பி அனுப்புவதாக ஒப்புக்கொண்டது. சரப்ஜித் சிங்கின் குடும்பமே ஆனந்த வெள்ளத்தில் மிதந்தது. அபு ஜிண்டால் கைதுக்கு பிறகு அப்படியே பல்டி அடித்தது பாக் அரசு. நாங்கள் சரப்ஜித் என்று சொல்லவில்லை சுர்ஜித் சிங் என்பவரைத்தான் விடுதலை செய்வதாகச் சொன்னோம் என்று அப்படியே பச்சையாக உல்டா ஆனார்கள். 
அபு ஜிண்டால் வெளியிட்ட உண்மைகள் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டது. இந்த அவமானத்திற்கு பழிவாங்கவே சரப்ஜித் சிங் விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டது பாகிஸ்தான். இத்தனையும் நடந்த பிறகு, இந்தியாவில் பாகிஸ்தானின் இரட்டை வேடம் பற்றி எந்த ஒரு உரத்த குரலும் எழவில்லை. 
26/11&ல் உயிரிழந்த 166 பேர்களின் உயிரை விட, பீதியிலுறைந்த இந்தியாவின் அதிர்ச்சியெல்லாம், சில்லறை வர்த்தக விவகாரத்தில் கரைந்துபோனது. 
இன்னும் பாகிஸ்தானில் பதுங்கிக்கொண்டிருக்கும் மும்பை தாக்குதல் ‘வில்லன்கள்’ அங்கே கதாநாயகர்கள். அங்கே சுதந்திரமாக உலவிக்கொண்ட்டுதான் இருக்கிறார்கள். பாகிஸ்தானில், கொடிகட்டிப் பறக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. 
புகலிடமும், பாதுகாப்பும் கொடுத்தால்கூட,  தீவிரவாத அமைப்புகள் இப்போது பாகிஸ்தான் அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறது. கோபத்திற்கு என்ன காரணம்? அபு ஜிண்டால் வாக்குமூலத்திற்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு சர்வதேச நெருக்கடி அதிகமாகிவிட்டது. அதனால் பாகிஸ்தானின் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ. மும்பை தீவிரவாதிகளை காட்டிக்கொடுக்க, அமெரிக்காவுடன் சேர்ந்து ஜால்ரா போடுகிறது என்பதே கோபத்திற்குக் காரணம். 
இந்த கோபத்தை இப்போது அவர்கள் வெளிப்படையாகவே காட்டிக்கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, சரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, அவர் விதிக்கப்பட்ட தண்டனை காலத்தை அனுபவித்திருந்தால் அவரை விடுதலை செய்யலாம் என்று அறிவித்தார். 
இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று தீவிரவாத அமைப்புகளும், பாகிஸ்தானின் உளவுத்துறையும் அரசுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் அவாமி லீக் கட்சியும் இந்த நெருக்கடி போராட்டத்தில் உடன் நிற்கிறது. சரப்ஜித் சிங் பாகிஸ்தானின் எதிரி, அவரை விடுதலை செய்யக்கூடாது என்கிற எதிர்ப்பு குரல் அங்கே அதிகமாகிக் கொண்டிருக்கிறது. குரல்களை அதிகரிப்பதில் தீவிரமாக இருக்கிறது பாகிஸ்தானின் உளவுத்துறை. 
உண்மை நிலை இப்படியிருக்க, அரசு ஸ்தாபனமான உளவுத்துறை நமக்கு எமனாக இருக்கும்போது, அவர்களுடன் நாம் எப்படி தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும்?
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, நம்மை அழிக்க அல்லும்பகலும் பாடுபடும் பகைவர்களுக்கு கூட, விருந்து உபசாரமும் கொடுத்து, பரிவட்டம் கட்டி அனுப்புவோம்.
பகைவர்களுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே குணம் நீடிக்கட்டும், கூடவே 26/11ம்


                                                                                                   நன்றி : மீடியா வாய்ஸ் 29.12.2012

                                                                                                 www.mediavoicemag.com/magazine.html               .


Dec 12, 2012

ஒரு ஃப்ளாஷ்பேக் பிரளயம்







                                             பிரதமரிடமே பிளாக்மெயில்!


