Apr 5, 2011

`பெரியாரை' ஏன் கைது செய்யவில்லை ? கருணாநிதி கேள்வி

தேர்தல் களத்தில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்குள் நான்கு நாட்கள் ஒடிவிட்டது ?திமுக பிரச்சாரத்தில் பல காமெடிகள். தன்னை விட யாரும் எதிலும் முந்திவிடக்கூடாது என்பதற்காக, எதையும் செய்யக்கூடியவர் கலைஞர் கருணாநிதி.
தன் கட்சிக்காக பிரசாரம் செய்யும் காமெடியன் வடிவேலுவிற்க்கு நிறைய விளம்பரங்கள் கிடைக்கிறது. எப்போதுமே நல்ல ரேட்டிங் உள்ளவர்களைத்தான் சன் தொலைக்காட்சி பயன்படுத்திக்கொள்ளும். உடனே சன் தொலைக்காட்சி `வடிவேலுவுடன் ஒரு நாள்’ என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிப்பரப்பியது. தன்னைவிட வடிவேலுவிற்கு அதிக புகழா? தாங்க முடியவில்லை கருணாநிதியால். உடனே அவரும் காமெடி செய்ய கிளம்பிவிட்டார்.


திமுகவின் முதல் பிரசாரக் கூட்டம் திருச்சியில். அந்த மாவட்டத்தில் குளித்தலையில் தான் 1957ம் ஆண்டு போட்டியிட்டதையும், அப்போது அந்த பகுதியில் தனக்கிருந்த நண்பர்களையும் பட்டியிலிட்டார். அவர் நன்றி மறக்காதவராம். அன்று இவரை முதன் முதலாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த நண்பர்களின் குடும்ப நிலை இந்நாளில் எப்படி இருக்கிறது என்பதையும் உதாரணத்திற்கு சொல்லி இருக்கலாம். ஆனால் அடுத்த நாள் ஒரு ஆங்கில நாளிதழ் ஒரு மூதாட்டியின் படத்தை வெளியிட்டிருந்தது. அந்த மூதாட்டியின் கணவர்தான் குளித்தலையில் கருணாநிதிக்காக தேர்தலுக்கு பணம் கட்டியவர். அவர் வீட்டிலிருந்தபடிதான் அந்த பிரச்சாரத்தை நடத்தினார். அந்த மூதாட்டி வறுமையான தோற்றத்தோடு, பழைய் ஆதாரங்களோடு சர்க்யூட் ஹவுசுக்கு கருணாநிதியை பார்க்கப் போனார். அவர் விரட்டியடிக்கப்பட்ட கதை வெளியாகியிருந்தது.


இந்த தாய்க்குல செண்டிமெண்ட் காட்சி ஒருபுறமிருக்க, அங்கேதான் அவருடைய தேர்தல் பிரசார முதல் காமெடி. `தேர்தல் கமிஷன் எதிர்க்கட்சியை ஆட்சியிலே உட்கார பாடுபடுகிறது’ என்கிற நகைச்சுவையை ஆரம்பித்தார். உடனே அதற்கடுத்த நாட்களிலே தொல். திருமாவளவன் தன் பங்கிற்கு ` அதிமுக அணியில் இன்னொரு கட்சி கூட்டணி சேர்ந்திருக்கிறது. அந்தக் கட்சியின் பெயர் தேர்தல் கமிஷன்’ என்றார்.


அதற்குப் பிறகு கூட்டங்களில், தமிழகத்தில் தேர்தல் கமிஷனால் எமெர்ஜென்ஸி கட்டவிழ்த்து விடப்பட்டிருகிறது என்றார். கூடவே எமெர்ஜென்ஸி காலத்து கொடுமைகளை எப்படி தன் மகன், மருமகன் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். இந்த எமெர்ஜென்ஸி கொடுமைகளை 1975ல் நடத்தியவர் அன்றைய காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி. அவர் இதை ஈரோடு, சேலம் கூட்டங்களில் சொன்னார். அந்தக் கூட்டங்களில் அவருக்கு பக்கத்தில் இருந்தபடி அமைதியாக முன்னாள், இந்நாள் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர்களான .ஈ.வி.கே.எஸ். இளங்க்கோவனும், தங்கபாலுவும் கேட்டுக்கொண்டுதானிருந்தார்கள்.


தமிழக மக்கள் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளால் மகிழ்ந்து போயிருக்கிறார்கள். எல்லாக் கட்சிகளுமே தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை பாராட்டுகிறார்கள். திமுக மட்டும்தான் ஒப்பாரி வைக்கிறது. இந்த ஒப்பாரி நாடகத்தை கேளிக்கையாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..


