Jul 30, 2008

`ஆமாம். நம்மால் முடியும்!


எனது முப்பதாண்டு பத்திரிகை அனுபவத்தில் பல முக்கிய பிரமுகர்களை சந்திக்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்கிற செளகரியமே பல தரப்பட்ட மனிதர்களை சந்தித்து அவர்களிடம் இருக்கும் குறையை தவிர்த்து நிறைகளை எடுத்துக்கொள்ள முடியும். அவர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு அவர்களுக்குள்ள தனித்தன்மை என்ன என்பதை பார்க்க முடியும். அரசியல் தலைவர்களிடம் நாம் முரண்படலாம். கருத்து மாறுபாடு கொள்ளலாம். அவர்களின் பொது வாழ்க்கையின் தூய்மையை கூட நாம் சந்தேகப்படலாம். அந்த சந்தேகம் கூட அவர்கள் ஒரு பெரிய தகுதிக்கு வந்த பிறகு தான் ஏற்படும்.ஆனால் பலரிடம் பல விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன்.

மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவை நான் முதன் முதலில் சந்தித்தது 1982ம் வருடம். அப்போது திருச்செந்தூர் முருகனின் வேல் திருடு போய் அது தொடர்பாக அறநிலையத்துறையை சேர்ந்த சுப்ரமணிய பிள்ளை மர்மமான முறையில் இறந்து போனார். அப்போது தமிழகத்தின் முதல்வர் எம்.ஜி.ஆர். அறநிலையத்துறை அமைச்சர் இன்று எல்லா விழாக்களிலும் கலைஞர் கருணாநிதியோடு இருக்கும் ஆர்.எம். வீரப்பன்.

இதை திமுக பெரிய விவகாரமாக்கியது. திமுக தலைவர் கருணாநிதி, மதுரையிலிருந்து திருச்செந்தூர்வரை நடைபயணம் போனார். அப்போது நான் ஒரு பகுதி நேர நிருபர். அப்போது நண்பர் ஞானி தீம்தரிகிட பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தார். அவருடைய பத்திரிகைக்காக நானும் பத்திரிகையாளனாக அந்த நடை பயணத்தில் கலந்து கொண்டேன். அப்போது கருணாநிதி நடந்து போகிற பாதையில் சிறு கல் இருந்தால், அதை அவருக்கு முன்னால் ஒடிப்போய் அதை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார் ஒருவர். ரோஸ் கலர் சட்டை அதை தன்னுடைய கறுப்பு பேண்டுக்குள் தள்ளியிருந்தார். நல்ல உயரம். மிடுக்கான தோற்றம். விசாரித்தேன் அவர்தான் வை.கோபால்சாமி,(அப்போது வைகோ அல்ல)வழக்கறிஞர். மாநிலங்களவை உறுப்பினர். கலிங்கப்பட்டிக்காரர் என்றார்கள்.

அவரை கவனிக்கத்துவங்கினேன். பின்னார் 1983ம் ஆண்டு விகடனில் சேர்ந்த போது அப்போது நான் ஆனந்த விகடனில் சாண்ட்விச் என்றொரு பகுதி எழதிக்கொண்டிருந்தேன். அதாவது அரசியல் தலைவர்களில் அரசியல் இல்லாத இன்னோரு முகம்.அப்போதுதான் இன்றைய வைகோ எத்தனை ஆழ்ந்து படிக்கக்கூடியவர் என்பதை புரிந்து கொண்டேன். நாடாளுமன்றத்தில் அவர் முதல் முதலாக நுழைந்து போது, அவருக்கு கிடைத்த நண்பர்கள் பிலுமோடி,இந்திரஜித குபதா, இவர் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, ஜோதிர்மாய் பாசு, (மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு அல்ல) இவரும் மார்க்ஸிஸ்ட கட்சி உறுப்பினர். மாநிலங்களவையின் மேன்மையையும், இதை கற்றவர்கள் சபை என்று சொல்வார்கள் (அன்றைக்கு அப்படித்தானிருந்தது மாநிலங்களவை) மாநிலங்களவையில் பேச ஒரு உறுப்பினர் எப்படி தன்னை தயார் செய்து கொள்ள வேண்டுமென்று வைகோவிற்கு சொன்ன்வர். இதை வைகோவே என்னிடத்தில் 1986ல் டெல்லியில் நான் அவருடைய 2, மீனா பாக் வீட்டில் இருந்தபோது சொல்லியிருக்கிறார்.விருந்தோம்பல், நாடாளுமன்ற கூட்டத்திற்கு போகுமுன் ஒரு உறுப்பினர் தன்னை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டுமென்பதையும் அவரிடம் தெரிந்து கொண்டேன்.