தி.மு.க. தலைவர் எத்தனையோ புத்தகங்கள் எழுதிவிட்டார். சுயநல சந்தர்ப்பவாதத்தினால் முன்னேறுவது எப்படி என்று அவர் அடுத்த தலைமுறைக்கு ஒரு தன்னம்பிக்கை நூல் எழுதலாம். சமீபத்தில் அந்தக் கட்சி நடத்திய டெசோ மாநாட்டில் ‘தி.மு.க. இளைஞர்கள் திராவிடக் கொள்கைகளில் தீவிர நம்பிக்கை வைக்க வேண்டும்’ என்று கருணாநிதி கோரிக்கை வைத்தார். திராவிடக் கொள்கைகள் என்ன என்று அவர் குடும்பத்து வாரிசுகளுக்கே தெரியாது. கட்சி என்பது பதவி + அதிகாரம் = பணம்  என்கிற கணக்கோடு வருபவர்களுக்கு எப்படி திராவிடம், பகுத்தறிவு என்பதெல்லாம் புரியும்? அதற்கு பதில் சந்தர்ப்பவாத அரசியலை கற்றுக் கொடுத்தால் கட்சியிலுள்ள நாலு பேராவது பிழைத்துக் கொள்வார்கள்.
அதுபோகட்டும். நாமாவது தி.மு.க. பாணி முன்னேற்ற பாதை அரசியல் என்ன என்பதை விளக்குவோம். அது சுலபம். எளிதாக புரிய வைத்துவிடலாம்.
நவம்பர் மாதம் 30-ம் தேதி மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அவர்கள் எப்ரல் 21, 1997லிருந்து 1998 மார்ச் 19 வரை சுமார் ஒன்பது மாதங்கள் இந்திய பிரதமராக இருந்தார். அவர் தலைமையிலான ஜனதா தள ஆட்சி கவிழ்ந்ததன் பின்னணியை பார்க்கும் முன் கொஞ்சம் குஜ்ராலை பற்றி தெரிந்து கொள்வோம்.
எளிமைக்கு குஜ்ரால் என்றே சொல்லலாம். 86-ம் வருடம் விகடனில் நிருபராக இருந்தபோது டெல்லியில் குஜ்ராலை சந்தித்து வியந்திருக்கிறேன். ஒரு தமிழனைவிட இலங்கை விஷயத்தில் அதிக தீவிரம் காட்டியவர். அந்த தீவிரத்தை பிரதமராக இருந்தபோது, செயலில் காட்டியவர். இவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், இலங்கையில் அதிபராக இருந்தவர் சந்திரிகா குமாரதுங்கா. 1997, மே மாதம் 13-ம் தேதி இந்திய பிரதமர் குஜ்ராலும், இலங்கை அதிபர் சந்திரிகாவும் இலங்கையில் சந்தித்தார்கள். அப்போது இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்களை விற்க தடை விதித்திருந்தது. இந்திய தடையை நீக்க வேண்டும் என்று சந்திரிகா கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கை இந்தியாவை இலங்கையில் ‘சுழலில்’ சிக்க வைக்கும் என்பதை உணர்ந்திருந்தார் குஜ்ரால். ‘நீங்கள் பாகிஸ்தானிடமிருந்தும், அதைவிட அதிகமாக சீனாவிடமும் ஆயுதம் வாங்குகிறீர்கள். இரண்டு தேசங்களுமே இந்தியாவுடன் நட்பாக இல்லை. அதனால் எங்கள் தடையை நீக்க முடியாது’ என்று உறுதியாக சொன்னவர். மேலும் அந்த ஆயுதங்கள் அங்கே தமிழர்களுக்கு எதிராக பயன்படும் என்பதையும் உணர்ந்தேயிருந்தார் குஜ்ரால்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். குஜ்ராலின் அமைச்சரவையில் தி.மு.க.வும் இருந்தது. குஜ்ரால் பதவி ஏன் பறிபோனது? அதற்கு போகுமுன், குஜ்ரால் மறைவுக்கு தி.மு.க. தலைவர் முரசொலியில் செலுத்திய அஞ்சலியைப் பார்ப்போம். அதில் ‘அவரை பிரதமராக முன்மொழிந்தபோது, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த என்னை நள்ளிரவு 12 மணிக்கு வந்து உறக்கத்திலிருந்த என்னை எழுப்பி பொன்னாடை அணிவித்ததையும், அதன்பிறகு நன்றி மறவாமல் நாட்டுக்கும், நமது கூட்டணிக்கும் விசுவாசமாக பணியாற்றியதையும் மறக்க முடியாது’ என்று சொல்லியிருக்கிறார் கருணாநிதி.
நன்றியும், விசுவாசமும் என்ன ஒருவழிப் பாதையா?
தி.மு.க.வைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு வார்த்தைகளுமே ‘ஒன் வே டிராபிக்’தான். அவர்களுக்கு எப்போதுமே தங்கள் காரியம்தான் முக்கியம். பொது நலன் என்பது இரண்டாம் பட்சம்தான். இதை குஜராலின் எழுத்து பூர்வமாகவே பார்க்கலாம். குஜ்ரால் தன்னுடைய சுயசரிதையை 519 பக்கங்கள் கொண்ட புத்தகமாக எழுதியிருக்கிறார். புத்தகத்தின் தலைப்பு MATTERS OF DISCRETION
அதில் அவர் தி.மு.க.வைப் பற்றி சொன்னது என்ன?
‘நான் பிரதமராக இருந்தபோது, பல பேரின் பெயர்களை பரிசீலித்து, எம். கலைவாணன் என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரியை சென்னை துறைமுகத்தின் தலைவராக நியமித்தோம். அப்போது கப்பல் துறைக்கு அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வின் டி.ஜி. வெங்கட்ராமன். அவருடைய ஒப்புதலின்பேரில்தான் இந்த நியமனம் நடந்தது.
அப்போது தமிழகத்தில் தி.மு.க. அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர் ஆலடி அருணா என்கிற அருணாச்சலம். இவர் என்னை 1997, நவம்பர் மாதம் 7-ம் தேதி சந்திக்க வந்தார். அவர் வந்த நோக்கம், காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்று கேட்பதற்காக என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையான நோக்கம் அதுவல்ல. சென்னை துறைமுக தலைவராக நியமித்தவரை மாற்ற வேண்டும் என்றார். நியமித்த சில நாட்களிலேயே அவரை மாற்றுவது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று நான் அருணாச்சலத்திடம் (ஆலடி அருணா) விளக்கினேன். மேலும் அது தேவையில்லாத சட்ட சிக்கல்களை உருவாக்கும் என்று விளக்கினேன்.