தன் காரியம் நடக்க வேண்டுமென்றால் யாரையும் எவரையும் விமர்சனம் செய்யத் தயங்காதவர் கருணாநிதி. அவர் மூச்சுக்கு முந்நூறு முறை பெரியாரையும், அண்ணாவையும் துணைக்கு இழத்துக் கொள்வார். அந்தப் பெரியாரை மட்டும் கருணாநிதி விட்டா வைத்தார்?


பெரியாரின் திகவிலிருந்து திமுக பிரிந்துவிட்டது. 1966ம் வருடம் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினர். அப்போது சட்டமன்றத்திலே மதியழகன் போலீஸ் மானியத்தின் மீது ஒரு வெட்டுத் தீர்மானம் கொண்டு வருகிறார். அப்போது தமிழகத்தின் முதலமைச்சர் காங்கிரஸ் கட்சியின் திரு எம்.பக்தவத்சலம். அந்த வெட்டு தீர்மானத்தின் மீது 11.03.1966 அன்று சட்டமன்றத்திலே பேசியதன் சுருக்கம் இதுதான் :


நண்பர் திரு மதியழகன் அவர்கள் பாதுகாப்புச் சட்டதைப் பற்றி சொன்னார்கள். பத்திரிகைகள் மீது பாதுகாப்புச் சட்டம் – எழதினால், பேசினால் – முரசொலி, மாலைமணி ஆகியவற்றின் மீது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. நான் ஒரு பத்திரிகையில் வந்த வாசகத்தை அப்படியே படித்துக் காட்டுகிறேன். அதைப் படித்த பிறகு கனம் அமைச்சர் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வருமோ தெரியாது. தலைப்பு “ கம்யூனிஸ்டுகளும் நானும்’ என்பதாகும்.


“ நாளைக்கு ரஷ்யாகாரன் இந்த நாட்டின் மீது படையெடுத்தால் நான் ரஷ்யக்காரனை ஆதரித்து சுட்டுக் கொல்லப்படவோ அல்லது இந்நட்டுச் சிறையில் இருக்கவோதான் தயாராய் இருப்பேனே யொழிய காங்கிரஸ் கட்சிக்கு இந்திய தேசாபிமானத்துக்கு அடிமையாக ஒரு நிமிஷமும் இருக்க சம்மதிக்க மாட்டேன். இத்தனைக்கும் நான் ஒன்பதுமாற்றுக் கம்யூனிசக்க்காரனுமல்ல ”. இத்தனையும் நான் எழதியிருந்தால் கருணாநிதியை பாளையங்கோட்டைக்கு அல்ல, பாலவனக் கோட்டைக்கே அனுப்பியிருப்பார்கள். திராவிட முன்னேற்றாக் கழகத்தினர் அத்தனைபேர்களையும் கண்காணாத தேசத்திற்கு அனுப்பியிருப்பார்கள்.எழதியது யார் ? “ நாளைக்கு ரஷ்யாகாரன் படையெடுத்தால், நான் ரஷ்யாக்காரனை ஆதரித்து சுட்டுக்க் கொல்லப்படவோ அல்லது இந்நாட்டுச் சிறையில் இருக்கவே விரும்புவேனே தவிர இந்திய தேசாபிமானத்துக்கு அடிமையாக ஒரு நிமிஷமும் இருக்கச் சம்மதிக்க மாட்டேன்’ என்று எழதியவர் – எனக்குச் சொல்ல வெட்கமாக இருக்கிறது – இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்ற பெரியார் திரு ஈ.வெ.ரா அவர்கள் 5.2.1966 “விடுதலை’ பத்திரிகையில் எழதியிருக்கிறார். பாதுகாப்புச் சட்டம் எங்கே போயிற்று ? பாதுகாப்புச் சட்டம் பெரியார் என்ற பெயரைக் கண்டவுடனே மழங்கிவிட்டதா ? அவர் காலடியில் மண்டியிட்டுவிட்டதா ?


– தேர்தலில் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற நப்பாசை காரணமாகத்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் விடப்படிருக்கிறாதே தவிர வேறில்லை என்று பதில் கூறியிருக்கலாம். கேவலம் சில பல வோட்டுகளுக்காக இந்தை நிலைக்குப் போய்விட்டார்களே என்று கவலை தெரிவித்து இதற்கு மேல் பேச விரும்பாமல் என் உரையை முடிக்கிறேன் வணக்கம்.


இதுதான் கருணாநிதியின் சட்டமன்ற உரையின் சாராம்சம். இப்போது கலைஞர் சட்டமன்ற உரைகள் அனைத்தும் 11 தொகுப்புகளாக வெளிவந்திருக்கிறது. அதில் 3 வது தொகுப்பில் 57ம் பக்கத்தில்தான் பெரியாரின் பரம சீட்ர் கருணாநிதி பேசியது பதிவாகியிருக்கிறது.