அடுத்தநாள் மாநிலங்களவை கூட்டத்திற்கு போகுமுன், விடியற்காலை நான்கு மணிவரையில் குறிப்பெடுப்பார். கடுமையான உழைப்பாளி. பிறகு அதே 1986ம் ஆண்டில் எங்கள் ஊர் தென்திருப்பேரையில் எங்கள் பெருமாள் கோயில் நகைகள் களவு போயிற்கு. அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் முதல் முதலாக நெல்லை இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதற்கு முன்பு அவர் எம்.எல்.சி.யாகி அமைச்சரானவர். அப்போது தமிழகத்தில் மேல்சபை இருந்தது. பின்ன்ர் எம்.ஜிஆர். வெண்ணிற ஆடை நிர்மலாவை மேல்சபை உறுப்பினராக்க நினைத்தார். அது முடியாமல் போகவே மேல்சபையையே எம்.ஜி.ஆர் கலைத்தார்.அதனால் ஆர்.எம்.வீ. மந்திரி பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் இடைத்தேர்தலில் நிற்க வேண்டிய கட்டாயம். இந்த சமயத்தில் நான் ஜீனியர் விகடன் நிருபராக நெல்லையில் முகாமிட்டிருந்தேன். அப்போதுதான் எங்கள் ஊரில் நகை கொள்ளை.

இதை பெரிதுபடுத்தாவிட்டால் ஏதோ ஒரு சின்ன கிராமத்தில் நடந்த ஒரு சாதாரண திருட்டாக இந்த சம்பவம் புதையுண்டு போயிருக்கும். ஒரு விடியற்காலை நேரத்தில், நெல்லையிலிருந்து திமுகவின் முக்கிய தலைவரான வைகோவை தென்திருப்பேரை அழைத்துப்போனேன்.பிறகு விவகாரம் பூதாகரமெடுத்தது. பிறகு வைகோ தேர்தல் பிரசாரத்திற்கு வந்த கருணாநிதியை தென் திருப்பேரை அழைத்து வந்தார்.பிறகு தென்ருப்பேரை செய்திகளில் இருந்தது. அந்த வழக்கு நடக்கும்போதெல்லாம், ஊள்ளூர் நாளிதழகள் அந்த செய்தியை தவிர்க்க முடியாமல் போனது.

இப்படித்தான் எனக்கு அவருக்கும் பழக்கம். நான் அவரோடு மேடையிலேயே பெரியார் திடலில் முரண்பட்டிருக்கிறேன். அவர் ரகசிய்மாக யாழ்ப்பாணம் பயணம் போனதை முதலில் உலகிற்கு சொன்ன பெருமை ஜீவிக்கும், எனக்கு உண்டு அது வேறு விஷயம்.வைகோ எழதிய பல புத்தகங்களை நான் இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அவர் 19 மாதங்கள் `பொடா' சட்டத்திலிருந்தபோது தனது கட்சி பத்திரிகையான சங்கொலியில் தினமும் எழதி வந்தார். பின்ன்ர் அதுவே `சிறையில் விரிந்த மலர்கள்' என்கிற பெயரில் சுமார் 682 பக்க புத்தகமாக வந்தது.அது உண்மையிலேயே ஒரு சரித்திர பொக்கிஷம் எத்தனை தகவல்கள். நேருவின் `GLIMPSES OF THE WORLD HISTROY' தான் இவருக்கு உந்துதலாக இருந்திருக்க வேண்டும்.நேதாஜியைப் பற்றி அத்தனை குறிப்புகள் ஒரே புத்தக்கத்தில் வேறு எங்காவது கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதே போல் ஆபிரகாம் லிங்கன், கரிபால்டி இப்படி பல விஷயங்கள்.