அடுத்து என்னை வியப்பில் ஆழ்த்திய சம்பவம் நடந்தது.  இந்த நியமனத்தை மாற்ற வேண்டும் என்று கருணாநிதி, சந்திரபாபு நாயுடுவை அணுகினார். நாயுடு என்னை அழைத்தபோது, அந்த உத்தரவை மாற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று நான் அவரிடம் விளக்கினேன். நாயுடு என்னை வற்புறுத்தினார். அதற்கு காரணம் இதைச் செய்யாவிட்டால், தி.மு.க. அமைச்சர்கள் என்னுடைய ஐக்கிய முன்னணி அரசிலிருந்து பதவி விலகுவதாக கருணாநிதி அவரிடம் சொன்னாராம்.
அன்று மாலையில் வழக்கமான அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தார். கூட்டம் முடிந்ததும். நான் மாறனை சில நிமிடங்கள் இருக்கச் சொன்னேன். அப்போது ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக நீதிபதி ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை வெளியாகியிருந்தது. ராஜீவ் கொலைக்கு தி.மு.க. தலைவர்களையும், வி.பி. சிங்கையும் ஜெயின் குற்றம் சாட்டியிருந்தார். முதலில் இதைப்பற்றி மாறனிடம் பேசினேன். பிறகு அவர் சார்ந்த துறையான கார் தயாரிப்பு பற்றி பேசினேன். அப்போது மாருதி கார் தயாரிக்கும் இந்திய கம்பெனிக்கும், அதன் கூட்டாளியான ஜப்பானின் சுசிக்கு கம்பெனிக்கு இடையேயிருந்த பிரச்னை குறித்து அவருடன் பேசினேன். அதற்கு பிறகு கலைவாணன் நியமன விவகாரம் குறித்து, ஏன் அந்த உத்தரவை திரும்ப பெறமுடியாது என்பதை விளக்கினேன். ஆனாலும். அவருடைய மாமா கருணாநிதியின் கருத்தையே அவரும் வலியுறுத்தினார். சென்னை துறைமுகத்திற்கு வேறு ஒரு தலைவரை நியமிக்க வேண்டுமென்றார். முடிவாக மாறன் நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார் என்றுதான் நான் நினைத்தேன்.
அன்றிரவு வனத்துறை மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைச்சராக இருந்த சய்புதீன் சாஸ் கொடுத்த விருந்தில் கலந்துகொண்டு வீடு திரும்பினேன். ராம் விலாஸ் பஸ்வான் என்னை அழைத்தார். கருணாநிதி அவரை தொலைபேசியில் அழைத்து, கலைவாணன் விவகாரத்தில் தான் அதிருப்தியாக இருப்பதாக தெரிவித்ததாகச் சொன்னார்.
அப்போது எங்கள் அமைச்சரவையில், விமானப் போக்குவரத்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனை அழைத்தேன். கருணாநிதியின் இந்த போக்கை பற்றி மூப்பனாரின கருத்தை அறிய விரும்புவதாகச் சொன்னேன். சென்னையிலிருந்த மூப்பனாரை, ஜெயந்தி நடராஜன் போனில் அழைத்து பேசினார். மூப்பனார், மறுநாள் காலை என்னுடன் போனில் பேசுவார் என்று ஜெயந்தி  சொன்னார். பிறகு அன்றிரவு ஜெயந்தி என்னை போனில் அழைத்தார். காவிரி விவகாரத்தை காரணம் காட்டி, அமைச்சரவையிலிருந்து விலகி, வெளியிலிருந்து ஆதரவு தர யோசிப்பதாக கருணாநிதி பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்திருப்பதாக ஜெயந்தி சொன்னார். ஆனால், உண்மையான காரணம் காவிரி விவகாரம் அல்ல. சென்னை துறைமுகத் தலைவர் பதவி என்பது பணம், அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி, அதனால்தான் அந்தப் பதவியை கருணாநிதி தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறார்’ என்று ஜெயந்தி என்னிடம் தெரிவித்தார்.
நான் சந்திரபாபு நாயுடுவிற்கு போன் செய்து நிலைமையை விளக்கினேன். கருணாநிதியின் போக்கு குறித்து நாயுடு மிகவும் வேதனைப்பட்டார். அவருடன் போனில் பேச முயன்றார் நாயுடு. ஆனால், கருணாநிதி கிடைக்கவில்லை. தமிழ்நாடு முதல்வருடன் தான் மறுநாள் பேசுவதாக நாயுடு என்னிடம் தெரிவித்தார். சென்னைக்கு கிளம்பிக்கொண்டிருந்த மாறனிடம் நான் பேசினேன். கருணாநிதியுடன் பேசவில்லை. அவரது அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார் அவர். ஆனால், மாறன் இனிமையாகப் பேசினார். எனக்கு ஒத்துழைப்பதாகச் சொன்னார். அதிர்ஷ்டவசமாக கலைவாணன் அந்த பதவியை ஏற்றுக்கொள்ளாததால் பிரச்னை சுமூகமாக முடிந்தது.
அதற்குப் பிறகு ஜெயின் கமிஷனை காரணம் காட்டி, தி.மு.க. அமைச்சர்களை நீக்க வேண்டுமென்று காங்கிரஸும், அதன் தலைவர் சீதாராம் கேசரியும் முரண்டு பிடித்தார்கள். விலக்காவிட்டால், ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று மிரட்டினார்கள். இடைக்கால அறிக்கையை வைத்துக்கொண்டு தி.மு.க அமைச்சர்களை நீக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
காங்கிரஸ் ஆதரவை வாபஸ் வாங்கிக்கொண்டதும். பெரும்பான்மை இல்லாததால் நான், தார்மீகப் பொறுப்பேற்று என் பதவியை ராஜினாமா செய்தேன். ஆட்சி கவிழ்ந்தது. அதற்குப்பிறகு தேர்தல் வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே.’
இதுதான் குஜரால் சுயசரிதையில் உள்ள முக்கிய குறிப்புகள்.
‘ராஜீவ் கொலையில் தி.மு.க.விற்கு தொடர்புண்டு. அந்த தி.மு.க. அமைச்சர்கள் இருக்கும் ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு தரமாட்டோம்’ என்று பிடிவாதமாக குஜ்ரால் ஆட்சியை அன்று கவிழ்த்தது காங்கிரஸ்.
ஆனால், அதே காங்கிரஸோடு தி.மு.க. கூட்டணி போட்டுக்கொண்டதுவோ இன்று.





           நன்றி : மீடியா வாய்ஸ்  15.12.2012     

Nov 19, 2012

மேற்கிந்திய கம்பெனி பராக் பராக்





சரித்திர புருஷர்



தலைநகரிலிருந்து திரும்பி வேறு விஷயத்திற்கு வரலாம் என்றுதான் ஆசை. ஆனால், விட மறுக்கிறார்கள் இந்த காங்கிரஸ்காரர்கள்.
              'கிழக்கிந்திய கம்பெனி என்பது சரித்திரம்'
              'சில்லறை வர்த்தகம் என்பது எதிர்காலம்'
இது சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் பாரத பிரதமர் உதிர்த்த பொன்மொழிகள். இதை வருங்கால இந்தியாவைப் பற்றிய ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவே (confessional statement) எடுத்துக்கொள்ளலாம். சாத்தியமில்லாததையெல்லாம் சாத்தியம் என்று சொல்லி இந்தியர்கள் தலையில் மிளகாய் அரைப்பதுதான் எங்கள் வேலை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் பிரதமர்.
நம்மில் பலருக்கு சரித்திரம் என்றாலே வேப்பங்காய். சரித்திரம் தெரிந்தால்தானே, நம் எதிர்காலம் புரியும்.?
முதலில் கிழக்கிந்திய கம்பெனி என்கிற சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்போம். அப்போதும் சில்லறை வர்த்தகத்தில்தான் நாடு பிடிக்கிற வேலை நடந்தது என்கிற உண்மை புரியும்.
காலம். 16&ம் நூற்றாண்டு.  பிரிட்டிஷ் வியாபாரிகள். தங்களுக்கு வேண்டிய மிளகு, லவங்கம், ஏலக்காய் போன்ற பொருட்களை டச்சுக்காரர்களிடம் வாங்கி வந்தார்கள். டச்சுக்காரர்கள் திடீரென்று விலையை ஏற்றிவிட்டார்கள். அதுவும் ஒரே நாளில் 5 ஷில்லிங். இனி இவர்களிடம் வியாபாரம் கூடாது என்று 24 லண்டன் வியாபாரிகள் முடிவெடுத்தார்கள். 1549 செப்டம்பர் 24&ம் தேதி 75 ஆயிரம் பவுண்டுகள் மூலதனத்துடன் லண்டனில் ஒரு கம்பெனி ஆரம்பித்தார்கள். அதே ஆண்டில் பிரிட்டிஷ் முதலாம் அரசி, இந்த கம்பெனி 'தன்னம்பிக்கை முனைக்கு' அப்பால் கீழ்த்திசை நாடுகளில் வியாபாரம் செய்து கொள்ளவும் அனுமதி அளித்தார். அந்த கம்பெனிக்கு பெயர்தான் கிழக்கிந்தியக் கம்பெனி.
உடனே கிளம்பினார் வியாபாரி 'வில்லியம் ஹக்கின்ஸ்' 500 டன் எடை கொண்ட 'ஹெக்டர்' என்கிற கப்பலில் 1600 ஆகஸ்ட் 24-ம் நாள் பம்பாய்க்கு வடக்கே உள்ள சூரத் துறைமுகத்தில் வந்து இறங்கினார். சரி, இங்கே வியாபாரம் செய்ய அரசு அனுமதி வேண்டுமே? அதனால் அப்போது இந்தியாவை ஆண்டது மொகலாய மன்னர் ஜஹாங்கீர். அவரைப் பார்க்க ஆக்ராவை நோக்கி புறப்பட்டார். ஜஹாங்கீரின் தர்பார் மண்டபத்தை கண்டு மிரண்டு போனார் ஹாக்கீன்ஸ். உலகிலேயே செல்வம், வலிமை மிகுந்த, மிகப்பெரிய நிலப்பரப்பும், மக்களும் கொண்ட தேசம் இந்தியா. அதன் சக்ரவர்த்தி ஜஹாங்கீருக்கு முன்னால் இங்கிலாந்து ராணியே ஒரு சிற்றரசிதான் என்கிற எண்ணம் அவருக்கு உறுதியாயிற்று.
ஜஹாங்கீரும் அவரை உபசரித்து, அனுமதியும் அளித்தார். பம்பாய்க்கு வடக்கே உள்ள பகுதிகளில் வியாபாரம் நடத்தலாம். பொருட்களைக் குவிக்க பண்டகசாலை அமைத்துக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. மிகக்குறுகிய காலத்தில் வியாபாரம் பன்மடங்கு பெருகிறது. மாதத்திற்கு இரண்டு கப்பல்கள் இங்கே வந்தன. இங்கேயிருந்து பட்டுநூல், வாசனை திரவியங்கள், மிளகு போன்ற பொருட்கள், அவர்கள் நாட்டில் கொண்டுபோய் மலைபோல் குவித்தன. எல்லா செலவும் போக பல மடங்கு லாபம் கொழித்தது.
'எங்களுக்கு தேவை வியாபாரம். நாடு பிடிப்பது எங்கள் நோக்கமல்ல' என்றுதான்  கிழக்கிந்திய கம்பெனி முதலில் பிரகடனப்படுத்தியது.
இங்கே இருந்த சிற்றரசர்களும், நவாபுகளும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதை கண்டார்கள். ஆளுக்கொரு பக்கமாக ஆட்சி செய்யும் இவர்கள் எப்போதும் போருக்கு தயாராகயிருப்பார்கள். அந்நியர்களுக்காவது தங்கள் நிலங்களை விட்டுக்கொடுப்பார்கள். தங்களுக்குள் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள் என்கிற உண்மையை புரிந்து கொண்டார்கள்.
தங்களுக்கு அடங்காத ஒரு நவாபை 1757 பிளாசிப் போரில், ராபர்ட் க்ளைவ் தலைமையில் கைப்பற்றினார்கள். வட இந்தியா அவர்கள் வசமாயிற்று. 250 ஆண்டுகள் இங்கே ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து, விக்டோரியா மகாராணி ஆட்சியை ஏற்றுக்கொண்டார். அவருடைய ராஜ பிரதிநிதியாக வைஸ்ராய் என்பவர் இந்தியாவை ஆண்டு வந்தார். அப்படிப்பட்ட ஒரு வைஸ்ராய்தான் நமக்கு சுதந்திரம் வந்தபோது இங்கே இருந்த மவுண்ட்பேட்டன். அந்த வைஸ்ராய்க்காக, கட்டப்பட்ட மாளிகையின் நிலப்பரப்பு மட்டுமே இரண்டு லட்சம் சதுர அடிகள். அதன் இன்றைய பெயர் ரெய்சினா ஹில்ஸ். இப்போது அங்கே இருப்பவர் வைஸ்ராய் அல்ல. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.