ஒரு 800 பக்க ஆங்கில நாவலை தமிழில் சுருக்குவது என்பது மிகவும் கடினம். இர்விங் வாலஸின் மிகச் சிறந்த நாவல் `தி மேன்' ஒரு கறுப்பர் அமெரிக்காவின் ஜனாதிபாதியானால் என்ன நடக்கும் எனப்துதான் கரு. அதை தன்னுடைய புத்தகத்தில் 17 பக்கத்தில் சுருக்கியிருந்தார் வைகோ. அருமையான மொழிபெயர்ப்பு. காரணம் உலகத்திலேயே அதிகமான இன கொடுமைகளுக்கு ஆளானவர்கள் கறுப்பர்கள் தான் என்பதில் வைகோவிற்கு தீவிர உறுதி உண்டு.

இப்படி அவர்கள் மீது ஆழ்ந்த பற்று கொண்ட வைகோ, அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவை சந்தித்துவிட்டு தாயகம் திரும்பியதும் அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

(தொடரும்)

Jul 23, 2008

கணித `பாட'கர், ஒரு காலப்பெட்டகம்


தங்களின் வலைப் பதிவில் என் குருநாதர் திரு டி.எம்.எஸ். அவர்களைப் பற்றி எழதியிருந்ததை படித்தேன்.. நன்றி பெருக்கோடு, ஆனந்த கண்ணீரோடு உங்களுக்கு எழதுகிறேன். அவரைப் பற்றி எழதியதற்காக உங்களுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

நான் தற்போது சென்னை விப்ரோவில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு இருவர் காரணம். ஒன்று என் தாய், இரண்டாவது என் குருநாதர் திரு டி,எம்.எஸ்.இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும் கொடுமை என்பார்கள். அந்தக் கொடுமையை இளமையில் அனுபவித்தவன் நான். நான் மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகன், நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேரன்.
எனக்கு முன்றரை வயது இருக்கும்போது என் தந்தையை இழந்தேன். என் தாயின் அரவணைப்பில் வளர்ந்தேன்.

நான் எட்டாவது வகுப்பு படிக்கும்போதுதான் எனக்கு படிப்பில் நாட்டம் ஏற்பட்டது. கலைமகளின் அருள் என் மீது படர ஆரம்பித்தது. நன்கு படிக்க துவங்கினேன். எப்போதுமே நான் படிப்பில் முன்னேற வேண்டுமென்கிற வெறி என் தாய்க்கு இருந்தது.. பத்தாம் வகுப்பு வரை நான் மேற்குமாம்பலம் அஞ்சுகம் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில் 447/500 எடுத்தேன். இந்த மதிப்பெண் எனக்கு அகோபில மடம் பள்ளியில் இடம் வாங்கி கொடுத்தது. அப்போது அங்கு நான் சந்தித்த முதல் மனிதர்தான் என் குருநாதர் திரு டி.எம்.எஸ். எனக்கு உந்துசகதியாகவும், கிரியாஊக்கியாகவும் அவர் விளங்கினார். அவர் கொடுத்த உற்சாகத்தில் எனக்கு படிப்பில் முழ ஈடுபாடு வந்தது. கல்வியை நேசிக்க துவங்கினேன்.