 

அப்படி ஆண்ட பிரிட்டிஷாருக்கும். இந்திய பாமர மக்களுக்கும் ஒரு ஒற்றுமை பாலம்  தேவை என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் காங்கிரஸ் கட்சி. முதலில் பம்பாயிலும், அடுத்தது கல்கத்தாவிலும், மூன்றாவது சென்னையிலும் மகாசபை கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பேச அழைக்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் பிரிட்டிஷ் ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் எஜமான விசுவாசத்துடன்தான் பாராட்டிப் பேசினார்கள். காங்கிரஸ், முஸ்லீம் லீக் இரண்டுமே 'MADE IN ENGLAND' ரகம்தான்.
அன்றைக்கு பிரிட்டிஷார் அவர்களாக மிளகு வாங்க வந்துதான் நம்மை மிளகாய் அரைத்தார்கள். இன்று நிலை அப்படியில்லை. நாமே அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறோம். அன்று கிழக்கிலிருந்து வந்த பிரிட்டிஷ், இன்று மேற்கிலிருந்து வரும் அமெரிக்கா இது ஒன்றுதான் வித்தியாசம். அன்று வந்தது கிழக்கிந்திய கம்பெனி. இன்று வரப்போவது, அமெரிக்கா சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள். அதைச் சுருக்கமாக பழைய நினைவாக மேற்கிந்திய கம்பெனி என்று அழைக்கலாம்.
இந்த மேற்கிந்திய கம்பெனி, மகாராணியின் கட்டுப்பாட்டில் இருக்காது. அதற்குப் பதிலாக அமெரிக்க அதிபர் வசம் இருக்கும். அவர்தான் உண்மையில் வைஸ்ராய், அவரை ஆட்டி வைப்பது பன்னாட்டு நிறுவனங்கள். வேண்டுமானால், இந்தியா பெரிய நாடு என்பதால், நம் நாட்டு பிரதமரையும் வருங்காலத்தில் வைஸ்ராய் என்றே அழைக்கலாம்.


                                                                                நன்றி: மீடியா வாய்ஸ் 24.11.12







Nov 1, 2012

  வாழும் வரகவி வாலி






நேற்றோடு கவிஞர் வாலிக்கு 81 வயது முடிந்துவிட்டது. இன்று அவர் ஒரு நாள் முதிர்ந்த குழந்தை. எனக்கு கண்ணதாசனும் வாலியும், பெரியப்பா, சித்தப்பா முறையாவார்கள். எப்படி? என் தாய் வழிப் பாட்டனார் பிரபல தமிழறிஞர் பி.ஸ்ரீ. 1930 களிலேயே ஆனந்த விகடனில் கம்ப சித்திரம் எழதியவர். கம்பராமாயணத்தில் கரை கண்டவர். அவருடைய கம்ப ராமாயண பிரசங்கத்தின் பிரதான விசிறி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.

அந்தப் பாட்டனாரை கண்ணதாசனும், வாலியும் தங்களுடைய தமிழ் வழிப் பாட்டனாராக ஏற்றுக்கொண்டவர்கள். அதனாலேயே செட்டிநாட்டு கண்ணதாசனும், ஸ்ரீரங்கத்து வடகலை அய்யங்கார் வாலியும், எனக்கு பெரியப்பா, சித்தப்பா முறையாவார்கள்.

கண்ணதாசனுக்கும், வாலிக்கும் என்ன வித்தியாசம் ? கண்ணதாசன் `எடுப்பார் கை பிள்ளை’ வாலியோ ` எங்க வீட்டுப் பிள்ளை’ கண்ணதாசன் எதையும் பட்டுத் தெரிந்து கொள்வார். வாலி, கண்ணதாசன் பட்டதைப் பார்த்து தன்னை வழிநடத்திக்கொள்வார். பொய் சொல்லுவதில் இருவருமே வல்லவர்கள் தங்கள் பாடல்களில்!

உதாரணமாக, தேவிகா நல்ல நடிகைதான். ஆனால் அவரது இடை எப்படி இருக்கும் ? தெரிந்த விஷயம்தான். இடையா அது இடையா , அது இல்லாதது போலிருக்குது ‘ என்றார் கண்ணதாசன். வாலியோ ` ஒடிவது போல் இடையிருக்கும்’ என்பார். அதனால் கவித்துவமான பொய் சொல்லுவதில் இருவருமே மங்கைகளை மயக்கும் மாய ஜாலப் பொய்யர்கள்.
 .
வாலி ஒரு வரகவி. நாம் வாழம் நாட்களில் இப்படி ஒரு கவிஞன் இருக்கிறானே என்று பெருமைப் படக்கூடிய அளவிற்கு இன்று உயர்ந்து நிற்கிற ஒரு மகா கவிபுருஷன் வாலி.

ஒரு கவிஞனை இனம் காணாத ஒரு நாடு, அதன் மேன்மையின் மகத்துவத்தை இழந்து  பணம் தேடும் வெற்று மனிதர்களை கொண்ட ஒரு வறண்ட சவக்காடு.

இதற்கு உதாரணம் மகாகவி பாரதி. கம்யூனிஸம் – கிருஷ்ணத்துவம் இரண்டும் இரு வேறு துருவங்கள். இதை இரண்டையும் இணைத்துப் பார்த்தவன் மகாகவி பாரதி. ரஷ்யப் புரட்சியை கலியை அழித்து, கிருதாயுகத்தை கொணர்ந்த கிருஷ்ணத்துவம் என்றான் பாரதி.

`இலக்கியமும், அரசியலும்  இணைகிற பொழதுதான் இப்படிப்பாட்ட கவி மேன்மையின் சத்தியங்கள் வெளிப்படும். எந்த அரசியலில் இருந்து இலக்கியமும் கவிதையும் வெளி வராதோ அது மக்களுக்கு உகந்தது அல்ல ‘ என்பார் எழத்தாளர் ஜெயகாந்தன்.

இன்றைய அரசியலுக்கு, இலக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.. அரசியல் என்பது ஒரு வர்த்தக ஸ்தாபனம்.. அதில் வியாபாரிகள்தான் இருப்பார்கள். அங்கே இலக்கியம் தேடினால்  கழதைகளிடம் கற்பூர வாசனையை நுகர்கிற கதைதான். . ஆனால், நமக்குள் இருக்கும் மென்மையின் மேன்மைகளை காக்க வேண்டுமானால் கவிஞர் வாலியின் பெருமைகளை உணர்ந்தே இருக்க வேண்டும்.

 கண்ணதாசனா – வாலியா ? யார் சிறந்த கவிஞர் என்று சர்ச்சை இருந்த காலங்கள் ஒன்று உண்டு. அது வெட்டி வேலை. கண்ணதாசன் காலத்திலேயே அவருக்கு இணையாக பாடல் எழதி கொடி கட்டிப் பறந்தவர் வாலி. அதனாலேயே வாலியின் பல பாடல்களை இன்னும் பல பேர் கண்ணதாசன் பாடல்கள் என்று சொல்லுவார்கள்.

கண்ணதாசனுகே கூட சில சமங்களில் இது தன் பாடலா வாலியுடையதா என்று குழப்பம் வந்ததுண்டு. கண்ணதாசன் ஆனந்த ஜோதி படத்தில் ` நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா ‘ என்று ஒரு பாடல் எழதியிருப்பார். இதயத்தில் நீ படத்தில் `உறவு என்று சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கு,ம் காதல் என்றொரு கதை இருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்’ `மன்னவனே அழலாமா, கண்ணீரை விடலாமா.’ ` மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள்’ ` அழகு தெய்வம் மெல்ல மெல்ல; ` கடவுள் தந்த இரு மலர்கள், கண் மலர்ந்த பொன்மலர்கள்’ ` மதுரையில் பறந்த மீன் கொடியை’ ` அன்புள்ள மான்விழியே. கண் போன போக்கிலே கால் போகலாமா ?’’ போன்ற பல வாலியின் பாடல்கள் அந்த நாளைய ரசிகர்களை குழப்ப வைத்த பாடல்கள்.

கண்ணதாசனின் பாடலினால்தான் தான் திரையுலகத்தில் நிலைத்து நிற்கிறேன் என்று வாலியே சொல்லியிருக்கிறார்.

கண்ணதாசன் பாடல்கள் மக்கள் மனதில் பதிந்தது. ஆனால் வாலியின் பாடல்களோ அந்த மக்களை கவர்ந்த மகோன்னத திரை நாயகனை அரசியல் சிம்மாசனத்திலேயே கொண்டு போய் சேர்த்தது.. வாலி என்கிற வாகனம்தான் எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழத்தை கோட்டைக்கு கொண்டு போய் சேர்த்தது என்பேன்.

நல்ல பாடல்கள் ஒரு படத்திற்கு முகவரி.அன்றைய பாடல்கள், மக்களின் அன்றாட வழக்க மந்திரம். ` மூன்றெழத்தில் என் மூச்சிருக்கும்,. என்ற பாடல்தான், அன்றைய திமுகவிலிருந்த எம்.ஜி.அரையும், திமுகவையும் இணைத்து பார்க்க வைத்தது. உதயசூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே, என்று பகிரங்கமாக திமுக சின்னத்தையே எம்ஜி.ஆர் மூலமாக மக்களிடம் 1965ல் கொண்டு சென்றது. ` கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்’ என்று எம்.ஜி.ஆர் பாடியபோது அவரை ஒரு கம்யூனிஸ்டாக மக்கள் பார்த்தார்கள்.
`ஏமாற்றாதே ஏமாற்றாதே,’என்று அவர் உச்சரித்தபோது, அவரை ஒரு ஏழைப்பங்காளனாக பார்த்தார்கள். `ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்’ என்றபோது  எம்.ஜி.ஆரை ஒரு இறைதூதராக கண்டார்கள். `அவன் வீட்டுக்கு கதவுகள் இல்லை – அந்த வாசலில் காவல்கள் இல்லை’ அவன் கொடுத்தது எத்தனை கோடி, அந்த கோமகன் திருமுகம் வாழி என்ற போது அங்கே ஒரு கொடை வள்ளலைக் கண்டார்கள்.

`உங்கள் பாடல்கள் எங்கள் வெற்றிக்கு பெரிது உதவி செய்தது’ என்று அண்ணாவே 67 வெற்றிக்குப் பிறகு வாலியிடம் ஒப்புக்கொண்டார்.
வாலி எம்.ஜிஆருக்கு எழதிய பாடல்கள் எல்லாமே அரசியல் கலந்த திரை இலக்கிய பாடல்கள்..`ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்’ என்ற போது தமிழகத்து மீனவ வாக்கு வங்கிகள் எம்.ஜி.ஆர் கணக்கில் வந்து சேர்ந்தது அதுவே இன்று அதிமுகவிற்கு வைப்பு தொகையாக மாறிவிட்டது.

கவிஞன் வாக்கு பொய்க்காது, என்பதை எம்.ஜி.ஆர் வாழ்க்கை மூலமாக உறுதி செய்தவர். வாலி ஒரு வாழம் வரகவி. தமிழ்ச் சொற்களின் விலாசம் எது என்று என்னை கேட்டால், `நம்பர் 20. கற்பகம் அவென்யூ, சென்னை 28 என்று வாலியின் வீட்டு விலாசத்தை கொடுக்கலாம்.
வாலியின் ` அவதார புருஷன்’ ` பாண்டவர் பூமி’ ராமானுஜ காவியம் இவையெல்லாம் இதற்கு உதாரணங்கள். `அழகு நிலாவை இடுப்பில் ஏந்தி – அழக்கு நிலாவை அழைத்தாள் கோசலை’ பிள்ளை நிலாவின் பொலிவைப் பார்த்து வெள்ளை நிலாவும் வெட்கப்பட்டது’ என்று குழந்தை ராமனை பற்றி சொல்லுவார்.