வீட்டிலோ கடும் பொருளாதார நெருக்கடி. என்னை படிக்க வைக்க என் தாய் போராடினார். என் குரு எனக்கு ஸ்காலர்ஷிப் வாங்கித்தந்தார். என் நண்பர்கள் அசோக்குமார்,செந்தில்,பிரஸாத்,செந்தில்குமார் வீரமணி, அசோக் சுகுமார், விஷ்ணு, இந்த ஆறு பேரும் முருகப் பெருமானை காத்த ஆறு கார்த்திகை பெண்களை போல என்னைக் காத்தார்கள். பள்ஸ் டூவில் 96% சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன்.பொறியற் கல்லூரியில் படிக்க நினைத்தேன். வறுமையோ துரத்தியது. பிலானியிலுள்ள பிர்லா இன்ஸ்டிட்டியூட்டின் சேர்ந்து இரண்டு வருடங்கள் படித்தேன். சொந்த காரணங்களினால் படிப்பை தொடர முடியவில்லை.என்னை நானே நொந்து கொண்டேன். சொந்த சகோதர, சகோதரிகளும், நெருங்கிய நண்பர்களும் கூட என்னை புறக்கணித்தார்கள். இந்த சோதனையான காலங்களிலெல்லாம் என்க்கு உற்சாகமூட்டியவர்கள், என் தாயும், குருவும்தான்.

அந்த கால கட்டத்தில் ஒரு ஸ்கீரீன் பிரிண்டிங் நிறுவனத்தில் 1,500 ரூபாய சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலை வருபவர்களுக்கு டீ வாங்கிக்கொடுப்பது.நரக வேதனையென்றாலும், என் நிலையை உணர்ந்து அதையும் ஏற்றுக்கொண்டேன். பிறகு விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் சேர்ந்தேன். குடும்பத்தினர் நான் வேலைக்கு போய் தாய்க்கு உதவியாக இருக்க வேண்டுமென்றார்கள். ஆனால் என் தாயாரோ பிடிவாதமாக நான் படிக்க வேண்டுமென்றார்.

அந்த தாயின் லட்சியத்தை நிறைவேற்ற பட்டப்படிப்பில் 96.5% வாங்கி தங்கப் பதக்கம் வென்றேன்.அப்போதுதான் விப்ரோ பெங்களூரிலிருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. என்னுடன் என் தாயும் வந்திருந்தார். தங்குவதற்கு கூட வசதி இல்லை. அங்கிருந்த உறவினர்கள் என்னை தன் போல் பார்த்துக்கொண்டதை இன்று நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். அங்கேயே முதலில் HR பிரிவில் வேலை கிடைத்தது. பிறகு சாப்ட்வேர் பிரிவுக்கு வ்ந்தேன். அந்தப்பிரிவில் வாரம் ஐந்து நாட்கள் வேலை, இரண்டு நாட்கள் அங்கேயே எம்.எஸ்(சாப்ட்வேர்) படிப்பு. இது துவங்கியது 2004ம் ஆண்டு. வாழ்க்கையில் வசந்தம் வீசத்துவங்கியபோது என் தாய் 2005 மே 5ந்தேதி என் கண்முன்னே மாரடைப்பினால் காலமானார்கள்.பலனை கூட அனுபவிக்காமல் அந்த புண்ணியவதி போய் சேர்ந்தது இன்னும் என்னை வாட்டிக்கொண்டிருக்கிறது.

தாயின் அரவணைப்பு, தந்தையின் கண்டிப்பு. எனக்கு தாயின் அரவணைப்பு கிடைத்தது, நான் என் தந்தையை கண்டது என் நினைவிலில்லை. ஆனால் எனக்கு தந்தையாக இருந்து என்னை அரவணைத்துக்கொண்டவர் என் குரு டி.எம்.எஸ். ஒரு ஆசானாக, தந்தையாக, ஒரு நடமாடும் தெய்வமாக இருக்கிறார் திரு டி.எம்.எஸ். அவர் என்னைப் போல பல மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தவர். அவர் மாணவர்களுக்கு செய்கிற பல உதவிகளை அவர் அனுமதியில்லாமல் சொல்ல முடியாது. அவர் கணித `பாட' கர் மட்டுமல்ல், அவர் ஒரு கால பெட்டகம்.

இப்படிக்கு

மதன் மோகன்

Jul 3, 2008

கணித `பாட'கர் டி.எம்.எஸ்.