பாமரனைச் சென்று அடைவதே சிறந்த இலக்கியம் என்பார்கள். அதற்கு வாழம் வழிகாட்டி வாலி.

அவருடன் அன்றாட பழகும் பல நண்பர்களைவிடவும் நான் அவருக்கு நெருக்கம்.எப்படி? அவருக்கு நெருக்கமானவர்கள் பெயர்களை அடிக்கடி குறிப்பிடுவார். அந்த வரிசையில் என்றுமே நான் இருந்ததில்லை.` ஊரார் பிள்ளையைத்தான் ஊட்டி வளர்க்க வேண்டும். தன் பிள்ளை தானே வளரும்’ என்கிற தாயுள்ளத்தோடு என்னைப் பார்ப்பவர்.

நடிகர் சிவகுமாரை `கலையுலக மார்கண்டேயன் என்பார்கள். அதே கலையுலகத்தின் `கவியுலக மார்கேண்டேயன்’ எனலாம்.தனது 31 வயதில் பாட்டால் பவனி வரத் துவங்கிய வாலி, இன்று 21 வயது இளம் இசையமைப்பாளனுக்கு ஆங்கிலம் கலந்த தமிழிலும் எழதிக்கொண்டிருப்பதே அவர் மார்கண்டேயத்தனத்திற்கு எடுத்துக் காட்டு.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட இந்திய ஒருங்கிணைப்பின் சிற்பி வல்லபாய் படேல் பிறந்த அதே தினத்தில் பிறந்தவர் இந்த இசைந்த மனிதர் வாலி. இவரையும் நிச்சயம் வரலாறு குறித்துக்கொள்ளும். வாழ்க நீ எம்மான் !

Oct 30, 2012

அண்ணனுக்கு`ஜே’



                            அண்ணனுக்கு`ஜே’ 

                                  



உலக முதலாளியான அமெரிக்காவில் 'எஜமானர்' தேர்தல் நவம்பர் 6 ம் தேதி நடக்கிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஒபாமா மீண்டும் களத்தில் இருக்கிறார். குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னே இருக்கிறார். அமெரிக்க தேர்தலில் நமக்கென்ன அக்கறை என்று இந்தியர்கள் அலட்சியமாக இருந்துவிட முடியாது.
நமது வருங்கால 'முதலாளி' அமெரிக்க அதிபர்தான் என்கிற பயம் இந்தியனுக்கு வேண்டும். வருங்காலத்தில் நம்மை யாரும் இந்தியன் என்று சொல்லப்போவதில்லை. 'பழுப்பு அமெரிக்கர்'கள் என்றுதான் அழைப்பார்கள். அமெரிக்காவின் பூர்வ குடிகளான செவ்வந்தியர்களைப்போல. அமெரிக்காவில் சிவப்பு இந்தியர்களா? என்று அப்பாவிகள் கேள்வி கேட்கலாம். அவர்களுக்காக கொஞ்சம் அமெரிக்க சரித்திரத்தை இந்த நேரத்திலே திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியம்.
அமெரிக்கா என்பது குடியேறிகளின் தேசம். 'மண்ணின் மைந்தர்கள்' என்பது அங்கே கிடையாது. இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் அடிப்படையில் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே பிரிட்டிஷ் ஆளுமையிலிருந்த தேசங்கள். இங்கே தனது வியாபாரத்தை பெருக்க பிரிட்டிஷ் முதலில் கிழக்கிந்திய கம்பெனியை அனுப்பியது. அதேபோல் அமெரிக்கா என்கிற நீண்ட நிலப்பரப்பில் பிரிட்டிஷ்காரர்கள் வந்து குடியேறினார்கள். அமெரிக்காவில் முதலில் பிரிட்டன் குடியேறிய பகுதி வர்ஜீனியா.
சரி, நகரம் உண்டாயிற்று. அங்கே மக்கள் வேண்டாமா? மக்கள் வேண்டுமென்றால், அந்தப் பகுதியில் மக்களுக்கு ஏதாவது பிழைக்க வழி வேண்டாமா? அதனால் மன்னரின் யோசனைப்படி அந்தப் பகுதியில் ஏராளமான புகையிலைத் தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த 'க்ளைமேட்'டிற்கு புகையிலைதான் நன்றாக வளரும். இதை வாங்கி நிர்வாகம் செய்ய இங்கிலாந்திலிருந்து பல பணக்காரர்கள் (அதாவது பிரபுக்கள்) அமெரிக்காவிற்கு போனார்கள். கூடவே கூலி வேலை செய்ய ஆப்ரிக்காவிலிருந்து ஏராளமான அடிமைகளையும் அங்கே இறக்குமதி செய்தார்கள்.
உண்மையில் அந்த மண்ணின் மைந்தர்கள் செவ்விந்தியர்கள்தான். அவர்களுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? யாருக்குமே தெரியாது. அவர்கள் சிவப்பர்களும் இல்லை, இந்தியர்களும் அல்ல. யாரோ எப்போதோ அவர்களுக்கு கொடுத்த அடை பெயர் அப்படியே நிலைத்துவிட்டது. ஆனால், உண்மையில் அவர்கள்தான் அந்த மண்ணின் பூர்வ குடிகள். இன்றைய அமெரிக்காவிற்கு உண்மையில் செவ்விந்தியா என்றுதான் பெயர் வந்திருக்க வேண்டும். செவ்விந்தியர்களும், அடிமைகளும்தான் அமெரிக்க சரித்திரத்தின் அவமானச் சின்னங்கள். அடிமைகளை வைத்திருப்பது ஒரு பணக்கார அங்கீகாரமாக அமெரிக்க முதலாளிகள் நினைத்தார்கள். அந்த அடிமைகள்தான் கருப்பர்கள். அதாவது நீக்ரோக்கள்.
ஆப்ரகாம் லிங்கன் என்கிற ஜனாதிபதி வந்த பிறகுதான் இந்த அடிமைத்தனத்தை அடியோடு ஒழித்தார். ஒரு கருப்பர் என்பவர் அங்கே ஒரு பன்றிக்கு சமானம். எந்த அளவுக்கு கேவலப்படுத்தப்பட்டார்கள் என்றால், அவர்களின் உயர்வு என்பது ஒரு கற்பனை கதையின் கதாபாத்திரமாகவே இருந்தது. அதை வைத்துதான் பல வருடங்களுக்கு முன்னால் இர்விங் வாலஸ் என்கிற பிரபல எழுத்தாளர் 'தி மேன்' என்று ஒரு நாவல் எழுதினார். அதன் கதைச்சுருக்கமே ஒரு கறுப்பர் அமெரிக்க ஜனாதிபதி ஆனால், அதன் விளைவுகள் என்ன என்பதுதான். அந்த கற்பனைக் கதாபாத்திரத்தின் உண்மை வடிவம்தான் அமெரிக்காவில் நான்காண்டுகளுக்கு முன்னால் அதிபரான பராக் ஒபாமா. அவர் ஒரு கருப்பர், அவர் இப்போது மீண்டும் போட்டியிடுகிறார்.
உலகமயமாக்கல் என்கிற சொல் இன்றைக்குத்தான் நம்மை வந்து சேர்ந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவிலேயே அது அமெரிக்காவில் புழக்கத்துக்கு வந்துவிட்டது. அருமையான பலனும் கொடுக்கத் தொடங்கியதில்தான் அமெரிக்காவின் வெற்றி ஒளிந்திருக்கிறது. அடிமைகளின் உழைப்பு, நாடெங்கும் போடப்பட்ட இருப்புப் பாதைகள், குடியேற்ற நடைமுறையில் எளிமை இவை மூன்றும்தான் அமெரிக்க வெற்றியின் ஃபார்மூலாக்கள்.
அமெரிக்கா என்பது ஜனநாயகப் போர்வையில் ஒளிந்திருக்கும் ஒரு சர்வாதிகார நாடு. அந்தப் பாதையில்தான் இப்போது நம்மை இந்தியப் பிரதமரும், மாண்டக் சிங் அலுவாலியாவும், நமது சிவகங்கை சீமான் சிதம்பரமும் அழைத்துப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதை பாமரன் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.
அங்கே போன தொழிலதிபர்களுக்காக அவர்கள் ஆதிவாசிகளான செவ்வந்திர்களின் நிலத்தை பல நூறு ஆண்டுகளாக பறித்தார்கள். உள்ளூர்வாசிகளை பஞ்சப் பராரிகளாக்கினார்கள். இதற்கும் இப்போது இந்தியாவில் மாவோயிஸ்டுகள் உருவாவதன் பூர்வ கதையும் அமெரிக்காவிலிருந்து வந்ததுதானா என்று யாராவது யோசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அது ஒரு தற்செயலான மன்மோக மந்திரம். அதாவது தொழில் வளர்ச்சிக்காக விளைநிலங்களை விற்கலாம் என்பதுதான் அமெரிக்காவின் அடிப்படை சித்தாந்தம்.
அந்த முயற்சியில் அவர்கள் இறங்கியபோதுதான் செவ்விந்தியர்களுக்கும், அங்கு குடியேறிய தொழிலதிபர்களுக்கும் சண்டை வந்தது. இந்த யுத்தம் 1847&ல் துவங்கியது. அதுதான் இப்போது இந்தியாவில் தொடங்கியிருக்கிறது என்று நினைப்பதற்கும் எனக்கும் தொடர்பில்லை.
ஒரு வல்லரசாக அல்லாமல் வேறெந்த விதமாகவும் தன்னால் இருக்க முடியாது என்று முழு விழிப்புணர்வுடன் யோசித்து முடிவு செய்து, அதற்காகவே தன்னைத் தயார்படுத்திக்கொண்ட ஒரு தேசம் அமெரிக்கா. இதை பல போர்களின் மூலமாக உறுதிப்படுத்திக்கொண்டார்கள். அமெரிக்கா மேற்கொண்ட ஒவ்வொரு போருமே அதன் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கே உதவி செய்ததது. உலக யுத்த காலத்தில் நடந்தது மாதிரி நேரடி பொருளாதார வளர்ச்சி. மற்ற நாடுகளுக்கு போர்க்காலத்தில் ஆயுத, பண, பொருள் உதவிகள் செய்து பின்னால் வட்டியுடன் வசூலிப்பது அல்லது பின்னால் வளைகுடா நாடுகளில் அமைந்தது மாதிரி மறைமுக பொருளாதார உயர்வு. அதாவது முதலில் முதலீடு செய்து போரைத் தொடக்கி, இருக்கும் ஆட்சியை ஒழிப்பது, பிறகு தனது கைப்பாவையாக அங்கே ஒரு அரசை நியமிப்பது. அதற்குப் பிறகு அங்கே வர்த்தக ஒப்பந்தம் போட்டுக்கொள்வது. இந்த முயற்சியில் க்யூபா, வியட்நாம் இரண்டில் மட்டுமே அவர்கள் தோல்வி அடைந்தார்கள்.
இதுதான் அமெரிக்காவின் சரித்திர சுருக்கம். இனி அவர்கள் சொல்வதுதான் நமக்கு வேதம். அதனால் அடுத்த அதிபர் யார் என்பதை கைகட்டி, வாய் பொத்தி, நவம்பர் 6-ம் தேதி வரை ஒரு தேசப்பற்றோடு கவனிப்போம். இனி நாம் பழுப்பு அமெரிக்கர்கள் என்கிற உணர்வோடு.

                           நன்றி: மீடியா வாய்ஸ் தமிழ் வார இதழ் 3.11.2012

Oct 26, 2012

இனி பணம் பத்தும் செய்யும்

Oct 24, 2012