`கவிஞன் நானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்'

என்று தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டார் கவிஞர் கண்ணதாசன்.சென்னையில் ஒரு மனிதக் கணிதம், பல காவிய காலங்களை உருவாக்கப்போகும் அடுத்த தலைமுறையை சரியாக செப்பனிட்டுக்கொண்டிருக்கிறது.

அவர் சென்னை மேற்கு மாம்பலம் அகோபில மடம் ஹையர் செகண்டரி பள்ளியின் தலைமையாசிரியர் டி.எம்.எஸ்.இவரது இரண்டு கண்களில் ஒரு கண் கணிதம். இன்னொரு கண் கருணை.

பொதுவாகவே எனக்கு இந்த ஆசிரிய இனத்தின் மீது கோபமுண்டு.உண்மையில் அவர்கள் ஆசிரியர்களாக இல்லாமல், புத்தகத்திற்கும் மாணவர்களுக்குமிடையே ஒரு `மொழிபெயர்ப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால் பல மாணவர்களால் பாடத்தில் லயிக்க முடிவதில்லை. பல வகுப்புகளில் மாணவர்கள் தூங்குவதற்கு இதுவும் ஒரு காரணம்.அப்பொதெல்லாம் எனக்கு அச்சு இயந்திரங்களை கண்டு பிடித்தவன் மீது கோபம் வரும். `கற்றலிற் கேட்டலே நன்று' என்கிற குரு குல கல்வி முறைக்கே நாம் போய் விடலாமோ என்று தோன்றும்.

ஆனால் சில ஆசிரியர்கள் தான் இந்த எண்ணத்தை மாற்றுகிறார்கள். உதாரணமாக எனக்கு திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒரு தமிழ் ஆசிரியர் இருந்தார். வி.வி.நடராஜன். இன்றைக்கு எனக்கும் தமிழில் எழத துணிச்சல் உண்டென்றால் அதற்கு வித்திட்டவர் அவர். எங்கள் உறவினர் ஒருவர் உண்டு. அவர் பெயர் கி. குழைக்காதன். அவருடைய தமிழ் போதனையைப் பற்றி பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரை எல்லோரும் ஆசிரியர் கி.கு என்றுதான் அழைப்பார்கள்.அவரது பேத்தி ஜென்னிக்கு தமிழ் மீது இருந்த பயத்தைப் போக்கி அதை ரசிக்க வைத்தவர். அந்த வரிசையில் என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த மாண்புமிகு மனிதர் இந்த கணித டி.எம்.எஸ்.

`கணித சூத்திரங்களை மனப்பாடம் செய்தால் உருப்படவே முடியாது' என்பது இவரது வாதம். அதன் அடிப்படையை புரிய வைப்பார்.இவரது பள்ளி வாழ்க்கை தவிர, ஏராளமான குழந்தைகளுக்கு அதுவும் ப்ளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி. `ஏழை நான் ஆனால் படிக்க ஆசை' என்று இவர் எதிரே நின்று சொன்னால் போதும். அப்ப்டியே அரவணைத்துக்கொள்வார்.

இவருக்குள்ள அலாதியான வெறி தான் சொல்லிக்கொடுக்கும் கணித முறை ஏழை குழந்தைகளை சென்றடைய வேண்டும். வசதி படைத்த குழந்தைகளுக்கு பல வாய்ப்புகள் வசதி மூலமாக கிடைக்கும். அந்த ஏழைக் குழந்தைக்குள் இருக்கும் கணித திறனை யார் நீருற்றி வளர்க்கப்போகிறார்கள்' என்பதைத்தான் தூக்கத்திலும் புலம்பிக்கொண்டிர்ருப்பார்.

மேற்கு மாம்பலம் பகுதிக்கு இவரை ஒரு `சூப்பர் ஸ்டார்' என்றே சொல்லலாம்.அவருடன் நடந்து போனால், பல லட்ச ரூபாய் காரில் போகிறவர் கூட நிறுத்தி வணக்கம் சொல்லிவிட்டு போவார். காரணம் அவர் இவருடைய பழைய மாணவராக இருப்பார். அந்த மாணவரின் பூர்விக வாழ்க்கை குடிசையில் கூட துவங்கியிருக்கும்.

ஒரு சிறந்த உதாரணம். இவ்ரது வீட்டில் பாத்திரங்கள் தேய்த்து, துணி தோய்த்து கொடுக்கும் பெண் ஆண்டாள். பல வருடங்களாக இவரது வீட்டில் பணி புரிகிறார்.அந்தப் பெண் இவர் வீட்டில் வேலை செய்ய வந்தபோது அவரது மகனுக்கு சிறு வயது. விளையாட்டுத்தனமாக இருந்த அந்த பிள்ளை இன்று அமெரிக்காவில்.தன் தாய்க்கு மேற்கு மாம்பலம் பகுதியிலேயே பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள வீடு வாங்கிக்கொடுத்திருக்கிறான். ஆனால் ஆண்டாள் அம்மாள் இன்றும் வந்து இவர் வீட்டில் வந்து பணி புரிகிறார்.` எனக்கு கணிதம் மட்டுமா கொடுத்தார், படிக்க காசுமல்லவா கொடுத்தார்' என்கிறான் அமெரிக்காவில் உள்ள அந்தப் பிள்ளை.

தான் வாங்கும் சம்பள காசுக்காக கற்றுக்கொடுப்பதென்பது வேறு. கல்வியினால் ஒரு தலைமுறை தழைக்க வேண்டுமென்று ஒரு யாகமாக இந்தப் புனிதப் பணியை செய்பவர்கள் சிலர்.அதில் இவரும் ஒருவர். என்னுடைய வலைப்பதிவில் ஒரு விளம்பரம் இருக்கும். அந்த புத்தகத்திற்கு சொந்தக்காரர் டி.எம். எஸ். இந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர் மாணவர்களுக்காக ஒரு கணித கையேடு த்யாரித்தார். அதாவது மார்ச் 4 ந்தேதி ப்ள்ஸ் டூ பரீட்ச்சை எழதப்போகும் மாணவர்களுக்காக. புத்தகத்தில் விலை 70 ரூபாய். புத்தகம் தயாரானவுடம் யோசித்தார். இதை ஏழை மாணவர்கள் எப்படி வாங்குவார்கள்? உடனே வசதியாக இருக்கும் தன் மாணவக் கண்மணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். அச்சடித்த 5,000 புத்தகங்களும் நன்கொடை மூலமாக ஏழைப் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யபட்டது.

இதில் இன்னொரு செய்தி. எந்த மாதிரியான கேள்விகள் வரும் என்று இவர் சொல்லியிருந்தாரோ அதுவே பரீட்சையிலும் வந்தது. பல பள்ளி தலைமை ஆசிரியர்கள் இப்போது தமிழகம் முழவதுமிருந்து கடிதங்கள் எழதுகிறார்கள் இலவச புத்தகம் கேட்டு!இப்போது அந்த மகத்தான பணியிலிருக்கிறார்.` நான் பணக்காரனாக இருந்திருந்தால், என் செலவிலேயே தமிழ்கம் முழவதும், தமிழ் மீடிய மாணவர்களுக்கும் கூட கொடுப்பேன். அதனால் இந்த வருடம் ஆங்கில மீடியத்துக்கும் மட்டும் நன்கொடை கேட்க போகிறேன். கணிதம் மேல் மோகம் கொண்ட `கர்ண'ர்கள் கொடுக்கும் நிதி குவிந்தால் தமிழக்கும் கொண்டு வ்ருவேன்' என்கிறார். ஒரு ஐந்து புத்தகத்தின் விலையை கொடுத்தால் கூட அது பெரிய நன்கொடை என்கிறார்.

ஜாதி, மத, இன வேறுபாடில்லாமல் இந்த `ஆரியர்' செய்யும் பணி இன்றைய காலம் கவனிக்காமல் போகலாம். ஆனால் பாடகர் டி.எம்.எஸ்ஸின் குரலில் ` நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற' என்று பல லட்சம் உள்ளங்கள் பாடிக்கொண்டேயிருக்கும்.